Showing posts with label குரூப்–4 தேர்வு. Show all posts
Showing posts with label குரூப்–4 தேர்வு. Show all posts

Thursday, 14 November 2013

குரூப்–4 தேர்வு


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஆகஸ்டு மாதம் 25–ந்தேதி குரூப்–4 தேர்வை 5 ஆயிரத்து 556 பணியிடங்களை நிரப்ப நடத்தியது. இந்த தேர்வை 12 லட்சத்து 21 ஆயிரத்து 167 பேர் எழுதினார்கள். அவர்களில் என்ஜினீயரிங் படித்தவர்கள் ஏராளமானவர்கள் இருந்தனர்.

பணியிடங்களில் 3 ஆயிரத்து 531 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், 1738 தட்டச்சர் பணியிடங்கள், 242 சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் ஆகும். 30 வரைவாளர் பணியிடங்களும், 6 நில அளவர் பணியிடங்களும் சேர்த்து மொத்தம் 5 ஆயிரத்து 566 பணியிடங்கள் ஆகும்.

இந்தப்பணியிடங்களுக்கு 12 லட்சம் பேர் தேர்வு எழுதியது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒரு காலிப்பணியிடத்திற்கு 220 பேர் போட்டி போட்டு இருக்கிறார்கள்.
தேர்வு நடந்து 3 மாதங்கள் ஆகப்போகிறது.

இந்த தேர்வு முடிவை எப்போது வெளியிடப்போகிறீர்கள் என்று தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–
12 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குரூப்–4 தேர்வை எழுதி உள்ளனர்.

தேர்வு முடிவை மிகச்சரியாக வெளியிடவேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குறிக்கோளாக வைத்திருக்கிறது.

தேர்வு முடிவை வெளியிடுவதற்காக அனைத்துப் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) குரூப்–4 தேர்வு முடிவு வெளியிடப்படும்.

தேதி விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

நடந்து முடிந்த குரூப்–1 மெயின்தேர்வு முடிவு தேர்வு நடந்ததில் இருந்து 3 மாதத்திற்குள் தேர்வு முடிவு வெளியிடப்படும். பின்னர் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

குரூப்–2 தேர்வு டிசம்பர் 1–ந்தேதி நடக்கிறது. புதிதாக குரூப்–1 தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும். இப்போது துறைவாரியாக எத்தனை காலிப்பணியிடங்கள் உள்ளன என்ற விவரத்தை சேகரித்து வருகிறோம். சில துறைகளில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. சில துறைகளில் இருந்து இன்னும் தகவல் வரவில்லை. தகவல் வந்ததும் அறிவிப்பு வெளியிடப்படும்.

இவ்வாறு அரசுப்பணியாளர் தேர்வாணையதலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.