Tuesday 19 August 2014

கேரளம்- கதகளி: இதிகாசங்களின் நாட்டிய நாடகம்

கேரளம் என்றால் கதகளியும், கதகளி என்றால் கேரளமும் நினைவிற்கு வரும். கதகளி என்ற சொல்லிற்கு கதையை அடித்தளமாகக் கொண்ட ஆடல் என்று அர்த்தம். ராமாயணம், மஹாபாரதம் ஆகிய இதிகாசங்களை நாட்டிய நாடகமாக வடிவமைத்துக் குழுவாக ஆடுவர். கதகளி ஒரு பேச்சில்லாத நாடகம்.
அபிநயமே நாடகத்தின் மொழி. கண் அசைவுகளும், முகபாவமும், கையசைவுகளும் இந்த நடனத்தின் அம்சங்களாகும். ஒப்பனையும், உடையலங்காரமும் முற்றிலும் வித்தியாசமானவை. வேடமிடுவதில் பச்சை, கத்தி, தாடி, கரி, மினுக்கு ஆகிய ஐந்து வகைகளை பின்பற்றுகின்றனர்.
இவர்களின் ஆடை ஆபரணங்கள் நிகழ்ச்சிக்கு பொருத்தமாக அமையும். அவை கச்சை, முன்வால், பின்வால், உடுத்துக்கட்டு, உள் குப்பாயம், வெளிக்குப்பாயம், தோள்பூட்டு, தோள்வளை, கடகம், பருத்திக்காய்மணி, கிரீடம், நெற்றிச்சுட்டு, மேல்கட்டு, சாமரம், வெள்ளிநகம் ஆகியனவாகும். இரவு முழுவதும் ஆடப்படும் இந்நடனத்தில் தோடயம், புறப்பாடு போன்ற ஆடல் வகைகள் இடம் பெற்றிருக்கும்.
தொடர்ந்து மேளப்பதம், ஆட்டக்கதை, தனாசி என்னும் மங்களம் ஆகியவை இடம் பெற்று இருக்கும். கதகளி நடனத்தில் பாடுபவர்களும், மத்தளம் செண்டை வாசிப்பவர்களும் இருப்பார்கள். பிரதான பாடகர் பாடும் ஒவ்வொரு வரியையும் சீடர்கள் வாங்கிப் பாடுவார்கள். இவர்கள் பாடும்போது நடிகர்கள் அபிநயம் பிடிப்பார்கள்.
காதல் காட்சிகளுக்கு பதிஞ்ச ஆட்டம் என்று பெயர். கதையிலே, தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் போராட்டம் நடந்து இறுதியில் தர்மத்தின் வெற்றியையும் அதர்மத்தின் அழிவையும் கதகளி நடனம் புராணக் கதைகளின் மூலம் வெளிப்படுத்துகிறது. இரவு தொடங்கி விடிய விடிய நடக்கும் இந்த நாட்டிய நாடகம் காண்போருக்கு கலைக் கண்காட்சி. கேரளம் கதகளி கலைகள் அறிவோம்

No comments:

Post a Comment