Showing posts with label கடிதம். Show all posts
Showing posts with label கடிதம். Show all posts

Thursday, 25 April 2013

மத்திய அரசு பதவிகளுக்கான புதிய தேர்வு முறையை கைவிட வேண்டும் : ஜெ., கடிதம்


"மாநில அரசு அதிகாரிகள், மத்திய அரசு பணிக்குச் செல்லும் போது, தேர்வு நடைமுறைகளை கொண்டு வருவது, மாநில அரசின், இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிரானது,'' என, முதல்வர், ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, அவர் எழுதியுள்ள கடிதம்: மாநில அரசு ஊழியர்களை, மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்வதில், மாற்றம் கொண்டு வர, மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, தேர்வு முறைக்கான பாடத் திட்டத்தை முடிவு செய்ய, இன்று (ஏப். 26) நடக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு, மாநில அரசுகளுக்கு, யு.பி.எஸ்.சி., தகவல் அனுப்பியுள்ளது.மாநில அரசு ஊழியர்களை, மத்திய அரசுக்கு பணிக்கு தேர்வு செய்வதில், மாற்றங்கள் கொண்டு வருவது பற்றி, மாநில அரசுகளுக்கு, எவ்விதத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், கொள்கை முடிவு எடுத்தது, மத்திய அரசின் தன்னிச்சையான முடிவாகும்.

மத்திய அரசின் இந்த முடிவு, இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரைப்படி, எடுக்கப்பட்டதாக அறிகிறோம். இந்திய நிர்வாகப் பணிகள் தேர்வு விதி, அலுவலர்களை தேர்வு செய்ய அனுமதி அளிக்கிறது. இதில், ஒரு முறை, போட்டித் தேர்வு மூலம், நேரடியாகத் தேர்வு செய்வது; மற்றொரு முறை, மாநில நிர்வாகத் துறை, போலீஸ் மற்றும் வனத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், பணி உயர்வு மூலம், மத்திய அரசு பணிக்குச் செல்வது. இம்முறைகள், பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளன.மாநில பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள், மத்திய பணிக்கு செல்லும் வாய்ப்பு இருப்பதால், சிறப்பான பணித் திறனை வெளிப்படுத்துகின்றனர். மேலும், மாநில அரசுப் பணிக்கு தேர்வு செய்யும்போதே, கடுமையான போட்டித் தேர்வுகளை எழுதி தேர்வாகின்றனர். மாநில அரசு பின்பற்றும், இட ஒதுக்கீடு கொள்கை அடிப்படையிலும், தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்த நிலையில், மாநில அரசு அதிகாரிகளை, மத்திய பணிக்கு தேர்வு செய்ய, போட்டித் தேர்வு எழுத வேண்டும் என்பதை, தமிழக அரசு வன்மையாகக் கண்டிக்கிறது. போட்டித் தேர்வு என்பது, மாநில அரசு அதிகாரிகளின் பணித் திறனை பின்னுக்குத் தள்ளுவதாகும். போட்டித் தேர்வு தான், மத்திய அரசு பணிக்கு செல்லும் வழி என்றால், போட்டித் தேர்வில் வெற்றிபெறவே, அவர்கள் தயார் செய்து கொண்டிருப்பர். பணித் திறனை வெளிப்படுத்த மாட்டார்கள்.
மாநில அரசு அதிகாரிகளின், பணித் திறனை பருவ முறையில் கண்காணித்து, அவர்களின் பணித் திறனுக்கு ஏற்பவே, பணி உயர்வு அளிக்கப்படுகிறது. புதிய போட்டித் தேர்வு முறை, பணித் திறன் அடிப்படையிலான பணி உயர்வுக்கு எதிரானது.

இதற்கிடையே, மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யும் வயது வரம்பை, 54லிருந்து, 40 ஆக குறைத்திருப்பது, மாநில அரசு அதிகாரிகளின் எதிர்காலத்தை, சீர்குலைப்பதாகும். புதிய முறை, மத்திய அரசு பணிக்கு, மாநில அரசு அளிக்கும் பங்களிப்பை மறுக்கும் செயலாகும். பின்கட்டு வழியாக, மத்திய அரசு பதவிக்கு வர, உதவுவதாகவும் அமைந்துவிடும்.எனவே, முழுமையில்லாத நிர்வாக சீர்திருத்தத்தை, மறுபரிசீலனை செய்து, மத்திய அரசு பணிக்கு, ஏற்கனவே இருக்கும் தேர்வு முறையை அனுமதிக்க வேண்டும். புதிய முறையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என, யு.பி.எஸ்.சி.,க்கு உத்தரவிட வேண்டும்.