Monday, 28 April 2014

சமாளிக்க முடியுமா சரவணனால்?

அந்த நிறுவனத்தின் தலைமையகம் டெல்லியில் உள்ளது. அவர்கள் தங்களிடம் சேர்வதற்கான அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கச் சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேர்முகத் தேர்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
பத்தரை மணிக்கு நேர்முகத் தேர்வு தொடங்குகிறது என்று சரவணனுக்குத் தெரிவித்திருந்தார்கள். பத்து நிமிடம் தாமதமாக வந்து சேர்ந்த சரவணன் இன்னும் யாரையும் கூப்பிடவில்லை என்ற தகவலை அறிந்ததும் சந்தோஷம் அடைகிறான்.
வரவேற்பறையில் உட்காரச் சொல்கிறார்கள். காலி நாற்காலியில் உட்கார்ந்த சரவணன் பக்கத்தில் இருப்பவரிடம் பேசத் தொடங்குகிறான்.
“நீங்க சென்னைதானா?”
“இல்லை. கோயம்புத்தூர்”.
“கோயமுத்தூரிலிருந்தா வறீங்க? இவங்க அங்கேயேகூட நேர்முகத் தேர்வை நடத்தி இருக்கலாமே. தவிர இவங்க ஒழுங்கா நேர்முகத் தேர்வு நடத்தி நம்மைத் தேர்ந்தெடுக்கப் போறாங்களா என்ன?”
சரவணனுக்கு இரு தரப்பிலும் உட்கார்ந்திருந்தவர்கள் திடுக்கிட்டு அவனைப் பார்க்கிறார்கள். “என்ன சொல்றீங்க?” எனக் கேட்கிறார்கள்.
“நாற்பத்தைந்து காலி இடங்கள் இருப்பதாகச் சொன்னங்க இல்லையா?”.
“நாற்பத்தி ஏழு” என்று திருத்துகிறார் நேர்முகத் தேர்வுக்கு வந்த இன்னொருவர்.
“சரி இருக்கட்டும். இதெல்லாம் ஐ வாஷ். ஏற்கனவே அவங்களுக்குத் தெரிஞ்ச முப்பது பேரைத் தேர்ந்தெடுத்துட்டாங்க. பாக்கி இடங்களுக்காகத்தான் நாம முட்டி மோதப் போகிறோம்.”
இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவருக்குக் கண்களில் நீர் ததும்பி விட்டது. “இந்த வேலையை நான் மலைபோல நம்பிட்டிருக்கேன்” என்கிறார்.
“கவலைப்படாதீங்க. எனக்குக் கொஞ்சம் டிப்ஸ் கிடைச்சிருக்கு. நேர்முகத் தேர்விலே என்ன மாதிரி கேள்வி கேட்கப் போறாங்கன்னு தகவல் கிடைச்சிருக்கு”.
அடுத்த கணம் சரவணனை நோக்கிப் பலரும் வரத் தொடங்குகிறார்கள். ஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்த வேறு சிலருக்குச் சைகை காட்ட, சிறிது நேரத்தில் சரவணனைச் சுற்றிப் பதினாறு பேர்!
“ரொம்ப டெக்னிகலாத்தான் கேட்பாங்களாம். சப்ஜக்டிலே இருந்துதான் கேள்விகளாம்”.
‘அடடா, சப்ஜக்ட் புத்தகத்தை எடுத்து வந்திருக்கலாமே. வேகமாக ஒரு ரிவிஷன் நடத்தியிருக்கலாமே’ என்று பலர் பதறுகின்றனர். புத்தகத்தை எடுத்து வந்திருந்த சிலரைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்கள்.
இதற்குள் “மிஸ்டர் சரவணன் யாரு? உள்ளே போகலாம்” என்று கூறுகிறார் அங்கு வந்த நிறுவனப் பிரதிநிதி.
‘அடடா, முதல் ஆளே நாமதானே?’ என்று முணுமுணுத்தபடி நேர்முகத் தேர்வு நடைபெறும் அறைக்குள் நுழைந்தவனுக்குக் கடும் அதிர்ச்சி.
உள்ளே சிசிடிவி கேமராக்கள் காட்சியளித்தன. அறைக்கு வெளியே நடக்கும் நிகழ்வுகளை உள்ளிருந்தே பார்க்க முடியும். “வெளியில் நான் உட்கார்ந்த பகுதியைக்கூட உள்ளிருந்தே இவர்களால் பார்த்திருக்க முடியுமே. நாம் பேசியதெல்லாம் கேட்டு இவர்கள் என்ன நினைத்திருப்பார்கள்!’ என்று தவிக்கிறான். பிறகு வேறொரு விவரம் நினைவுக்கு வந்ததும், அவன் முகத்தில் மலர்ச்சி உண்டாகிறது.
தேர்வாளர் 1 – வெல்கம் மிஸ்டர் சரவணன்... உட்காருங்க... நேர்முகத் தேர்வுக்கு வந்த மீதி பேரிடம் ரொம்ப நேரம் ஏதோ பேசிகிட்டிருந்தீங்க போல.
சரவணன் - உங்க நிறுவனத்தைப் பற்றி அவங்க தெரிஞ்சுக்காம வந்ததாலே என் கிட்டே கொஞ்சம் கேட்டாங்க சார்.
தேர்வாளர் 2 – அப்படி என்ன விவரங்களை நீங்க சொன்னீங்க?
சரவணன் - உங்க நிறுவனத்தைத் தொடங்கியது கிருஷ்ணகாந்த் என்பதிலிருந்தும், அந்த வருடம் 1960 என்பதிலிருந்தும் தொடங்கி அதன் இப்போதைய தயாரிப்புகளைப் பற்றிச் சொன்னேன்.
தேர்வாளர் 2 – எங்கள் நிறுவனத்தின் இப்போதைய தயாரிப்புகள் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
(சரவணன் கடகடவென அடுக்கத் தொடங்குகிறான்.)
தேர்வாளர் 3 – நீங்க ஜீன்ஸ் போட்டுட்டு வந்திருக்கீங்களே, நேர்முகத் தேர்விற்கென்று ஒரு டிரஸ் கோடைக் கொடுத்திருக்கோமே.
சரவணன் – (திடுக்கிட்டு) – அப்படியா? எனக்குத் தெரியாதே சார்.
தேர்வாளர் 2 – (சிறிது நேரம் சரவணனை உற்றுப் பார்த்துவிட்டு)
ஓகே. இப்ப இதுக்குப் பதில் சொல்லுங்க...
(நேர்முகம் தொடர்கிறது)
சரவணனின் நடவடிக்கைகள் எந்த அளவுக்கு நேர்முகத் தேர்வில் வெற்றி பெற அவனுக்கு உதவியாக இருக்கும்? பார்ப்போம்.
தாமதமாக நேர்முகத் தேர்வுக்கு வந்தது பெரும் தவறு. எப்போதுமே உங்களுக்குக் குறிப்பிட்ட நேரத்தைவிட அரை மணி நேரம் முன்னதாகவே நேர்முகம் நடக்கும் இடத்தை அடைந்து விடுவது நல்லது.
வரவேற்பு அறையில் இருக்கும்போதுகூடக் கவனம் தேவை. நிறுவனத்தின் ஊழியர் எவராவது அங்கே உட்கார்ந்திருக்கக்கூடும் (வேண்டுமென்றும் உட்கார வைக்கப்பட்டிருக்கலாம்).
ஆனால் இதுபற்றிய கவலை எதுவும் இல்லாமல் ‘அந்த நிறுவனம் நேர்முகத் தேர்வு நடத்துவதே ஏமாற்று வேலை’என்பதுபோல் சரவணன் பேசுவது முட்டாள்தனம்.
நேர்முகத் தேர்வு அறைக்குள் நுழைந்த பிறகுதான் வெளியே நடக்கும் நிகழ்வுகளை உள்ளிருந்தே பார்க்கும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டதைச் சரவணன் கவனிக்கிறான். ஆனாலும் அவன் மனத்தில் ஒரு தெளிவு. “நான் நடந்து கொண்ட விதத்தை இவர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்திருக்கலாம். ஆனால் நான் என்ன பேசினேன் என்பது இவர்களுக்குக் கேட்டிருக்க வாய்ப்பு குறைவு” என்பது மனத்தில் பதிந்ததும், சரவணன் நன்றாகவே சமாளிக்கிறான். அந்த நிறுவனம் குறித்த தகவல்களை அவன் ஏற்கனவே அறிந்துகொண்டது மட்டுமல்ல, அவற்றை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பையும் உருவாக்குகிறான்.
என்றாலும்கூட சரவணன் நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக் குறைவுதான். காரணம், டிரஸ் கோடு குறித்து அவன் தெரியாது என்று கூறுவது. இதுபற்றிய நிபந்தனைகள் நேர்முகத் தேர்வில் பங்கு பெறும் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. போதாக்குறைக்கு ஹோட்டலின் வரவேற்புக் கூடத்திலும் இந்த அறிவிப்பை நிறுவனம் வைத்திருக்கிறது.
தனக்குத் தகவல் வரவில்லை என்று சரவணன் கூறுவது உண்மையாக இருந்தால்கூட, என்ன வகை உடைகளை அணிந்து வரலாம் என்பது குறித்து நிபந்தனைகள் ஏதாவது உண்டா என்பதைச் சரவணனே கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும். இந்தச் சூழலில் சரவணன் மன்னிப்புகூடக் கோராதது அவனுக்கு எதிராகத்தான் பயன்படும்.
பொதுவாக உங்களுக்கு வசதியான உடையை அணிந்துகொண்டு நேர்முகத் தேர்வுக்குச் செல்லுங்கள். என்ன விதமான பதவிக்கான நேர்முகமோ, அதற்கு ஏற்ற மாதிரியான நிறங்கள் மற்றும் டிசைன்கள் கொண்ட உடைகளாக அவை இருக்கட்டும். உடைகள் குறித்த நிபந்தனை உண்டா என்பதை முன்னதாகவே சரி பார்த்துக் கொள்ளுங்கள். ஷூக்கள் நன்கு பாலிஷ் செய்யப்பட்டவையாக இருக்கட்டும்.

போராடிப் பெற்ற வெற்றி

18-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் உலகம் முழுவதும் தொழிலாளர் நலன்களைக் காப்பாற்றுவதற்கான போராட்டங்கள் பெரிய அளவில் நடைபெற்றன. அப்போதெல்லாம் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் தொடங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம். ஒரு நாளுக்குப் பத்து மணிநேரம் மட்டுமே வேலை வாங்க வேண்டும் என்பது இதன் கோரிக்கைகளில் ஒன்று.
பிரான்ஸ்
1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டியிருந்தது. இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர்.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் கட்டடத் தொழிலாளிகள் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856-ல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இதில் அவர்களுக்கு வெற்றி கிடைத்தது.
ரஷ்யா
ஜார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். 1895 - 1899க்கு இடைப்பட்ட காலத்தில் ரஷ்யாவில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. மாபெரும் சிந்தனையாளரும் பொருளாதார மேதையுமான கார்ல் மார்க்ஸ், 8 மணி நேர வேலையை வலியுறுத்தினார்.
அமெரிக்கா
அமெரிக்காவில் 1832-ல் பாஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். 1835-ல் ஃபிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877-ல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து ‘அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு’என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இது 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்துப் பல போராட்டங்களை நடத்தியது. 1886-ம்
ஆண்டு, மே 1 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. இதுதான் மே தினம் உருவாக அடிப்படையாக அமைந்தது.
அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் தொடங்கியது. தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால், அமெரிக்காவில் பெரிய நிறுவனங்கள் மூடப்பட்டன.
மே 3, 1886 அன்று ‘மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின்’ என்னும் நிறுவனத்தின் வாயிலில் 3,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு ஏற்பட்ட கலவரத்தில் நான்கு தொழிலாளர்கள் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டனக் கூட்டம் ஒன்றைத் தொழிலாளர்கள் நடத்தினார்கள்.
அனைவரையும் கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் கூறினார்கள். அப்போது திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் காவலர் ஒருவர் பலியானார். அதையடுத்து, போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். தொழிலாளர் தலைவர்களைக் கைது செய்தார்கள். ஏழு பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.
நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் மூன்று பேர் தூக்கிலிடப்பட்டனர். ஒருவர் சிறைச்சாலையில் தற்கொலை செய்து கொண்டார். மற்ற மூவரும் 1893-ம் ஆண்டு மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து தொழிலாளர்களின் உரிமை கோரிக்கையும் இயக்கமும் வலிமை பெற்றது. தினமும் 8 மணிநேர வேலை, வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என்னும் நடைமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அமெரிக்காவில் 1886-ம் ஆண்டு மே முதல் தேதியில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தின் நினைவாகவே மே முதல் நாள் தொழிலாளர் தினமாக, தொழிலாளர்களின் ஒற்றுமை தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது.

வேலையைக் காதலி !

குழுத் தேர்வு என்று ஒன்று உண்டு. ஆங்கிலத்தில் Group Discussion, Group Analysis என்று சொல்வார்கள்.
“ஒரு குழுவில் உட்கார வைத்து ஏதாவது ஒரு தலைப்பைக் கொடுத்துப் பேசச் சொல்வார்கள்; எப்படிப் பேசுகிறார்கள் எனப் பார்ப்பார்கள்” என்ற அளவில் இது அறியப்படுகிறது. தன்னுடன் அமரும் அனைவரும் போட்டியாளர்கள் என்பதால் எல்லோரைக் காட்டிலும் சிறப்பாகப் பேச வேண்டும் என்பது இங்கு மோலோங்கியுள்ள எண்ணம். அறையின் மூலையில் பொதுவாக இரு ஆய்வாளர்கள் உட்கார்ந்து
குறிப்பு எடுப்பார்கள். எனவே எல்லோர் பேச்சும் கண்காணிக்கப்படுவதால் எப்போதும் ஒரு மனப்பதற்றம் இருக்கும்.இங்கு எப்படிப் பேச வேண்டும் எனத் திட்டமிட்டுத் தயாராக வருபவர்கள் இருக்கிறார்கள். எப்படிப் பேசினால் நல்ல மார்க் கிடைக்கும் என்ற ஒரு விவாதம் எப்போதும் உண்டு.
நான் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் காம்பெடிஷன் என்ற பெயரில் ஆரம்பிக்கும் எல்லா டெல்லி பத்திரிகைகளும் இதைப் பற்றி எழுதுவார்கள். அந்தக் காலத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வில் ஆரம்பித்து வங்கித்தேர்வுகள் வரை வேலைக்கான தேர்வு பற்றிய செய்தி, மாதிரி வினாத் தாள், வெற்றியாளர் அனுபவக் கட்டுரை எல்லாம் இவற்றில் வெளிவரும்.
ஒரு “மாதிரி குழுத் தேர்வு” நடப்புகளை ஆய்வாளர் குறிப்புகள் உட்பட விரிவாக வெளியிடுவார்கள். அது கதை போல் சுவாரசியமாக இருக்கும். அதற்காக அதைத் தவறாமல் படிப்பேன். அதில் பெரும்பாலும் முதலில் பேசுபவருக்குக் கூடுதல் மதிப்பெண்கள் இருக்கும். நல்ல ஆங்கிலமும் நல்ல கருத்துகளும் மதிப்பெண்களைக் கூட்டும். பேசாமல் இருப்பதோ, பிறர் பேசுவதை மறிப்பதோ மதிப்பெண்களைக் குறைக்கும். இப்படி நிறைய “செய்; செய்யாதே” அறிவுரைகள் இருக்கும்.
மனித வளத்துறைக்கு வந்த பின் இந்த ஆய்வு முறைகளைப் பல்லாயிரம் முறை பயன்படுத்தியும் சீரமைத்தும் பெற்ற அனுபவத்தில் இது பற்றி வேலை தேடுவோருக்குத் தெளிவுபடுத்துவது அவசியம் என்று நினைக்கிறேன். முதலில் சில பால பாடங்கள். இது அறிவுத் தேர்வு அல்ல. பாடத்தேர்வு அல்ல. உங்கள் மொழிப் புலமை பார்ப்பது கூட இரண்டாம் பட்சம்தான். ஒரு குழுவில் எப்படி இயங்குகிறீர்கள் என்று பரிசோதிப்பதுதான் முக்கிய நோக்கம். ஏன்?
நிறுவனம் என்பது பல குழுக்கள் அடங்கிய பெரிய குழுதான். அதனால் அந்தக் குழுவில் சேர்த்துக்கொள்ளும் முன் இந்தத் தகவல் முக்கியம். நிறுவனத்தில் சேர்ந்த பிறகு உங்கள் குழு நடத்தைதான் நிறுவன நடத்தையை வழிநடத்தப்போகிறது. அதன் கலாச்சாரம், மதிப்பீடுகள் மற்றும் பணி புரியும் முறைகள் இவற்றைக் கற்றுக்கொள்ளக் கூடியவரா நீங்கள் எனச் சோதிக்கும் முறைதான் குழுத் தேர்வு.
குழுவில் முதன்மை ஆதிக்கம் செலுத்தி, உரக்கப் பேசினால் அதிக மதிப்பெண்கள் என்ற தவறான எண்ணம் பலர் மனத்தில் அபாயகரமாகப் புகுந்துவிட்டது. இது உதவாது. உங்கள் தனி நபர் அறிவையும் திறனையும் மனப்பாங்கையும் சோதிக்க எழுத்துத் தேர்வும் நேர்முகத் தேர்வும் உள்ளன. பிறகு எதற்குக் குழுத் தேர்வு?
மற்ற தேர்வுமுறைகளில் காணக் கிடைக்காத விஷயங்களை இங்கே கண்டுகொள்ளத்தான் இந்த ஏற்பாடு. எவ்வளவு பாசாங்கு செய்தாலும் நம் சமூக நடத்தை வெளியே வரும். எப்படி? தியேட்டரில் இருட்டு வந்தால் விசில் சத்தம் பறக்கும். இடைவெளி வெளிச்சத்தில் எல்லோரும் கண்ணியமான கனவான்களாக நடந்துபோவார்கள். பெண்களைப் பார்த்ததும் ஆண்கள் (ஆண்களைப் பார்த்ததும் பெண்களும்)
ஆங்கிலத்தில் பேச ஆரம்பிப்பார்கள். கூடுதல் கவனத்துடன் நடந்து கொள்வார்கள். அதிகாரத்தில் பெரியவர் என்றால் அவர் முன் கால் மீது கால் போட்டு அமர யோசிக்கிறோம். நம்மை யாராவது பாராட்டி விட்டால் அவர் செய்கைக்கு ஆதரவு தரத் தயாராக இருக்கிறோம். இவையெல்லாம் தான் சமூக நடத்தைகள்.
எவ்வளவு மறைத்தாலும் நம் சமூக எண்ணங்களும் நடத்தையும் நம்மை சிறிதாவது காட்டிக் கொடுக்கும்.பிறகு தேவைப்பட்டால் நேர்காணலில் விரிவாக இதை ஆராயலாம். ஆனால் ஒரு மனிதன் தன் சமூக அமைப்பில் எப்படி நடந்துகொள்வான் என்று அறியத்தான் இந்த ஆய்வு. இதன் வீரியம் புரியாமல் சிலர் பாடத் தலைப்புகளை வைத்துச் சரியான பதில்கள் சொல்லும் ஆட்களுக்கு மார்க் போடும் துரதிருஷ்டங்களையும் பார்த்திருக்கிறேன்.
குழுத் தேர்வில் அமர்பவர்களுக்கு என் ஆலோசனை இதுதான்: இயல்பாக இருங்கள். எதையும் அதீதமாகச் செய்யாதீர்கள். உங்கள் இயல்பைக் கடந்த மீறல்கள் சுலபமாகக் கண்டறியப்பட்டுவிடும். நிறைய பேச வேண்டும் என்ற எண்ணத்தை விலக்குங்கள். பிறருடன் இயல்பாகப் பழகுதலும், பிறர் கருத்துக்கு மதிப்பளித்தலும், சமரச முயற்சிகளும், வித்தியாசமான கருத்துகளும் உங்களுக்கு உதவும். ஆனால் உங்கள் இயல்புக்கு எதிராக எதையும் சொல்லாதீர்கள்; செய்யாதீர்கள்.
பதவி உயர்வு சோதனைக்குக்கூடக் குழுத் தேர்வைப் பயன்படுத்துவோம். இதில் நிறுவனப் பணியாளர்களே பங்குபெறுவார்கள். அடுத்த நிலைக்குப் போக இவர்கள் தயாரா என்று அறிய அஸெஸ்மெண்ட் சென்டர் என்று ஒன்று செய்வோம். அதில் ஒருமுறை ஒரு மேலாளர் யாரையும் பேச விடாமல் அரை மணி நேரமாக அவரே பேசினார். வெளியே வந்து “டைம் கொடுத்தா இன்னும் பிச்சு உதறியிருப்பேன்!” என்றார் பெருமையாக.
அவரை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை.
அருகில் இருந்த சக ஆய்வாளர், “இந்த டி.வி. நிகழ்ச்சியைப் பாத்துட்டு எல்லாம் உணர்ச்சிவசப்பட்டுக் கத்திப் பேச ஆரம்பிச்சுட்டாங்க!” என்றார். உண்மைதான். நீங்கள் பிச்சு உதறினால் “கிழி கிழின்னு கிழிச்சிட்டே” என்று ஆய்வாளர்கள் சொல்ல மாட்டார்கள்!
இரண்டாம் உலகப் போருக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடந்தது. வீரத்தையும் துணிவையும் எப்படி அளவிடுவது? உயரமும் அகன்ற மார்பும் உடல் வலிமையைக் காட்டும். மன வலிமையைக் காட்டுமா? துப்பாக்கியின் விசையை அழுத்த விரல் பலமா வேண்டும்? உள்ளத் துணிவு தானே வேண்டும்!
முதல் உலகப் போரில் ஆய்வு முறை சரியில்லை என்பதால் இரண்டாம் போரில் நிறைய உளவியல் ஆய்வுகளைச் சேர்த்தார்கள். அதில் முக்கியமான கண்டுபிடிப்பு: குழுத் தேர்வு. ஒரு மனிதன் சிறு குழுவில் எப்படி இயங்குவானோ அப்படித்தான் பெரிய சமூகத்தில் இயங்குவான் என்ற குழு வளர்ச்சி சித்தாந்தத்தைக் கொண்டுவந்தார் ஓர் உளவியலாளர்.
போர் முடிந்ததும் நிறுவனங்கள் இதை ஆட்கள் தேர்வில் மிக முக்கியமான கருவியாக எடுத்துக் கொண்டது. இதன் அடிப்படையில்தான் இன்று நடக்கும் மனித வளப் பயிற்சிகள் அனைத்தும் கட்டமைக்கப்பட்டுள்ளன. அந்த உளவியலாளரின் பெயர் கர்ட் லெவின்.
- gemba.karthikeyan@gmail.com

பூமி போல் ஒரு கோள்

1. சந்தேஷ் பதக் (Sandesh Pathak) என்பது என்ன?
அ) புதிதாக அறிமுகமான விரைவு ரயில்
ஆ) இந்தித் திரைப்படம்
இ) சாப்ட்வேர் அப்ளிகேஷன்
ஈ) இவற்றில் எதுவுமல்ல
2. நீதிபதி ஜி. ரோஹினி எந்த மாநில உயர் நீதிமன்றத் தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்?
அ) ஆந்திரப் பிரதேசம்
ஆ) மகாராஷ்டிரா
இ) டெல்லி
ஈ) ராஜஸ்தான்
3. ஹெப்ளர் 186 எஃப் என்பது என்ன?
அ) நாஸாவின் செயற்கைக் கோள்
ஆ) புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மருந்துப் பொருள்
இ) புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோள்
ஈ) இவற்றில் எதுவுமல்ல
4. விக்டர் ஆர்பன்
(Viktor Orban) என்பவர் சமீபத்தில் எந்த நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்?
அ) ஹங்கேரி
ஆ) துருக்கி
இ) பங்களாதேஷ்
ஈ) இவற்றில் எதுவுமல்ல
விடைகள்:
1. சாப்ட்வேர் அப்ளிகேஷன். மும்பை, திருவனந்தபுரத்தில் உள்ள C DAC நிறுவனங்கள், சென்னை, ஹைதராபாத், காரக்பூர் ஆகிய இடங்களில் உள்ள ஐஐடி நிறுவனங்கள் ஆகியவை இணைந்து கூட்டாக உருவாக்கியுள்ள சாப்ட்வேர் அப்ளிகேஷன்தான் சந்தேஷ் பதக். இது இந்திய அரசால் விவசாயிகள் நலன்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
படிக்கத் தெரியாத விவசாயிகளுக்கு வரும் விவசாயத் துறை தொடர் பான ஆலோசனைகள் அடங்கிய அல்லது தட்பவெப்ப நிலை பற்றிய குறிப்பு அடங்கிய எஸ்.எம்.எஸ்.ஸை இந்த அப்ளிகேஷன் ஒலியாக மாற்றி அவர்களுக்குப் படித்துக் காட்டும். இந்தி, தமிழ், மராத்தி, குஜராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த அப்ளிகேஷன் செயல்படும். எந்த மொழி வேண்டுமோ அந்த மொழியைத் தேர்வு செய்து கேட்டுக்கொள்ளலாம்.
2. டெல்லி. 59 வயதான நீதிபதி ஜி. ரோஹினி ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்தவர். இவர் டெல்லி மாநிலத்தின் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றிருக்கும் முதல் பெண். டெல்லி உயர் நீதிமன்றம் 1966-ல் ஏற்படுத்தப்பட்டது.
47 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவர் இங்கு தலைமை நீதிபதி பொறுப்பை ஏற்றுள்ளார். டெல்லி உயர் நீதிமன்றத்தில் உள்ள 40 நீதிபதிகளில் ஏற்கனவே ஒன்பது பெண் நீதிபதிகள் இருந்தனர். இவருடன் சேர்த்து மொத்தம் 10 பெண் நீதிபதிகள் தற்போது அங்கு உள்ளனர்.
3. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோள். சமீபத்தில் நாஸாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி இந்தக் கோளைக் கண்டுபிடித்துள்ளது. இது பூமியைப் போன்ற அளவில் உள்ளது. பூமியிலிருந்து 490 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. கெப்ளர் 186 என்ற நட்சத்திரத்தைச் சுற்றி வரும் 5 கோள்களில் கெப்ளர் 186எஃப் என்பது இறுதியாக இருக்கும் கோள். இந்தக் கோள் ஹேபிடபிள் மண்டலத்திற்குள் உள்ளது. அதாவது வசிப்பதற்குத் தேவையான தண்ணீர் கிடைக்கும் நட்சத்திரத்தின் எல்லைக்குட்பட்ட தொலைவில் உள்ளது.
4. ஹங்கேரி. சமீபத்தில் ஹங்கேரி நடைபெற்ற தேர்தலில் விக்டர் ஆர்பன் தலைமையிலான ஃபிடேஸ் கட்சி (Fidesz party) 44.6 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றது. இதை அடுத்து விக்டர் ஆர்பன் ஹங்கேரியின் பிரதமராக மூன்றாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதன்முறையாக 1998-2002வரை பிரதமராகவும் இரண்டாம் முறையாக 2010-2014 வரை பிரதமராகவும் பதவி வகித்தவர் இவர்.

நீதித்துறை எல்லை தாண்டுவது தவிர்க்கப்பட வேண்டும்: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம்

அரசியல் சாசன அமைப்புகளான நாடாளு மன்றம், ஆட்சி நிர்வாகம், நீதித் துறை மூன்றும் தங்கள் எல்லைகளையும், அதி காரத்தையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2013 ஜூலை 19 முதல் ஒன்பதரை மாதங்கள் பதவி வகித்த பி.சதாசிவம் ஏப்ரல் 26-ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். ஒருங்கிணைந்த சென்னை மாகாணம் இருந்தபோது அங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதஞ்சலி சாஸ்திரி 1951 நவம்பர் முதல் 1954 ஜனவரி வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தார். தமிழகம் மாநிலமாக உருவான பின் அதுன் சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பெருமை பி.சதாசிவத்துக்கு மட்டுமே உண்டு.

ஈரோடு மாவட்டம் பவானி தாலுகாவில் உள்ள கடப்பநல்லுார் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த சதாசிவம் அவரது குடும் பத்திலும் அந்த கிராமத்திலும் முதல் பட்டதாரி. ஒழுக்கம், நேரம் தவறாமை ஆகியவற்றை உறுதியுடன் பின்பற்றும் சதாசிவம் தன் பதவிக்காலம் குறித்து “தி ஹிந்து - தமிழ்” நிருபர் ஜா.வெங்கடேசன் உடன் உரையாடினார். அதன் சாராம்சம்:

மிக சாதாரண குடும்பத்தில் இருந்த வந்த நீங்கள் மிக உயர்ந்த பதவியை வகித்துள்ளீர்கள். உங்களது பணி முழு மனநிறைவைத் தருகிறதா?

உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஏழு ஆண்டுகளையும் சேர்த்து மொத்தம் 18 ஆண்டுகள் 6 மாதங்கள் நீதிபதியாகப் பணி யாற்றி உள்ளேன். உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது ஒருநாள்கூட விடுமுறை எடுத்தது இல்லை. உச்ச நீதிமன்றத்தில் ஒருநாள் மட்டுமே விடுமுறை எடுத்துள்ளேன். கடந்த 9 மாதங்களாக தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில் என் பணி முழு திருப்தி அளித்தது. இந்த காலகட்டத்தில் உச்ச நீதிமன்றத்தில் நான்கு நீதிபதிகள், ஆறு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள், 89 நீதிபதிகள் நியமனம் நடந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி உயர் நீதிமன்றத்தில் காலியிடங்கள் 28 சதவீதமாகக் குறைந்துள்ளது. நான் பொறுப்பேற்றபோது இந்த அளவு 30 சதவீதமாக இருந்தது. உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக நவம்பரில் லோக் அதாலத் நடத்தப்பட்டு, 71.78 லட்சம் வழக்குகளை முடித்துவைத்தோம்.

நீதிபதிகளின் பணி குறித்து உங்கள் கருத்து என்ன?

ஒழுக்கம், நேரம் தவறாமை குறித்து பிரச்சினை இல்லை. நீதிமன்றத்தின் அனைத்து நிலையிலும் பெருமளவில் அதை பின்பற்றுகின்றனர். நாட்டின் அனைத்து நீதிமன்றங்களிலும் நேரத்தை வீணாக்கக் கூடாது என்பது என் கருத்து. பொதுவாக தீர்ப்புகள் அனைத்தையும் நீதிபதிகள் முடிந்தவரை உரிய காலத்தில் அளித்து விடுகின்றனர்.

வழக்குகள் தேக்கத்தை குறைக்கவும், காலியிடங்களை நிரப்பவும் நீங்கள் எடுத்த முயற்சி பலன் அளித்ததா?

நான் பதவியேற்றபோது 67,964 ஆக இருந்த நிலுவை வழக்குகள் 63,625 ஆக குறைந்துள்ளது. பத்து அரசியல் சாசன அமர்வு வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன. நிலுவை வழக்குகள் எண்ணிக்கை இன்னும் குறைந்திருக்கும். ஆனால் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ந்து வருகிறது.

உங்கள் பதவிக் காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் முழு எண்ணிக்கையான 31 நீதிபதிகளும் பொறுப்பில் இருந்துள்ளனர். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்றும் மத்தியப் பிரதேசம், ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த நீதிபதிகள் இல்லை என்றும் வருத்தம் தெரிவிக்கப்படுகிறதே?

நான் பொறுப்பேற்றதும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிரதிநிதித்துவம் இல்லாத சமூகங்களை உள்ளடக்கி காலியிடங்களை நிரப்பும்படி அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் கடிதம் எழுதினேன். அதேசமயம், நீதிபதிகள் நியமனத்தில் தரம் குறையாமல் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். நீங்கள் கூறிய இரண்டு மாநிலத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்க என்னால் முடிந்த முயற்சிகளை எடுத்தேன். ஆனால் என் பதவிக்காலத்தில் அது முடியவில்லை.

நீதிபதிகள் நியமனக் குழு தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. தேசிய நீதிக்குழு அமைக்கப்பட்டால் இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமா?

தற்போதைய நீதிபதிகள் நியமனக் குழு முறையே சிறந்தது என்பது என் கருத்து. தற்போதைய நடைமுறையில் மத்திய, மாநில அரசுகள் தங்கள் கருத்தை தெரிவிக்க வாய்ப்பு உள்ளது. குழுவில் இருக்கும் நீதிபதிகள் புதிய நீதிபதிகளின் செயல்பாடுகள், அவர்களது சட்ட புலமை ஆகியவற்றை மட்டுமே கருத்தில் கொள்வார்கள். இதில் குழுவுக்கு வெளியில் உள்ள மூத்த நீதிபதிகளிடம் ஆலோசிப்பது நல்லது என்று கருதுகிறேன்.

மேல்முறையீட்டுக்கான தேசிய நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை நான்கு பிராந்தியத்திலும் அமைத்தால் வழக்குகளில் தேக்கம் குறையும் என்று கருதுகிறீர்களா?

உச்ச நீதிமன்றம் தொழில்நுட்ப ரீதியாக நாடு முழுவதும் இணைக்கப்பட்டுள்ளதால் தேசிய மேல்முறையீடு நீதிமன்றம் தேவையில்லை. வழக்குகளை இ-மெயில் மூலம் கூட பதிவு செய்யலாம். தீர்ப்புகளை இணைய தளத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நீதிபதிகளிடம் ஊழல் எதுவும் இருந்ததா, அப்படி இருந்தால் எப்படி சமாளித்தீர்கள்,? தவறு செய்த நீதிபதிகள் மீது நடவடிக்கை ஏதும் எடுத்தீர்களா?

கீழ் நீதிமன்றங்களைப் பொறுத்தமட்டில் புகார்களை விசாரிக்கும் பொறுப்பு உயர் நீதி மன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. உயர்நீதி மன்ற நீதிபதிகள் மீது புகார் வந்தால், அதை விசாரிக்க உள் விசாரணைக்குழு உள்ளது. அவர்கள் நீதிபதிக்கும் பதிலளிக்க வாய்ப்பளித்து விசாரிப்பார்கள். உண்மையாக இருந்தால் தலைமை நீதிபதிக்கு அனுப்பி விசாரணைக்கு உத்தரவிடப்படும். சில உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது அனுப்பப்பட்ட புகார்களை உரிய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு அனுப்பி வைத்தேன். அந்த புகார்கள் ஆதாரமின்றி மேலோட்டமாக இருந்ததால் குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை.

நீதிமன்றங்கள் எல்லை மீறுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து?

அது அந்தந்த வழக்கைப் பொறுத்தது. அரசியல் சாசன அமைப்புகளான நாடாளுமன் றம், ஆட்சி நிர்வாகம், நீதித்துறை மூன்றும் தங்கள் எல்லைகளையும், அதிகாரத்தையும் உணர்ந்து செயல்பட வேண்டும். சில நேரங்க ளில் நீதித்துறை எல்லை தாண்டுவதை ஒப்புக் கொள்கிறேன். அது தவிர்க்கப்பட வேண்டும்.

கங்குலி மீதான குற்றச்சாட்டை அணுகிய விதம் குறித்து சில நீதிபதிகளே வருத்தம் தெரிவிக்கின்றனரே?

இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் அவர் இங்கு உண்மை அறியும் குழுவிடம் சாட்சியம் அளிக்க வந்தபோது கண்ணியமாக நடத்தப்பட்டார்.

நீதிபதிகள் விசாரணை மசோதா நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதில் தலைமை நீதிபதியை சேர்ப்பதில் உங்களுக்கு ஆட்சேபம் உண்டா?

சட்டம் இயற்றுவது நாடாளுமன்றத்தின் அதிகார உரிமை. அது நீதித்துறை ஆய்வுக்கு உட்பட்டதா என்பதைப் பார்க்க வேண்டும். இந்திய அரசியல் சாசனம் நீதித்துறைக்கு சுதந்திரம் வழங்கியுள்ளது. அதில் எந்த தலையீடும் கூடாது.

மாநில மொழிகளை நீதிமன்ற வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை பற்றி?

கீழ் நீதிமன்றங்களைப் பொறுத்த அளவில் மாநில மொழிகளை வழக்காடு மொழியாக கொண்டு வருவதில் எந்த சிரமமும் இல்லை. அதற்கு அந்தந்த மாநில அரசுகள் உரிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். ஆனால், உயர் நீதிமன்றங்களில் அமல்படுத்த அரசு, நீதித்துறை, வழக்கறிஞர்கள் அமர்ந்து பேசி வழிகாண வேண்டும்.

Saturday, 26 April 2014

பாதுகாப்புப் படை வாய்ப்பு

பாதுகாப்புப் படை சார்ந்த அஸிஸ்டென்ட் கமான்டெண்ட் காலியிடங்கள் 136ஐ நிரப்புவதற்காக நடத்தப்படும் தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை யு.பி.எஸ்.சி.,
அறிவித்துள்ளது.
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: யு.பி.எஸ்.சி., அமைப்பு நடத்தும் பொது எழுத்துத் தேர்வின் மூலமாக பார்டர் செக்யூரிட்டி போர்ஸில் 68ம், சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸில் 28ம், சென்ட்ரல் இன்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி போர்ஸில் 40ம் சேர்த்து மொத்தம் 136 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: 01.08.2014 அடிப்படையில் 20 வயது நிரம்பியவராகவும், 25 வயதை அடையாதவராகவும் இருக்க வேண்டும். அதாவது 02.08.1986க்கு பின்னரும் 01.08.1994க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்
.
தேர்வு மையங்கள்: இந்த தேர்வு தமிழ் நாட்டில் சென்னை மற்றும் மதுரையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு நாள்: 13.07.2014 காலை மற்றும் மதியம் என இரு பகுதிகளாக நடத்தப்படும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 12.05.2014.
இணையதள முகவரி :www.upsc.gov.in/exams/notifications/2014/capf/

தமிழ் அறிஞர்கள் அறிவோம்: திருவள்ளுவர்- திருக்குறள்

அடக்கமுடைமை
121. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
பொருள்: அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.

122. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
பொருள்: மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும். அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை.

123. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
பொருள்: அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்.

124. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
பொருள்: உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.

125. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
பொருள்: பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும். ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்.

126. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுநம்யும் ஏமாப் புடைத்து.
பொருள்: உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்.

127. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
பொருள்: ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.

128. ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.
பொருள்: ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்.

129. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
பொருள்: நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது.

130. கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
பொருள்: சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.


ஒழுக்கமுடைமை
131. ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
பொருள்: ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.

132. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
பொருள்: ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.

133. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
பொருள்: ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

134. மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
பொருள்: கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.

135. அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.
பொருள்: பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.

136. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.
பொருள்: மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்.

137. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
பொருள்: நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்.

138. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
பொருள்: நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.

139. ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
பொருள்: தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.

140. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
பொருள்: உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.


பொறையுடைமை
151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
பொருள்: தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.

152. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
பொருள்: வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.

153. இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
பொருள்: வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.

154. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்.
பொருள்: நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.

155. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
பொருள்: ( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.

156. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
பொருள்: தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.

157. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
பொருள்: தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.

158. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
பொருள்: செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.

159. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
பொருள்: வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.

160. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
பொருள்: உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.

ஒப்புரவறிதல்
211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.
பொருள்: கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.

212. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
பொருள்: தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.

213. புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
பொருள்: பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.

214. ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
பொருள்: ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.

215. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
பொருள்: பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.

216. பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.
பொருள்: ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.

217. மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.
பொருள்: பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம், செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்.

218. இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
பொருள்: தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்.

219. நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.
பொருள்: பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான்.

220. ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.
பொருள்: பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக் கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும்.

வாய்மை
291. வாய்மை எனப்படுவது யாதெனின் தொன்றும்
தீமை இலாத சொலல்.
பொருள்: வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.

292. பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
பொருள்: குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.

293. தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
பொருள்: ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.

294. உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
பொருள்: ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.

295. மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.
பொருள்: ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.

296. பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.
பொருள்: ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.

297. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
பொருள்: பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.

298. புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
பொருள்: புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.

299. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
பொருள்: (புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.

300. யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
பொருள்: யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.

பொருட்பால்: கல்வி
391. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
பொருள்: கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
392. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
பொருள்: எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.
393. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
பொருள்: கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.
394. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
பொருள்: மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.
395. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.
பொருள்: செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.
396. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
பொருள்: மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.
397. யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
பொருள்: கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்.
398. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
பொருள்: ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.
399. தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
பொருள்: தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.
400. கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
பொருள்: ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.
தொடரும்..                               இணையத்தோடு இணைந்திருங்கள்.