துணை வணிக வரி அதிகாரி, சார்-பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, வருவாய் உதவியாளர் உட்பட 19 வகையான பதவிகளில் 1064 காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த 5.9.2013 அன்று அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான முதல்நிலைத்தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இத்தேர்வை 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினர். டிஎன் பிஎஸ்சி வெளியிட்ட கால அட்டவணையின்படி, தேர்வு முடிவு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அடுத்த கட்ட தேர்வான முதன்மைத் தேர்வு மே 10, 11-ந் தேதிகளிலும் நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்தி முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், தேர்வு முடிந்து 8 மாதங்கள் ஆகியும் இன்னும் முதல்நிலைத் தேர்வு முடிவுகூட வெளியிடப்படவில்லை.
இத்தனைக்கும் விடைத்தாள் மதிப்பீடு கணினி மூலமே செய்யப்படுகிறது. தேர்வு முடிந்து 6 மாதத்திற்குள் எப்படியும் முடிவு வெளியிடப்பட்டுவிடும் என்று எதிர்பார்த்து வந்த தேர்வர்கள் முடிவு தெரியாமல் தவிக்கிறார்கள். இதுகுறித்து பாதிக்கப்பட்டுள்ள தேர்வர்கள் கூறியதாவது: மத்திய அரசு பணியாளர் தேர்வா ணையம் (யூபிஎஸ்சி), பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) போன்ற தேர்வு வாரியங்கள் எல்லாம் திட்டமிட்டபடி தேர்வு முடிவுகளை வெளி யிட்டு விடுகின்றன. 8 மாதங் களுக்கு முன் நடத்தப் பட்ட முதல்நிலைத் தேர்வின் முடிவுகூட இன்னும் வெளியிடப் படவில்லை. எப்போது மெயின் தேர்வு நடத்தி, நேர்காணல் வைத்து கலந்தாய்வு நடத்தப் போகிறார்களோ தெரியவில்லை. டிஎன்பிஎஸ்சி இனியும் கால தாமதம் செய்யாமல் தேர்வு முடிவை விரைவாக வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். நிலவரம் குறித்து அறிய முயன்றபோது டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா ஆகியோரை தொடர்புகொள்ள முடியவில்லை.