சபர்மதி ஆசிரமத்தில் காந்திஜி இருந்தபோது குழந்தைகள் நிறைய கடிதங்கள் எழுதுவார்கள். அந்தக் கடிதங்களில் சந்தேகங்களும் கேள்விகளும் இருக்கும். குழந்தைகள்தானே என்று காந்தி பதில் எழுதாமல் இருக்க மாட்டார். எல்லாக் கடிதங்களுக்கும் பதில் எழுதுவார்.
ஆனால், எல்லாப் பதில்களையும் ஒரு சின்ன துண்டுக் காகிதத்தில் மட்டுமே சுருக்கமாக எழுதி அனுப்புவார். காந்திஜியின் பதிலுக்காகக் குழந்தைகள் ஆவலோடு காத்திருப்பார்கள்.
காந்திஜியிடம் புத்திசாலித்தனமான கேள்வியைக் கேட்டு யார் கடிதம் எழுதுவது என்றுகூட அவர்களுக்குள் போட்டி இருக்கும்.
ஒரு நாள் சபர்மதி ஆசிரமத்தில் இருந்த சிறுவன் நாராயண் தேசாய், ஒரு கேள்வி கேட்டு காந்திக்குக் கடிதம் எழுதினான்.
“பாபுஜி, நாங்கள் நிறைய கேள்விகள் கேட்டு உங்களுக்குக் கடிதம் எழுதுறோம். ஆனா, நீங்க குட்டியூண்டு காகிதத் துண்டில் பதில் அனுப்புறீங்க. பகவத் கீதையில் அர்ஜூனன் சின்ன கேள்வி கேட்டாகூட, அதற்கு கிருஷ்ணர் சொல்லுற பதில் ரொம்பப் பெரிசா இருக்கு. ஆனா, உங்க பதில் மட்டும் ஏன் இத்தனை குட்டியா இருக்கு?” என்று கேட்டிருந்தான் நாராயண் தேசாய்.
காந்திஜியிடம் சிறுவன் கேட்ட கேள்வி, ஆசிரமம் முழுவதும் பாராட்டைப் பெற்றது. எல்லாருமே காந்தியின் பதிலை எதிர்பார்த்திருந்தனர். காந்தியும் சிறிது நாட்கள் கழித்துப் பதில் அனுப்பினார்.
“உனது கேள்வி அருமையானது. ஆனால், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. கிருஷ்ணனுக்குக் கேள்வி கேட்க ஒரே ஒரு அர்ஜூனன்தான் இருந்தார். ஆனால், எனக்கு உன்னைப் போல கேள்வி கேட்க எத்தனை அர்ஜூனர்கள் இருக்கிறார்கள்?” என்று பதில் எழுதினார்.
சிறுவன் கேட்ட கேள்வியும் அதற்கு காந்திஜி சொன்ன பதிலும் சரிதான் அல்லவா?
சுதந்திரப் போராட்டத்தில் தீவிரம் காட்டி வந்த வேளையிலும் குழந்தைகளுக்குக் காந்திஜி கடிதம் எழுதுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தது ஆச்சரியம்தானே.