Tuesday 30 September 2014

மவுரிய தேசத்தின் கிரேக்க வி.ஐ.பி.

உலகில் பல ஊர்சுற்றிகள் இருந்தாலும், அரசு ஆதரவுடன் நாடுகளுக்குத் தூதர்களாகச் செல்வதிலும், யாத்ரீகம் சென்று புதிய நிலப்பகுதிகளை அறிந்துகொள்ளும் ஆவலும் அந்தக் காலத்தில் பலருக்கும் இருந்தது.
விமானம், ரயில், மோட்டார் வாகனம் போன்றவை இல்லாத அந்தக் காலத்தில், கால்நடையாகவோ, அதைவிட கொஞ்சம் கூடுதலாகக் குதிரையிலோ, அதிகபட்சமாகக் கப்பலிலோதான் அவர்கள் செல்ல வேண்டி இருந்தது. ஆனாலும் அவர்கள் உலகம் சுற்றினார்கள்.
இண்டிகா
அந்த வகையில் இந்தியாவுக்கு நெடுங் காலத்துக்கு முன்னர் வருகை தந்த முக்கிய யாத்ரீகர் கிரேக்கத்தைச் சேர்ந்த மெகஸ்தனிஸ். இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு அவர் வாழ்ந்தார். இந்தியாவையும் இந்திய மக்களையும் பற்றி 'இண்டிகா' என்ற பெயரில் அவர் எழுதிய நூல் புகழ்பெற்றது. பாருங்கள், 2000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நம் நாட்டுக்கு அவர் பெயர் வைத்திருக்கிறார்.
பிற்காலத்தில் நூல் எழுதியவர்கள் அவருடைய நூலில் இருந்து பல மேற்கோள்களைக் காட்டி யுள்ளனர். துரதிருஷ்டவசமாக இண்டிகா நமக்குக் கிடைக்கவில்லை. மேற்கோள் காட்டப்பட்ட பகுதிகளே கிடைக்கின்றன. அவற்றைக் கொண்டு அந்தக் கால இந்தியாவின் காட்சியைக் கொஞ்சம் மனக் கண் முன்னால் கொண்டு வருவோம்.
வந்ததன் காரணம்
2,400 ஆண்டுகளுக்கு முன்னர் அலெக்சாண்டரின் படைத் தளபதி செல்யூகஸ் நிகாடர், பண்டைய இந்தியாவை ஒட்டி அலெக்சாண்டரின் அதிகாரத்தின் கீழ் முன்பு இருந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்ற முயற்சித்தார். அந்தப் பகுதிகளைச் சந்திரகுப்த மவுரியர் வென்றிருந்தார்.
இதற்காகக் கி.மு. 305-ல் நடந்த போரில் செல்யூகஸை சந்திரகுப்தர் தோற்கடித்தார். தொடர்ந்து போரைத் தவிர்க்கும் வகையில் இரு அரசுகளுக்கும் இடையே திருமண உறவு ஏற்படுத்தப்பட்டது. அப்போது சந்திரகுப்தரின் அரசவைக்குத் தனது தூதராக மெகஸ்தனிஸை, செல்யூகஸ் அனுப்பினார்.
பண்டைய நகரம்
இன்றைய பிஹார் தலைநகர் பாட்னாவுக்கு அருகேயிருந்த பாடலிபுத்திரத்தில் மவுரிய அரசவையில் மெகஸ்தனிஸ் இருந்தார். பாடலிபுத்திரம் என்ற இந்தப் பண்டைக்கால நகரைக் கட்டியவர் மகத அரசர் அஜாதசத்ரு. கி.மு. 490-ல் கங்கை நதிக் கரையில் கட்டப்பட்ட கோட்டையை மையமாகக் கொண்டு அந்த நகரம் உருவானது.
இதை ஆராய நடத்தப்பட்ட தொல்பொருள் அகழாய்வுகள், அந்த நகரம் இருந்ததை உறுதிப்படுத்துகின்றன. மெகஸ்தனிஸ் நாடெங்கும் சுற்றுப்பயணமும் செய்தார். அந்தக் கால இந்தியாவைப் பற்றி அவரது விவரிப்பு, சற்றே மிகைப்படுத்தலாக இருந்தாலும் அவை உண்மையை அடியொற்றியே உருவாகியிருந்தன.
நீரும் நிலமும்
கங்கை, சிந்து என்ற இந்தியாவின் இரண்டு மிகப் பெரிய ஆறுகளை அவர் கண்டார். அந்த ஆறுகளிலும், அவற்றின் கிளை ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுக்கும் மழைக் காலத்தைத் தவிர்த்து, மற்றக் காலத்தில் நீர்வழிப் போக்குவரத்து நடைபெற்றது. வேறு போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில், நீர்வழிப் போக்குவரத்து பரவலாகப் பயன்பட்டதில் ஆச்சரியமில்லை.
அதேபோலச் சாலைகளும் போக்குவரத்துக்குப் பயன்பட்டுள்ளன. அவற்றில் வடமேற்கிலிருந்து பாடலிபுத்திரத்துக்கு உள்ளே செல்லும் சாலை மிகவும் பிரபலமாக இருந்தது.
அந்தச் சாலை மிகவும் திட்டமிடப்பட்டு, சாலையின் இரு பக்கங்களிலும் நிழல் தரும் மரங்கள், வழிகாட்டிக் கம்பங்கள், பயணிகள் ஓய்வெடுக்கச் சத்திரங்கள், தண்ணீர் தருவதற்கான கிணறுகள் போன்றவை இருந்தனவாம். இன்றைய நெடுஞ்சாலைகளுக்கான சிறந்த முன்மாதிரியாக அந்தச் சாலை விளங்கியுள்ளது.

ரீசனிங் வினாக்கள்: தேவை அடிப்படை புரிதல்

வங்கித் தேர்வுகளுக்கான தேர்வுகளில் ரீசனிங் பகுதியில் கேட்கப்படும் கேள்விகளைப் பற்றிப் பார்ப்போம்.
போட்டியாளரின் பகுத்தாராயும் திறன், தர்க்கத் திறன் (Logical skill), ஏதாவது ஒரு வரையறையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டிருக்கும் படங்கள், குறியீடுகள், எண்களில் இருந்து தரவுகளையும், தகவல்களையும் புரிந்துகொள்ளும் திறன் (Ability to interpret) போன்ற திறமைகளை ஆராயும் வகையில் இந்தப் பகுதியில் வினாக்கள் கேட்கப்படுகின்றன.
ஒழுங்குபடுத்துதல் (Arrangement), தொடர் முடிவை கண்டுபிடித்தல் (Sequential Output Tracing), முடிவுக்கு வருதல் (syllogisms), தகவல் ஆய்வு (Data), சிக்கலான ஆராய்வு (Critical Reasoning), மாறுபட்டதை கண்டறிதல் (Odd-man out), காட்சி ஆராய்வு (Visual Reasoning) என ரீசனிங் பகுதியில் பல்வேறு பிரிவுகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும்.
கேள்விகளின் தன்மை
ஒழுங்குபடுத்துதல் பிரிவில் 12 முதல் 15 கேள்விகள் வரை கேட்கப்படுகின்றன. விடையளிக்க சற்று அதிக நேரம் எடுக்கும் பகுதி இது. இருப்பினும், கொடுக்கப்பட்டிருக்கும் படங்கள், அட்டவணைகள், தரவுகளை புரிந்துகொண்டால் விரைவாக விடையளித்து முழு மதிப்பெண்ணும் பெற்றுவிட முடியும். இப்பகுதியின் கேள்விகளுக்கு விடையளிக்க, விஷயங்களைப் புரிந்துகொள்ளும் திறன் இருந்தாலே போதும்.
தொடர்பு முடிவு கண்டுபிடிக்கும் பகுதியில் 4 முதல் 6 கேள்விகள் வரை கேட்கிறார்கள். எண்கள் அல்லது எழுத்துக்களைக் கொண்டு கேள்விகளை உருவாக்கியிருப்பார்கள்.
அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கக்கூடியதாகவும் இந்தப்பகுதி அமையும். சில நேரம் ஒரு கேள்விக்குக் கூட விடையளிக்க முடியாததாகவும் இப்பகுதியில் வினாக்கள் அமைந்துவிடுவது உண்டு.
கேள்விகளின் தன்மை பிடிபட்டுவிட்டால் பிறகு விடையளிப்பது எளிது. இதற்கு ஒருமுகப்படுத்தும்திறன் மிகவும் முக்கியமானது. ஒருசிறு தவறுகூட ஒட்டுமொத்தமாக அனைத்து கேள்விகளுக்கும் சரியாக விடையளிக்க முடியாமல் செய்துவிடும்.
விதிமுறை
முடிவுக்கு வருதல் பகுதியில் (syllogisms) 6 முதல் 8 கேள்விகள் இடம்பெறுகின்றன. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் ஒன்றுக்கொன்று இருக்கும் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. வாக்கியங்களைப் புரிந்துகொள்வதுடன் கேள்விகளின் தன்மையை நன்கு புரிந்துகொண்டு அதற்கேற்ப விடையளிக்க வேண்டியது அவசியம்.
ஏதாவது ஒரு விதிமுறை அடிப்படையில் பதில் அளிக்கக்கூடிய வகையில் வினாக்கள் அமைந்திருக்கும். அந்த விதிமுறை தெரியாமல் இப்பகுதி கேள்விகளுக்கு விடையளிக்க முடியாது.
தரவு (Data Sufficiency) பகுதியில் 4 முதல் 6 வினாக்கள் வரை கேள்விகள் இடம்பெறும். மேற்கண்ட பகுதியைப் போன்றே இதிலும் வாக்கியங்கள் கொடுக்கப்பட்டு கேள்விகள் கேட்கப்படும்.
ஆனால், கேள்விகள் கணிதம் சார்ந்து இல்லாமல் தர்க்கம் (Logic) தொடர்பானவையாக அமைந்திருக்கும். கேள்வியில் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கங்களை நன்கு புரிந்துகொண்டுவிட்டாலே பாதி விடையளித்தது போல்தான்.
கேள்வியின் அடிப்படை
விஷூவல் ரீசனிங் பிரிவில் 5 முதல் 10 வினாக்கள் வரை கேட்கிறார்கள். ஐந்தாறு படங்களைக் கொடுத்து அந்த தொடரின் தொடர்ச்சி எது, அல்லது அந்த தொடர்ச்சிக்குப் பொருந்தாதது எது என்ற வகையிலான கேள்விகள் இடம்பெறுகின்றன. கூர்ந்து உற்றுநோக்கும் திறன் இருந்தால் எளிதாக விடையளித்துவிடலாம்.
எண்களின் கூட்டல், கழித்தல் கொண்ட படங்கள், கடிகார முள் திசை பக்கம் நோக்கி அல்லது எதிர்திசை நோக்கிய நகர்தல், ஏதாவது கூடுதல் அடையாளம் இருத்தல் அல்லது ஏதாவது ஒன்று விடுபடுதல் என்பன போன்று படங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். படங்களின் அடிப்படை தன்மை பிடிபட்டுவிட்டால் விரைவாக விடையளித்துவிடலாம். அடிப்படைத்தன்மை புரியாவிட்டால் உடனடியாக அடுத்த கேள்விக்கு சென்றுவிடுவதுதான் புத்திசாலித்தனம்.
ஆய்வுத்திறன்
ரீசனிங் பகுதியில் கடினமான பிரிவாக கருதப்படுவது ‘கிரிட்டிக்கல் ரீசனிங்’ பிரிவுதான். பகுத்தாராயும் திறமை அதிகளவில் சோதிக்கப்படும் இப்பகுதியில் 6 முதல் 8 வினாக்கள் இடம்பெறுகின்றன. கேள்வியில் என்ன கேட்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டு தர்க்கம் மற்றும் ஆங்கில அறிவைப் பயன்படுத்தி விடையளிக்க வேண்டியதிருக்கும்.
அனுமானங்கள், காரணங்கள்-விளைவுகள், செயல்பாட்டு போக்கு, வாதங்களை உறுதிபடுத்தும் மற்றும் பலவீனப்படுத்தும் தன்மை, கண்டிப்பாக சரியா? அல்லது தவறா?, சரியாக இருக்கலாமா? அல்லது தவறாக இருக்கலாமா? என குழப்பும் வகையில் வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும்.
வெறுமனே தகவல்களை தெரிந்து வைத்திருப்பதுடன் ஆராய்ந்து பார்க்கும் திறனையும் வளர்த்துக்கொண்டால் ரீசனிங் பகுதியில் அதிக மதிப்பெண்கள் எடுப்பதில் சிரமம் இருக்காது. வினாக்களுக்கு விடையளித்துப் பயிற்சி பெறும்போது, அவற்றின் அடிப்படை விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அது தேர்வின்போது கைகொடுக்கும்.

மங்கள்யான் பெருமை தந்த தமிழ் விஞ்ஞானிகள்

செவ்வாய் கோளை மங்கள்யான் வெற்றிகரமாக ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்திருக்கும் இந்த நேரத்தில், அந்தத் திட்டத்தின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் என்பதும், அவர்கள் தமிழ் வழியில் படித்து உலகம் வியக்கும் இந்த முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறார்கள் என்பதும் கவனிக்க வேண்டியது.
மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் வெற்றி கரமாகத் நிறுத்தப்பட்டுவிட்டது. புகைப்படங்களை எடுத்து செவ்வாய் கோளை ஆராய்ச்சி செய்யும் பணியையும் மங்கள்யான் தொடங்கிவிட்டது. முதல் முயற்சியிலேயே இந்த விண்கலம் வெற்றியை அடைந்திருப்பது, சாதாரண விஷயமல்ல.
செவ்வாய்க்கு விண்கலத்தைச் செலுத்தி இருக்கும் நான்காவது நாடு இந்தியா; அதுவும் ஒரு வளரும் நாடு. உலக நாடுகளுக்கெல்லாம் இது ஆச்சரியமூட்டும் தலைப்புச் செய்தி. அதேநேரம், நமக்கு இது வெறும் செய்தி மட்டுமல்ல. நாட்டை பெருமிதத்தில் ஆழ்த்தும் உணர்வு.
இந்த வேளையில் இந்த வெற்றிக்குப் பின்னாலுள்ள விஞ்ஞானிகள் நினைவுகூரத்தக்கவர்கள். அவர்களில் மயில்சாமி அண்ணாதுரை, சுப்பையா அருணன் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
இவர்கள் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அதுமட்டுமல்ல சிறப்பு. இருவரும் தங்கள் பள்ளிக் கல்வியை தாய்மொழியில் பயின்றவர்கள். தாய்மொழியான தமிழ்வழிக் கல்வி புறக்கணிக்கப்படும் இந்தக் காலகட்டத்தில், இவர்களின் வெற்றியைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது அவசியம் ஆகிறது.
மயில்சாமி அண்ணாதுரை
2008 விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் - 1 விண்கலத் திட்டத்தின் இயக்குநர் இவர்தான். இந்த வெற்றியின் மூலம் மயில்சாமி அண்ணாதுரைக்கு இந்திய அளவிலான கவனம் கிடைத்தது. இவர், கோவை மாவட்டத்திலுள்ள கோதாவடி கிராமத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஓர் ஆசிரியர். தனது பள்ளிக் கல்வியைத் தாய்மொழியான தமிழிலேயே படித்தார்.
பொறியியல் இளநிலைப் பட்டப் படிப்பை அரசு தொழில்நுட்பக் கல்லூரியிலும், பொறியியல் முதுநிலைப் பட்டப் படிப்பை பூ.சா.கோ. தொழில்நுட்பக் கல்லூரியிலும் படித்தார். பொறியியல் துறையில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முடித்தார்.
இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவில் 1982-ல்அடிப்படை ஆய்வாளராகப் பணிக்குச் சேர்ந்தார். தனது தனிப்பட்ட திறமையால் படிப்படியாக உயர்ந்தார். அவரது அயராத உழைப்பால் சந்திரயான் -1 திட்டத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
தனக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்து, இந்தியாவின் முதல் நிலவு விண்கலனை வெற்றிகரமாகச் செலுத்தி நாட்டுக்குப் பெருமையைத் தேடித் தந்தார். அவரது வெற்றியின் தொடர்ச்சிதான் இந்த மங்கள்யான்.
மயில்சாமி அண்ணாதுரை தமிழ் மொழிப் புலமையும் கொண்டவர். பத்திரிகைகளில் தொடர்ந்து கட்டுரை எழுதிவருகிறார். வளரும் அறிவியல் என்ற அறிவியல் இதழின் கெளரவ ஆசிரியராக இருக்கிறார். தமிழ் மொழிக்கு அறிவியல் கலைச் செல்வங்களைக் கொண்டுவந்தால்தான் தமிழ் மொழி பிழைக்கும் என்றார் பாரதியார். இவரைப் போன்ற சிலரால் அது சாத்தியமாகிவருகிறது.
அருணன் சுப்பையா
அருணன் சுப்பையா, நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி கிராமத்தில் பிறந்தவர். இவர் மங்கள்யான் திட்ட இயக்குநராகச் செயல்பட்டு அந்த வெற்றிக் கூட்டணியில் தன் பெயரையும் இணைத்துக்கொண்டவர். இவரது தந்தை சுப்பையா, தலைமையாசிரியராகப் பணியாற்றியவர். அருணன், தன் பள்ளிக் கல்வியை திருக்குறுங்குடி என்னும் சிறிய கிராமத்தில் தமிழ் வழியில்தான் பயின்றுள்ளார்.
கோவையில் தொழில்நுட்பக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். 1984-ல் திருவனந்தபுரம் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சேர்ந்து பணியைத் தொடங்கினார். இன்று மங்கள்யான் திட்ட இயக்குநர் பதவிவரை தொடர்ச்சியாக முன்னேறி இருக்கிறார்.
இவர்கள் இருவரையும் தவிர சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்லூரியில் பயின்ற எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 14 பேர், இந்த வெற்றிக் கூட்டணியின் தலைமைப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். எண்ணற்ற பலரின் உழைப்பாலும், இவர்களது தலைமைத்துவத்தாலும் நம் நாட்டின் அறிவியல் வளர்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துவருகிறது.

ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான தயாரிப்புகள்

குடிமைப் பணிகளுக்கான முதனிலைத் தேர்வு முடிந்துவிட்டது.குடிமைப் பணிகளுக்கான முதனிலைத் தேர்வு மே மாத இறுதியில் நடப்பதே கடந்த ஆண்டுவரை வழக்கமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டில் ஆகஸ்ட் மாத இறுதியிலேயே நடந்தது. தேர்வை ஒத்திவைக்கச் சொல்லி தேர்வுக்கு முதல்நாள் வரைக்கும் மாணவர்கள் உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டி காத்து நின்றார்கள்.
ஆங்கில மொழியில் இடம்பெறும் பத்திகளைப் படித்து பொருள் உணர்ந்துகொள்ளும் வகையில் அமைந்த ஆறு கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தேவையில்லை என்று சொல்லி யு.பி.எஸ்.சி ஒதுங்கிக் கொண்டுவிட்டது. இந்தி மட்டுமே அறிந்த மாணவர்களுக்கு இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி. ஆனால் இந்தி அறியாத மற்ற மொழிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இது வருத்தமான செய்தியாகவே முடிந்தது. எப்படியோ ஒருவழியாய் முதனிலைத் தேர்வு முடிந்துவிட்டது.
என்னவாகுமோ?
மாதக்கணக்கில் தேர்வுக்காக உழைத்திருப்பார்கள். தேர்வு எழுதி முடித்ததும் முடிவு என்ன ஆகுமோ என்று பதற்றம் கொள்வது இயல்பு.
முன்பெல்லாம் சரியான பதில்களை அறிந்துகொள்வதற்கு மாத இதழ்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இப்போது தேர்வு எழுதிய தினத்திலேயே பயிற்சி மையங்கள் தங்களது இணைய தளங்களில் சரியான விடைகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டுவிடுகின்றன.
ஒவ்வொரு பயிற்சி நிறுவனமும் வெளியிடும் பதில்களில் சில மாறுபாடுகள் இருக்கலாம். எனவே ஒரு பயிற்சி மையம் வெளியிடும் பதில்களை மற்றவற்றுடன் ஒப்பிட்டும் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் டி.என்.பி.எஸ்.சி. முன்னத்தி ஏராகவே இருக்கிறது. தேர்வு முடிந்த அடுத்த சில நாட்களில் தேர்வாணையமே சரியான பதில்கள் என்னென்ன என்ற பட்டியலை வெளியிட்டுவிடுகிறது. யு.பி.எஸ்.சி.யும் இந்த முறையைப் எப்போது பின்பற்றும் என தெரியவில்லை.
கட்-ஆப் மதிப்பெண்
நடந்து முடிந்த முதனிலைத் தேர்வில் ஆறு கேள்விகளுக்கான மதிப்பெண்கள் கணக்கில் வராது என்பதால் கடந்த ஆண்டைவிட கட்-ஆப் மதிப்பெண் கொஞ்சம் குறைவாக இருக்கும் என்பதாக ஒரு கணிப்பு நிலவுகிறது.
கடந்த ஆண்டுகளின் கட்- ஆப் மதிப்பெண்களோடு ஒப்பிட்டுப் பார்த்து சராசரி மதிப்பெண்ணைவிட கூடுதலாக இருப்பவர்கள் இந்நேரம் உற்சாகமாக முதன்மைத் தேர்வுக்கான தயாரிப்பில் இறங்கியிருப்பார்கள். நிச்சயம் வாய்ப்பில்லை என்று உணர்ந்தோரும் சற்றே மனம் வருந்தி இயல்பு நிலைக்குத் திரும்பியிருப்பார்கள்.
ஆனால் கடந்த ஆண்டின் சராசரி கட்- ஆப் மதிப்பெண்களோடு ஒப்பிட்டு ஏறக்குறைய அதையொட்டி நிற்பவர்கள் குழப்பத்திலேயே இருப்பார்கள்.
வாய்ப்புகள்
அவர்கள் முன்னால் இரண்டு வாய்ப்பிருக்கிறது. ஒன்று தேர்ச்சி அடைவதற்கான வாய்ப்பு. அதன்படி தேர்வு முடிவுக்காக அவர்கள் காத்திருந்து தேர்வாகியும்விட்டால் அப்போது அவசரம் அவசரமாக முதன்மைத் தேர்வுக்கு தயாராக வேண்டியிருக்கும்.
அவர்களோடு போட்டியில் பங்குபெறும் மற்ற மாணவ்ர்கள் ஏற்கெனவே தேர்வுக்குத் தயாராகிவிட்டார்கள். ஒருவேளை தேர்வு பெறாமல் போவதற்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு தேர்வு பெறாவிட்டாலும் முதன்மைத் தேர்வுக்கான தயாரிப்பு வீணாகிவிடாது. அடுத்த முறை முதன்மைத் தேர்வுக்கு தயாராகும்போது எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பாடச்சுமையை முன்கூட்டியே கொஞ்சம் குறைத்துக்கொள்ளலாம்.
முதன்மைத் தேர்வுகளில் விருப்பப்பாடங்களின் ஆதிக்கம் குறைந்துவிட்டது. எனவே வழக்கம்போல வரலாறு, புவியியல், அரசியலமைப்பு, பொருளாதாரம், சுற்றுச்சூழல் முதலிய துறைகளைத் தொடர்ந்து படிக்கலாம். ஒருவேளை இந்த ஆண்டு முதன்மைத் தேர்வுக்குப் பயன்படாவிட்டாலும் அடுத்த ஆண்டு முதனிலைத் தேர்வுக்கும் முதன்மைத் தேர்வுக்கும் நிச்சயம் பயன்படும்.
குடிமைப்பணிகளுக்கு மட்டும் அல்ல. முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு நிலைகளில் நடக்கும் அனைத்துத் தேர்வுகளுக்குமே இந்தத் திட்டமிடுதல் பயனளிக்கும்.

வேலை வேண்டுமா?- ஓ.என்.ஜி.சியில் காலியிடங்கள்

ஓஎன்ஜிசி எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் ட்ரெய்னி இன்ஜினீயர் பணிக்கான பொறியியல் பட்டதாரிகள் கேட் (GATE 2015) தேர்வு வழியாகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். விண்ணப்பிப்பதற்கான காலம் அக்டோபர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
காலிப் பணியிடங்கள்: 745. இதில் மெக்கானிக், சிவில், கெமிக்கல் உள்ளிட்ட பல பிரிவுகள் அடங்கியுள்ளன.
வயது: டிரில்லிங்க், சிமெண்டிங் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க, 2015 ஜனவரி ஒன்று அன்று, பொதுப்பிரிவினர் 28 நிரம்பியவர்களாகவும், ஓபிசியினர் 31 வயது நிரம்பியவர் களாகவும், எஸ்சி, எஸ்டியினர் 33 வயது நிரம்பியவர்களாகவும் இருக்க வேண்டும். பிற பணி களுக்கு பொதுப் பிரிவினர் 30 வயதும், ஓபிசியினர் 33 வயதும். எஸ்சி,எஸ்டியினர் 35 வயதும் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை: கேட் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் பொறியியல் பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கேட் தேர்வுக்கு http://gate.iitk.ac.in/GATE2015/ என்னும் இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கேட் தேர்வுக்கான கல்வித் தகுதி: பி.இ., பி.டெக், பி.ஆர்க்., பி.பார்ம்., பி.எஸ்சி, அல்லது எம்.எஸ்சி, எம்.ஏ., எம்.இ., எம்.டெக். போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: ஆண்களில் பொதுப்பிரிவினர், ஓபிசியினர் ஆகியோருக்கு ரூ. 1500, எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கும் பெண்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ரூ. 750. தேர்வுக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்.
கேட் தேர்வில் கலந்துகொண்ட பின்னர் அந்தப் பதிவு எண்ணைக் கொண்டு http://www.ongcindia.com/என்னும் ஓஎன்ஜிசி இணையதளத்தில் ஜனவரி (மாறுதலுக்குட்பட்டது) முதல் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நாள்கள்:
விண்ணப்பம் தொடங்கும் நாள்: 01.09.2014
விண்ணப்பம் நிறைவுபெறும் நாள்: 01.10.2014 (14.10.2014 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது)
கேட் 2015 தேர்வு: 31.01.2015 – 14.02.2015
ஓஎன்ஜிசி விண்ணப்பம் தொடங்கும் நாள்: ஜனவரி 2015 (மாறுதலுக்குட்பட்டது)
கேட் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள்: 12.03.2015
நேர்காணல் தொடங்கும் நாள்: மே 2015 (மாறுதலுக்குட்பட்டது)

பேஸ்புக், ட்விட்டரில் தமிழக சுற்றுலாத்தல விவரங்கள்: சுற்றுலா பிரியர்களைக் கவர தீவிர முயற்சி

சுற்றுலா பிரியர்களை கவரும் விதமாக தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்கள் பற்றிய விவரங்களை ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரபலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
சுற்றுலாவின் மூலம் அதிக வருவாய் ஈட்டக் கூடிய மாநிலங்களில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கடற்கரை, மலைப் பிரதேசங்கள், பாரம்பரியமிக்க கோயில்கள், கலை நயம்மிக்க சிற்பங்கள் என பல்வேறு வகையான சுற்றுலா அம்சங்கள் தமிழகத்தில் நிறைந்துள்ளன. இதனால் வெளிநாடு மற்றும் உள்நாட்டை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தமிழகத்துக்கு விரும்பி வருகிறார்கள். தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்தாண்டு 24 கோடியே 82 லட்சம் பேர் இங்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் பிரபலமற்ற சுற்றுலாத் தலங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, தமிழ்நாடு சுற்றுலாத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி தமிழக சுற்றுலாத் தலங்கள் பற்றிய விவரங்கள் சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.
இது தொடர்பாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூத்த அதிகாரிகள் கூறியதாவது:
ஏழை பணக்காரர் வித்தியாசமின்றி இளைஞர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை பலரும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர். பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் கருத்துகளும் தகவல்களும் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சில அறியப்படாத சுற்றுலாத் தலங்களை பிரபலப்படுத்தும் நோக்கில் ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் சுற்றுலாத் தலங்களைப் பற்றிய விவரங்களை வெளியிடும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்காக கடந்த 2010-ம் ஆண்டே பேஸ்புக்கில் தனிப்பக்கம் தொடங்கப்பட்டது. ஆனால் அதில் அதிக விவரங்கள் கிடையாது. எனவே, தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள முக்கிய மற்றும் அறியப்படாத சுற்றுலாத் தலங்களை விவரிக்கும்படியான, பக்கத்தை உருவாக்கவுள்ளோம். சம்பந்தப்பட்ட சுற்றுலாத் தலங்களில் புகைப்படம், அதன் அமைவிடம், போக்குவரத்து வசதி போன்றவை இதில் இடம்பெறவுள்ளன.
தமிழகத்திலுள்ள சுற்றுலா குறித்து கண்காட்சிகள் நடத்தியோ, ஒருவரை தேடிச் சென்றோ கூறுவதைக் காட்டிலும், இப்படி சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தும்போது அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழக சுற்றுலாத் தலங்கள் பற்றிய பக்கத்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பராமரிப்பார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

நடப்பு ஆண்டில் இந்தியருக்கு நோபல் பரிசு?

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான இயற்பியல் விஞ்ஞானி ராமமூர்த்தி ரமேஷுக்கு நடப்பு ஆண்டிற்கான நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தற்போது ராமமூர்த்தி ரமேஷ் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். 2014-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவதற்கான வாய்ப்புள்ள விஞ்ஞானிகள் பட்டியலை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இப்பட்டியலில் ராமமூர்த்தி, கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் ஜேம்ஸ் காட், டோக்கியோ பல்கலைக்கழக பேராசிரியர் யோஷினோரி டோகுரா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

பெங்களூர் ஐ.ஐ.டி.யில் படித்த ராமமூர்த்தி, சென்னையை சேர்ந்தவர் ஆவார். பின்னர், 1987-ம் ஆண்டு அமெரிக்காவின் பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மெட்டீரியல் சயின்ஸ் பிரிவில் பி.எச்.டி ஆராய்ச்சி மேற்கொண்டார். 2004-ம் ஆண்டு அந்த பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக சேர்ந்தார். காம்ப்ளக்ஸ் ஆக்ஸைடுகள் பற்றிய ஆராய்ச்சியில் இவர் ஈடுபட்டுள்ளார்.

அவர் கூறியதாவது: “இந்த பட்டியலில் எனது பெயர் இடம்பெற்றிருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். எனினும், இது ஒரு ஊகம்தான். இதை தீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஒருவேளை எனக்கு நோபல் பரிசு கிடைத்தால், அதை மனித குலத்துக்கும், அறிவியல் துறைக்கும் சமர்ப்பிக்க விரும்புகிறேன்” என்றார்.

இயற்பியல் துறையில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிக்கான நோபல் பரிசு வரும் 7-ம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

Friday 26 September 2014

வரலாற்று அறிஞர்கள் அறிவோம்: ஜவஹர்லால் நேரு

ந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியாகவும், அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவராகவும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான "நவீன இந்தியாவின் சிற்பி" பாரத ரத்னா ஜவகர்லால் நேரு அவர்களைப் பற்றிய தகவல்களை சுருக்கமாக இந்த பகுதியில் பார்ப்போம்.
பிறப்பு: 14.11.1889 அன்று உத்திரப் பிரதேச மாநிலம்  (அலகாபாத் ஆனந்தபவன்)
இறப்பு: 27.05.1964
பெற்றோர்: மோதிலால் நேரு - சொரூபராணி
கல்வி: பள்ளிப் படிப்பை முடித்தும் கேம்பிரிட்சு பல்கலைகழக நுழைவுத் தேர்வுகளை 1907 இல் எழுதி, திரினிட்டி கல்லூரி சென்று இயற்கை அறிவியல் படித்தார். நேரு, அவருடைய திரைபோசில் இரண்டாவது இடம் பெற்று 1910 இல் பட்டம் பெற்றார். தந்தை வேண்டுகோளுக்காகப் சட்டம் படித்த நேரு, 1912 - இல் வெற்றிபெற்று, இன்னர் டெம்பில் ஆண்டின் இறுதியில் சட்டத்துறைக்கு அழைக்கப்பட்டார். சட்டப் பணிசெய்ய விரைவில் இந்தியா திரும்பினார்.
அரசியல் குரு: மகாத்மா காந்தியை அரசியல் குருவாக ஏற்றவர்.
தொழில்: வழக்கறிஞராக தொழில் புரிந்தார்.
திருமணம்: 1916 பிப்ரவரி 8 ஆம் தேதி கமலா கவுல் என்ற காஷ்மீரி பிராமணப்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இந்திராபிரியதர்ஷினி என்ற மகள் பிறந்தார், பின்னாளில் அவர் இந்திரா காந்தி என்று அழைக்கப்பட்டார்.
1920 - இல் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தற்காக 1921 இல் நேரு முதல் முறையாகச் சிறைக்கு சென்றார். 1922ல் அப்போராட்டத்தை விலக்கியதால் நேரு விடுவிக்கப்பட்டார். அவருடைய போராட்டம் சத்தியாகிரக முறையில் இருந்தாலும், அவர் வாழ்நாளில் 9 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டிவந்தது.
1936 - இல் சுதந்திர இயக்கத்தில் ஆர்வமாக செயல்பட்டு வந்த கமலா நேரு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
நூல்: நேரு உலக வரலாற்றின் காட்சிகள் (1934), சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார்.
பத்திரிக்கை: நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிக்கையை 1938 ஆண் ஆண்டு துவக்கினார். அப்பத்திரிக்கை 2008 ஆம் ஆண்டு மூடப்பட்டது.
சிறப்பு பெயர்: இந்தியாவின் ஆபரணம், ரோஜாவின் ராஜா, ஆசிய ஜோதி என அழைக்கப்படுபவர்.
விடுதலை போராட்டத்தில் நேரு:
1912 - இல் பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.
1916 - இல் லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் காந்தியை முதன்முதலாக சந்தித்தார்.
1916 - இல் கமலா கவுல் என்பவரை மணந்தார்.
1916 - இல் கிஷான் சபையின் துணைத்தலைவரானார்.
1917 - நவம்பர் 19 அன்று இந்திரா பிரியதர்சினி பிறந்தார்.
1919 - 1932 வரை The Independent என்ற செய்தித்தாளை நடத்தினார்.
1929 - இல் காந்தியின் வழிகாட்டுதலின் படி லாகூர் காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமைத் தாங்கி நடத்தினார். பூரண சுயராஜ்ஜியம் தீர்மானத்தை நிறைவேற்றினார்.
1937 - பெய்ஸ்பூர் - காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைமை வகித்தார். (கிராமத்தில் நடந்த முதல் மாநாடு).
1940 -இல் தனிநபர் சத்யாகிரகத்தின் பொது ஆச்சார்ய வினோபாபாவேவிற்கு அடுத்து இரண்டாவதாக கைது செய்யப்பட்டார்.
தனது சயசரிதையை "AN Autobiography" என்ற தலைப்பில் எழுதினார். (Toward Freedom என்ற பெயராலும் இந்நூல் அறியப்படுகிறது).
1945 - ஜூன் 15 ஆம் தேதி நேரு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக கைது செய்யப்பட்டார்.
1947 - ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தபோது "விதியோடு செய்து கொண்ட ஒப்பந்தம்" என இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையையும், "உலகம் உறங்கும்போது இந்தியா விழித்துக்கொண்டது" எனவும் வர்ணித்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக மெளண்ட்பேட்டன் பிரபுவால் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.
நேருவின் முக்கியமான சாதனைகள்:
1950 - மார்ச் 15 நேரு தலைமையில் தேசிய திட்ட கமிஷன் அமைக்கப்பட்டது.
1951 - இல் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.
1952 - இல் முதல் பொதுத் தேர்தல்.
1952 - இல் முதல் ராஜ்ய சபா தேர்தல்.
1952 - இல் முதல் பாராளுமன்றம் கூடியது.
1952 - இல் தேசிய வளர்ச்சிக் குழு துவக்கம்
1953 - இல் UGC அமைக்கப்பட்டது.
1954 - இல் பஞ்ச சீலக் கொள்கையை வெளியிட்டார்.
தீன் மூர்த்தி பவன் - நேரு பிரதமராக இருந்த காலத்தில் அவருடைய இல்லமாகவும், தற்போது அவர் நினைவாக அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவின் பெருமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றைக செயல்பட்டு வருகிறது.

Pincode System In India

Pincode System In India 

First Digit—Region— States Covered 
1— Northern- Delhi, Haryana, Punjab, Himachal Pradesh and Jammu & Kashmir 
2— Northern- Uttar Pradesh and Uttaranchal 
3— Western- Rajasthan and Gujarat 
4— Western- Maharashtra, Madhya Pradesh and Chattisgarh 
5— Southern- Andhra Pradesh and Karnataka 
6— Southern- Kerala and Tamil Nadu 
7— Eastern- West Bengal, Orissa and North Eastern
8— Eastern- Bihar and Jharkand
9— APS- Army Postal Service

IMPORTANT SUMMITS

IMPORTANT SUMMITS 

1.BRICS summit ( Brazil, Russia, India, China, South‐Africa.) :-
● 5th Summit 2013 : (Durban) South Africa:
● 6th BRICS Summit 2014: to be held in Fortaleza, Brazil from 15‐17 July 2014.
● Next 7th BRICS Summit to be held in Ufa, Russia

2. BIMSTEC Summit :-
● 3rd BIMSTEC summit 2014: Nay Pyi Taw (Myanmar)
● 4th BIMSTEC summit will be held in Nepal.

3. Nuclear security summit :-
● 2nd Summit 2012 – Seoul, South Korea.
● 3rd Summit 2014 - Hague, Netherland
● 4th Summit 2016 - United States

4.G 8 Summit :-
● 39th Summit 2013: United Kingdom. (Northern Ireland)
● G‐8 Countries: Canada, France, Germany, Italy, Japan, Russia, Britain and the US.
● 40th G‐7 summit 2014 held at Brussels.

5. G 20 Summit :-
● G‐20 meeting (2014) of Finance ministers and central bank governors held in Sydney (Australia).
● G20 Leaders Summit (2014) will be held in Brisbane, Queensland Australia, in November 2014.

6. SAARC Summit :-
● 3rd SAARC ministerial meet on poverty alleviation 2013 Kathmandu (Nepal)

● 18th SAARC Summit 2014‐ Kathmandu (proposed)

7. NATO Summit :‐
● NATO Summit 2014 will be held in Britain. (Britain last hosted the summit in 1990, when Margret Thatcher was Prime Minister).

8. IBSA Summit :-
● India will host the next summit of IBSA (India, Brazil, South Africa) in New Delhi in 2015.

#OTHERS_SUMMITS
● 18th BASIC Ministerial Meeting held in New Delhi.
BASIC - (Brazil, South Africa, India and China)
Note : 17th Meeting on Climate Change was held in Hanzghou, China

● ASEAN foreign-minister-meeting held in Myanmar.

● Fifth Indo-US Strategic Dialogue held in New Delhi during which
the two sides discussed “transformative initiatives” in key areas of
security and energy.

● 3rd India-Africa Summit will be held in New Delhi.

● 6th International Nuclear Energy Forum ATOMEXPO-2014 held
in Moscow.

● World Economic Forum 2014: held in Abuja (Nigeria). Bharti Enterprises founder and Chairman Sunil Bharti Mittal co– chair this year’s edition of the World Economic Forum on Africa.

வரலாற்று அறிஞர்கள் அறிவோம்: பாலகங்காதர திலகர்

மொகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட விவரிக்க இயலாத துன்பத்திற்கு எதிராகவும், இந்து ராஜ்ஜியம் அமையவும் தோன்றிய மாவீரன் சத்ரபதி சிவாஜி. அதேபோல், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக “சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம்” என சுள்ளென உறைக்கும் வகையினில் சிங்கநாதம் செய்தவர் ‘இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை’ என கருதப்படும் லோகமான்ய பாலகங்காதர திலகர்.

பிறப்பு: 1856 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23-ம் தேதி மராட்டிய மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள கிசல் என்ற கிராமத்தில் பார்வதி பாய் - கங்காதர சாஸ்திரி தம்பதியாருக்கு மகனாகப் பிறந்தார். திலகரின் தந்தை சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற பண்டிதர். இவர் ஆசிரியப் பணியில் ஈடுபட்டு 1886ம் ஆண்டு தொடக்கப்பள்ளித் துணை ஆய்வாளராகவும் இருந்து வந்தார். திலகர், 'கேசவராவ்' என்று மூதாதையர் பெயராலும், செல்லமாக 'பாலன்' என சிலரால் அழைக்கப்பட்டார்.

கல்வி: திலகர் 5ஆம் வயதில் பூனா நகரில் செயல்பட்டு வந்த திலகர் பள்ளியில் சேர்க்கப்பட்டார். சமஸ்கிருதத்திலும் கணிதத்திலும் சிறந்து விளங்கிய திலகர் டெக்கான் கல்லூரியில் 1877 ஆம் ஆண்டு முதல் மாணவராக இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றார். சட்டம் படிக்க முடிவு செய்து சட்டக் கல்லூரிக்கு விண்ணப்பித்தார். அப்போது சிலர், “நீ கணிதத்தில் சிறப்பாக உள்ளாய். எனவே அதையே சிறப்புப் பாடமாக படித்தால் நல்ல எதிர்காலம் ஏற்படும்” என்று கூறினார்கள்.

அதற்கு, “சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவோர் அடிக்கடி கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர். அவர்களுக்காக வாதாடி அவர்களை காப்பாற்ற வேண்டும். அதையே என் நாடு என்னிடம் எதிர்பார்க்கிறது. அதற்காகவே நான் சட்டம் படிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

திலகர் குடும்ப வழக்கப்படியே தலைப்பாகை, அங்கவஸ்திரம், காலணி ஆகியவையும் அணிந்து வந்தார். எந்தக் காலத்திலும் தனது பாரம்பரிய பழக்கவழக்கங்களை மாற்றாமல் பின்பற்றி வந்த திலகர் கல்லூரிக் காலத்திலும் அதையே பின்பற்றி வந்தார்.

பரந்துபட்ட பல துறையில் ஈடுபாடு கொண்ட திலகர் வைராக்கியத்தின்படி வழக்கறிஞராகி சிறையிலிருந்த பல தேச பக்தர்களை விடுதலையடைய செய்தார். அந்நியக் கல்வி முறையை கடுமையாக எதிர்த்த திலகர், அதற்கு மாற்றாக இந்திய கல்விமுறையில் கல்வி புகட்ட விரும்பி சில நண்பர்களுடன் சேர்ந்து ‘நியூ இங்லீஷ் ஸ்கூல்’ என்ற பெயரில் பள்ளிக்கூடம் தொடங்கினார். இப்பள்ளியின் மூலம் தேசிய உணர்வையும் தட்டி எழுப்பினார்.

விடுதலைப் போராட்டத்தில் திலகர்: 1881 ஆம் ஆண்டு, திலகர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து “கேசரி” என்னும் மராத்தி மொழி பத்திரிக்கையும் மற்றும் “மராட்டா” என்னும் ஆங்கில மொழி பத்திரிக்கையும் தொடங்கி, ஆங்கில அடக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றை வெளியிட்டது. தலையங்கத்தில் ஆங்கில அரசின் கீழ் பாரத மக்கள்படும் துன்பங்களைக் குறித்து வெளியிட்டார். இரண்டே ஆண்டுகளில் “கேசரி” இந்தியாவிலேயே அதிகம் விற்பனை கண்ட பத்திரிக்கையாக மாறியது. இந்த பத்திரிக்கைகளில் மக்களுக்கு சுதந்திர விழிப்புணர்வை ஊட்டும் விதமாக பல கட்டுரைகளை வெளியிட்டது. பத்திரிகை விற்பனை நாடு முழுவதும் சூடு பிடித்தது. இது ஆங்கிலேயருக்கு அச்சத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது. இதனால், ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மக்கள் ஒவ்வொருவரும் வீறு கொண்டு எழுந்து போராட துடித்தனர். கோலாப்பூர் சமஸ்தான நிர்வாகத்தினரிடம் ஆங்கிலேயரின் கொடுமையை 'கேசரி' இதழில் வெளியிட்டதற்காக 4 மாத சிறை தண்டனை பெற்றார். இதுவே அவரின் முதல் சிறை அனுபவம். விடுதலை செய்யப்பட்ட பின் 1880ல் நண்பர்களுடன் சேர்ந்து 'டெக்கான் எஜூகேசனல் சொசைட்டி'யை ஏற்படுத்தினார். பின்னாளில் இதுவே ‘பெர்க்யூஷன் காலேஜ்’என்று விரிவுபடுத்தப்பட்டது.

அரசியல் வாழ்க்கை: 1885 ஆம் ஆண்டு திலகர் காங்கிரஸில் சேர்ந்தார். 1896 ஆம் ஆண்டு பஞ்சாபில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. 1897ல் பிளேக் நோய் பூனாவில் மிகவும் தீவிரமாக பரவியது. சிகிச்சைக்காக பல போராட்டங்களில் ஈடுபட்டும் பலன் இல்லாமல், அவரே சுகாதார நிலையங்களை திறந்து மக்கள் துயர் துடைத்தார். அதனை தடுப்பதற்கு, எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த இரக்கமற்ற ஆங்கில அரசு, விக்டோரியா மகாராணியின் வைர விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதை திலகர் எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், கண்டித்து பத்திரிக்கைகளிலும் எழுதினார். இந்தக் கட்டுரைகளை காரணம் காட்டி 1897 ஆம் ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது ஆங்கில அரசு. சிறைவாசத்தில் அவர் உடல் நிலை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியது. சிறைவாசத்திலிருந்து மீண்டபோது, மக்கள் அவரை ‘லோகமான்யர்’ என்று அழைத்தனர்.

விடுதலைக்குப் பின், சுதந்திரப் போராட்டத்தில் தீவிரம் காட்டிய திலகர் 1898ம் ஆண்டு சென்னை மற்றும் 1899ம் ஆண்டு லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார். இதற்கு அடுத்த ஆண்டு லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். பின்பு பர்மா சென்று வந்தார். அரசியலில் தீவிரமாக செயல்பட்ட திலகர், அப்போது பத்திரிகையில் புரட்சிகரக் கருத்துகளைப் புகுத்திவந்தார். அரசியலில் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தார். 'அந்நிய துணிகளை அணிய வேண்டாம், பஞ்ச காலத்தில் வரி கட்ட வேண்டாம்' என எடுத்துரைத்தார். தீவிர எண்ணம் கொண்டவர்கள் திலகர் மீது நம்பிக்கை வைத்தார்.

1907ல் நாக்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், அக்கட்சி ‘மிதவாதிகள்’, ‘தீவிரவாதிகள்’ என இரு பிரிவுகளாக பிரிந்தது. திலகரின் தலைமையில் உருவான தேசப்பற்றாளர்கள், தீவிர கருத்துடையவர்களாக அந்நிய ஆட்சியை எதிர்த்து தீவிரமாக செயல்பட்டனர்.  இதன் பிறகு மிதவாதிகளுக்கு ஆதரவு குறையத் தொடங்கியது. தீவிர கருத்துடைய திலகர் போன்றோர் மீது மதிப்பும் மரியாதையும் கூடியது. அந்நிய ஆட்சியை, வன்முறையை கைக்கொண்ட இளைஞர்கள், அரசினை கவிழ்க்க பயங்கரவாத இக்கங்களை தொடங்கினர்.

இப்படிப்பட்ட செயல்களுக்கு காரணம் காங்கிரஸ் தீவிர  தலைவர்களே என கருதிய ஆங்கில அரசு, கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. போன்றோரை கைது செய்தது. வ.உ.சி. கைது செய்யப்பட்டதை எதிர்த்து கண்டன குரல் எழுப்பிய திலகரும், தண்டிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் ரங்கூன் மண்டேலா சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இந்த நாட்களில் சிறைச்சாலையை தவச்சாலையாக்கி, ‘கீதா ரகசியம்’ என்ற நூலை எழுதினார். ஏற்கனவே நலிவடைந்திருந்த அவர் மேலும் நலிவுற்று 16.06.1914 அன்று விடுதலை அடைந்தார்.

திலகரின் தீவிர கருத்தினைக் கொண்டு நேதாஜி செயல்பட்டார். கோகலேயின் மிதவாத கருத்தால் மகாத்மா காந்தி செயல்பட்டார். மகாத்மாவின் அகிம்சைப் போராட்டத்திற்கு திலகரின் தன்னாட்சிக் கொள்கையை ஏற்று மக்கள் போராட்டம் நடத்தினர்.

நாட்டின் குடிமக்கள் அனைவரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டால்தான் சீக்கிரத்தில் சுதந்திரம் கிடைக்கும் என்ற  திலகர், சத்திரபதி சிவாஜி விழாவுக்கு புத்துயிர் கொடுத்து நாட்டு மக்களுக்கு தேசபக்தியை உணத்தினார். மக்கள் வீடுதோறும் குடும்பவிழாவாக கொண்டாடிவந்த விநாயகர் சதுர்த்தி விழாவை சமுதாய விழாவாக்கி, அவ்விழாவில் சுதந்திர ஆர்வத்தை உணர்த்தி, மக்களிடம் தேசபக்தியைப் பொங்கச் செய்தார்.

1919 ஆம் ஆண்டு ரௌலட் சட்டம் வந்தது. அதை எதிர்த்து மக்கள் போராடினர். அப்படி ஜாலியன் வாலாபாக் திடலில் நடைபெற்ற போராட்டத்தில் கூடியிருந்த ஆயிரக் கணக்கான மக்களை ஜெனரல் டயர் சுட்டான். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஒத்துழையாமை இயக்கம் நடந்தது. இந்நிலையில் பிரித்தாளும் சூழ்ச்சியாக, ஆங்கில அரசு இந்தியாவுக்கு சிறிது சிறிதாக சுயாட்சி அளிப்பதாக கூறியது. அப்போது,  காந்தியடிகள் அரசியலில் பங்கு பெற்றுவந்தார். இவரைக் குறிப்பிட்டு, “இந்தியாவுக்கு எதிர் காலத்தில் அவர் ஒருவரே தலைவராக இருக்கத் தகுதியுடையவர்” என்று திலகர் தெரிவித்தார்.

இறப்பு: ஆங்கில ஆட்சியை எதிர்த்து தீவிரமாகப் போராடி, “சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என முழங்கிய திலகர், கல்வி தேசத்தொண்டு, பத்திரிக்கை என பல வழிகளில் இந்திய மக்கள் அனைவரின் மனத்திலும் விடுதலை நெருப்பை பற்றவைத்தவர். ஒவ்வொரு இந்தியனையும் தன்னுடைய உரிமைக்காகவும், விடுதலைக்காக போராடத் தூண்டிய திலகர், கடைசிவரை தான் கொண்ட லட்சிய வேட்கை மாறாத திலகர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ஆகஸ்ட் 1, 1920 ஆம் ஆண்டு தன்னுடைய 64 வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

முக்கிய நிகழ்வுகள்:

* இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் தலைவர் இவரே.

* இவருக்கு லோகமான்யா என்ற பட்டப் பெயர் உண்டு.

* சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன் என முழங்கியவர்.

* முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். மக்களிடம் அதிக செல்வாக்கு பெற்றிருந்தார். திலக் மகாராஜா எனவும் அழைக்கப்பட்டார்.

* மராத்தா (ஆங்கிலம்), கேசரி (மராத்தி) என்ற இரு பத்திரிகைகளை நடத்தினார்.

* 1889 - இல் காங்கிரஸில் சேர்ந்தார்.

* 1893 - இல் மக்களிடையே நாட்டுபற்றை வளர்க்க கணபதிவிழா நடத்தினார்.

* 1895 - இல் சிவாஜி விழாவையும் நடத்தினார். இதனால் மக்களிடையே ஏற்பட்ட ஒற்றுமை ஆங்கில அரசாங்கத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

* 1907 - இல் காங்கிரஸ் தீவிரவாதிகள், மிதவாதிகள் என பிரிந்த போது தீவிரவாதிகளின் தலைவராகத் திகழ்ந்தார்.

* 1908 - இல் முசாபர்பூரில் பிரபுல்ல சாகி, குதிராம் போஸ் என்ற இரண்டு வங்க இளைஞர்கள் டக்ளஸ் கிங்ஸ்போர்ட் என்ற மாஜிஸ்ட்ரேட் மீது குண்டு வீசினர். அதில் கென்னடி என்பரவரது மனைவியும், மகளும் கொல்லப்பட்டனர். இதனால் இருவரையும் ஆங்கில அரசு தண்டித்தது. ஆனால் திலகர் இவர்களைப் பாராட்டி கேசரி இதழில் தலையங்கம் எழுதியதால் 1908 - 1914 வரை பர்மாவில் உள்ள மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டார்.

* 1914 - இல் விடுதலை பெற்று 1916 - இல் பூனேயில் தன்னாட்சி இயக்கம் (All India Home Rule League) தொடங்கினார்.

* கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடையே சுயராஜ்ஜியிம் குறித்துப் பேசினார். 1919 - இல் இங்கிலாந்து சென்றார். அங்கு லேபர் கட்சி தலைவர்களுடன் இந்திய சுதந்திரம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.

* 1920 - ஜூலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 01 ஆம் தேதி இறந்தார்.

* 1908 ஆம் ஆண்டில் பால கங்காதர திலகர் நினைவாகச் சென்னை மெரினா கடற்கரையில் சென்னை மாநிலக் கல்லூரி எதிரில் திலகர் திடல் உருவானது. இப்பெயரைச் சுப்பிரமணிய சிவா முன்மொழிந்தார். சுப்பிரமணிய பாரதி வழிமொழிந்தார். விடுதலைப் போராட்ட வீரர்கள் பலரும் இங்கிருந்தே உத்வேகம் பெற்றுள்ளனர்.

இந்த இடத்தில் மகாம்தா காந்தி 7 முறை பேருரையாற்றியது வரலாறு. ஆங்கிலேயருக்கு எதிராக முதன்முதலில் ஒத்துழையாமை இயக்கம் பற்றிய செய்தியை இந்த இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில்தான் காந்தி குறிப்பிட்டார்.  இதன் பின்னரே இந்தப் போராட்டம் குறித்த தீர்மானம் கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

* திலகர் திடல் சரித்திரத்தையும் நினைவுகளையும் இல்லாமலாக்க அந்த இடத்திற்கு சீரணி அரங்கம் என இடையில் பெயரிட்டனர். வழக்கு போடப்பட்டு தற்போது திலகர் கட்டம் நினைவு கல்வெட்டு நிறுவ உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் தற்போது மெரினா கடற்கரையில் 'திலகர் திடல்' கல்வெட்டு தற்போது நிறுவப்பட்டுள்ளது.

சுதந்திரம் அடைந்த இக்காலத்திலும் சுதந்திர உணர்வை மங்கச் செய்யும் சதிகளை உணர்வோம், போராடி வென்று சுதந்திரத் தீயை வளர்ப்போம்.

* கல்வி, ஆன்மிகம், சேவை, தேசத் தொண்டு, பத்திரிகை என பல துறைகளில் சாதனை படைத்த லோகமான்ய பால கங்காதர திலகரின் பெருமையைப் போற்றுவோம்.

இப்படிப்பட்ட தேசத் தலைவர் வாழ்ந்த பூமியில் நாமும் வாழ்கிறோம். அவரது நற்குணங்களை நம்மிலும் ஏற்றி நாட்டுக்காய் வாழ்வோம்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் உடனடி வேலைவாய்ப்பு: 10 ஆயிரம் பொறியியல் மாணவர்களுக்கு சிறப்பு கணினி பயிற்சி

தகவல் தொழில்நுட்பத் துறையில் உடனடியாக வேலைவாய்ப்பு பெறும் வகையில் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் பொறியியல் மாணவர்களுக்கு சிறப்பு கணினி பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது தகவல் தொழில் நுட்பத் துறையில் கிளவுட் கம்ப்யூட்டிங், டேட்டா அனலிட்டிக்கல் பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. 2015-ம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் கிளவுட் கம்ப்யூட்டிங் டெக்னாலஜி பயிற்சி பெற்றவர்கள் ஒரு லட்சம் பேரும், உலகளவில் 14 லட்சம் பேரும், அதேபோல், டேட்டா அனலிட்டிக்கல் பயிற்சி பெற்றவர்கள் அமெரிக்காவில் 1.9 லட்சம் பேரும், உலகளவில் 4.4 லட்சம் பேரும் தேவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேற்கண்ட இரு துறைகளிலும் உருவாகும் வேலைவாய்ப்புகளை கருத்தில் கொண்டு அதற்கு தமிழக மாணவர்களை தயார்படுத்தும் வகையில் 10 ஆயிரம் பொறி யியல் மாணவர்களுக்கும், கணிணி அறிவியல் மற்றும் பிசிஏ பட்ட தாரிகளுக்கும் சிறப்பு கணினி பயிற்சி அளிக்க ஐசிடி அகாடமி யும், இஎம்சி நிறுவனமும் முன் வந்துள்ளன.
இதுகுறித்து இஎம்சி நிறுவன தெற்காசிய பிரிவின் தலைவர் கிருஷ்ணகாந்த், தமிழ்நாடு ஐசிடி அகாடமியின் தலைமைச் செயல் அதிகாரி எம்.சிவகுமார் ஆகி யோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:
பொறியியல், கணினி அறிவியல் பட்டதாரிகளை வேலைவாய்ப்புத் திறன் மிக்கவர்களாக உருவாக் கும் வண்ணம் எங்கள் நிறுவனங் கள் கூட்டு சேர்ந்து பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின் றன. அந்த வகையில், இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் பேருக்கு கிளவுட் இன்பிராஸ்டிரக்சர் சர்வீசஸ், பிக் டேட்டா அனலிட்டிக்கல் ஆகிய இரு பயிற்சிகளை இலவசமாக அளிக்க முடிவுசெய்துள்ளோம்.
உடனே வேலை
கல்லூரி பேராசிரியர்கள் 500 பேருக்கு இப்பயிற்சியை அளித்து அவர்கள் மூலமாக 10 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக் காலம் மொத்தம் 40 மணி நேரம். பயிற்சி நிறைவில் சர்வதேச சான்றிதழ் வழங்கப்படும். எங்களிடம் ஏற் கெனவே உறுப்பினர்களாக உள்ள, ஏறத்தாழ 375 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பயிற்சி பெறுவார்கள்.
பயிற்சியை முடிக்கும் மாணவர் களுக்கு ஐ.டி. துறையில் உடனடி யாக வேலை கிடைக்கும். தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இந்த பயிற்சி திட்டம் செயல் படுத்தப்படும். பேராசிரியர் களுக்கான பயிற்சி அடுத்த வாரம் தொடங்குகிறது. சென்னையில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் பயிற்சி நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

பகத் சிங்: பாரதத்தின் சிங்கம்

இந்திய விடுதலைக்காக மட்டுமல்ல… ஏகாதிபத்தியத்தின் அனைத்து வடிவங்களையும் எதிர்த்துப் போராடியவர்.
பகத்சிங் பிறந்தநாள்: 27.09.1907
லாகூர் மத்திய சிறையில் 23.03.1931-ல் தூக்கிலிடப்பட்ட பகத் சிங், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய நாயகன் மட்டுமல்ல, தீவிர சிந்தனையாளனும்கூட. இளமையிலிருந்தே வாசிப்பு, சிந்தனை, செயல்பாடு என ஒருங்கிணைந்த இயக்கம் கொண்டிருந்த ஆளுமைதான் பகத் சிங். இதனால்தான் ஒவ்வொரு தலைமுறைக்கும் உத்வேகம் அளித்திடும் நாயகனாக இருந்துகொண்டிருக்கிறார். எனவேதான், உலக அரங்கில்
சே குவேரா வகிக்கும் பாத்திரத்தை இந்தியத் துணைக் கண்டத்தில் பகத் சிங் வகிக்கிறார்.
1919-ல் நூற்றுக் கணக்கான இந்தியர்களின் உயிரைப் பறித்த ஜாலியன் வாலாபாக் படுகொலைதான் பகத் சிங் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படுகொலை நடந்த சமயத்தில் பகத் சிங்குக்கு வயது 12. படுகொலை நடந்த இடத்தில் இருந்த மண்ணை எடுத்துவந்து பாதுகாத்து வைத்திருந்தார் பகத் சிங்.
உலகியல் ஆசைகளுக்கு இடமில்லை
பகத் சிங்கின் பாட்டியின் ஆசையை நிறைவேற்றும் வகையில், பகத் சிங்குக்குத் திருமண ஏற்பாட்டை அவருடைய தந்தை மேற்கொண்டபோது, ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேறி கான்பூர் சென்றுவிடுகிறார், விடுதலைப் போராட்ட நடவடிக்கைகளைத் தொடர்வதற்காக. அந்தக் கடிதத்தில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்: ‘என் வாழ்க்கை ஓர் உன்னத லட்சியத்துக்காக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது: இந்திய விடுதலைதான் அந்த லட்சியம். அதன் காரணமாக, வசதிவாய்ப்புகளுக்கும் உலகியல் ஆசைகளுக்கும் என் வாழ்வில் இடமில்லை. நான் சிறுவனாக இருந்தபோதே நாட்டின் சேவைக்காக அர்ப் பணிக்கப்பட்டவன் என்று தாத்தா சபதம் செய்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கும். ஆகவே, அப்போதைய சபதத்தை மதிக்கிறேன். என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்.’
பகத் சிங் குடும்பத்தினரே தேசியவாதிகளாக விளங்கியவர்கள்தான். பகத் சிங் பிறந்தபோதுதான் அவரது தந்தை கிஷன் சிங்கும் மாமா சுவரண் சிங்கும் சிறையிலிருந்து விடுதலை ஆனார்கள். இன்னொரு மாமா அஜித் சிங் நாடுகடத்தப்பட்டிருந்தார். 20 வயதில் தூக்கிலிடப்பட்ட கர்தார் சிங் சரபாதான் பகத் சிங்குக்கு முன்மாதிரியான ஆளுமை. சரபாவின் புகைப்படம் அவரது சட்டைப் பையில் எப்போதும் இருக்கும்.
தூக்குக் கயிற்றை நோக்கி…
1928-ல் சைமன் கமிஷனைப் புறக்கணிக்க நிகழ்ந்த ஊர்வலத்தில் முதுபெரும் தலைவரான லாலா லஜபதிராய் கொல்லப்பட்டார். அதற்குப் பிறகுதான் தீவிரப் போராட்டப் பாதையில் பகத் சிங் ஈடுபடுகிறார். லஜபதிராயின் மரணத்துக்குக் காரணமான போலீஸ் அதிகாரி ஸ்காட் உயிரைப் பறிப்பதற்காக பகத் சிங்கும் அவரது நண்பர்களும் போட்ட திட்டம், ஜே.பி. சாண்டர்ஸ் என்னும் இன்னொரு அதிகாரியின் உயிரைப் பறித்துவிடுகிறது. இதற்கிடையே பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மக்கள் விரோத மசோதாக்கள் மீது எதிர்ப்பைக் காட்டும் வகையில் பகத் சிங்கும் பி.கே. தத்தும் சட்டசபைக்குள் நுழைந்து இரண்டு குண்டுகளை வீசினார்கள். இந்த வழக்கில் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஜே.பி. சாண்டர்ஸ் கொலை வழக்கில் சுகதேவ், ராஜகுருவுடன் பகத் சிங்குக்கும் சேர்த்துத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, குறித்த தேதிக்கு ஒரு நாளுக்கு முன்பாக, மாலையில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. (வழக்கமாகக் காலையில்தான் தண்டனை நிறைவேற்றப்படும்).
தன் போராட்ட நடவடிக்கைகளுக்கிடையே ஆக்ராவில் 175 புத்தகங்களுடன் ஒரு நூலகத்தை பகத் சிங் அமைத்தார். லாகூரில் லஜபதிராய் நிறுவியிருந்த துவாரகாதாஸ் நூலகத்தை அதிக அளவில் பயன்படுத்தினார். தூக்கிலிடப்படுவதற்கு முன்பு சிறையில் இருந்த இரண்டாண்டு காலத்தில் கவிதை, சட்டம், அரசியல், பொருளாதாரம், தத்துவம், சோஷலிஸப் புரட்சி என்று பல்வேறு துறைகள் தொடர்பாக நிறைய வாசித்திருந்தார். தன் எண்ணங்களையும், வாசிப்பைப் பற்றியும், வாசித்ததில் முக்கியப் பகுதிகளையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்தார். அந்தக் குறிப்பேடு, ரகசிய ஆவணம் என்பதால் பின்னாளில் அவரது மருமகன் அபே குமார் சிங்கால் படியெடுக்கப்பட்டு, குருகுல் இந்திரபிரஸ்தா என்னும் கல்வி நிறுவனத்தின் நிலவறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, 1994-ல் நூலாக வெளியிடப்பட்டது. அவர் சிறையில் இருந்த போது ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ உள்ளிட்ட நான்கு நூல்களை எழுதினார். இது தவிர, ஒரு மொழிபெயர்ப்பையும் செய்திருக்கிறார்.
அரசியல் பரிணாமம்
இளைஞரான பகத் சிங்கின் பரிணாம வளர்ச்சி எப்படி இருந்தது என்பதை அவரது சகாவாக உடனிருந்து போராடிய தோழரான சிவவர்மா இப்படிக் கூறுகிறார். “அவரது சிந்தனைப் போக்கின் பரிணாமம் தீவிரமானது. 1924-க்கு முன் அவரைப் பார்த்தவர்கள், அவர் பப்பர் அகாலிகளுடன் இருந்ததாகக் கூறினார்கள்; 1925-26 காலகட்டத்தில் அவரைக் கண்டவர்கள் பகுனின், குரோபோட்கின் போன்ற ரஷ்யப் புரட்சியாளர்களின் செல்வாக்குக்கு உட்பட்ட அராஜகவாதிகளின் தொடர்பில் இருந்தார் என்றார்கள்; 1927-28 காலகட்டத்தில் அவரை எதிர்கொண்டவர்கள் சோஷலிஸ்ட் என்றழைத்தனர்; 1929-31 ஆண்டுகளில் பார்த்தவர்கள் அவரை மார்க்ஸிஸ்ட்–கம்யூனிஸ்ட் என்றனர்.”
பிரிட்டிஷாரை வெளியேற்றிவிட்டு இன்னொரு அதிகாரத் தரப்பினரிடம் ஆட்சியை ஒப்படைப்பதால் மக்களுக்கு நன்மை விளையாது. சோஷலிஸ மாற்றத் தால்தான் மக்களுக்கு நன்மை ஏற்படும் என்பதுதான் பகத் சிங்கின் நிலைப்பாடு. இதனை அவர் இப்படிக் குறிப்பிடுகிறார்: “புரட்சி என்பது உலகத்தின் ஒரு சட்டம். அது மனிதவர்க்க முன்னேற்றத்தின் ரகசியம். இதிலே புனிதத்துவச் சங்கிலிகள் பிணைக்கப்பட வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது. தனிநபர்களைப் பழிவாங்கும் நோக்கம் புரட்சி நடவடிக்கைகளின் அம்சமாகாது. துப்பாக்கிகளாலும் வெடிகுண்டுகளாலும்தான் இதைச் சாதிக்க வேண்டும் என்பதில்லை.”
மேலும், பகத் சிங் தன் சிறைக் குறிப்புகளில் வி.என்.ஃபிக்னர் என்பவரின் இந்த மேற்கோளைக் குறித்துவைத்திருந்தார்: “ஏசு கிறிஸ்துவின் சரிதத்தால் ஈர்க்கப்பட்டிருப்பவர் நிச்சயமாக ஒரு புரட்சியாளரைப் புரிந்துகொள்வார்.”
நினைவில் நிற்கும் மரணம்
தூக்கிலிடப்படுவதற்கு முன்பாகத் தன் குடும்பத் தினரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, பகத் சிங்கின் அம்மா வித்யாவதி அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டு இப்படிக் குறிப்பிட்டார்: “ஒவ்வொருவரும் ஒரு நாள் மடிய வேண்டியவரே. ஆனால், உலகம் நினைவில் வைத்துப் போற்றும் மரணம்தான் மிகச் சிறந்தது.”
இயல்பிலேயே கூச்சமும் தயக்கமும் மிகுந்த இளைஞரான பகத் சிங், துரிதகதியில் வளர்ந்து, தீவிரமாகச் செயலாற்றி, சிறிதும் பின்வாங்காது, சாகும் தருணம் வரை படிப்பதும் சிந்திப்பதும் எழுதுவதுமாக இருந்து, தூக்குக் கயிற்றை முத்தமிட்டார்.
“ஒவ்வொருவரும் உலகை மாற்றுவதுபற்றி எண்ணு கிறார்களேயொழிய தன்னை மாற்றிக்கொள்வதுபற்றி யாரும் எண்ணுவதில்லை” என்பார் டால்ஸ்டாய். அப்படியில்லாமல் தன்னை மாற்றிக்கொண்டு, உலகை மாற்றுவதுபற்றி எண்ணியவராக/ செயல்பட்டவராக பகத் சிங் இருந்திருக்கிறார். ஒவ்வொரு தலைமுறை இளைஞர்களும் அவரை நாயகனாகக் கொண்டாடு வதற்கு அதுதான் காரணமாகிறது.
08.04.1929-ல் சட்டசபை குண்டு வீச்சுக்கு மூன்று நாட்கள் முன்னதாக தோழன் சுகதேவுக்கு எழுதிய கடிதத்தில், வாழ்க்கைகுறித்து பகத் சிங்குக்கு இருந்த புரிதலைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்: ‘இந்தக் கடிதத்தை நீ பெறும் வேளையில், நான் முடிவில்லாத தொலைதூரத்தை நோக்கிப் போய்க் கொண்டிருப்பேன். வேறெந்த நாளையும்விட இன்று நான் மிகமிக மகிழ்ச்சியாக உள்ளேன் என்பதைத் தெரியப்படுத்துகிறேன். என் வாழ்வின் எல்லா அழகையும் தாண்டி, எல்லா இனிய நினைவுகளையும் தாண்டி, இந்தப் பயணத்துக்கு நான் தயாராகிவிட்டேன்...’
தான் செய்யவிருந்ததில் ஆயிரத்தில் ஒரு பகுதியைக் கூடச் செய்ய இயலவில்லை என்பது மட்டுமே அவரது வருத்தமாயிருந்தது. ‘பல்வந்த் சிங்’ எனும் புனைபெயரில் எழுதிய பகத் சிங்கை ‘சர்தார்’ என்று சக தோழர்கள் அழைக்க, ‘பகன்வாலா’ (கடவுளின் அதிர்ஷ்டக் குழந்தை) என்று அவரது பாட்டி அழைத்து மகிழ்ந்தார். ஆனால், இந்தியா முழுவதும் அவரை ‘பாரதத்தின் சிங்கம்’ என்று அழைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
- சா. தேவதாஸ், சமூக விமர்சகர், மொழிபெயர்ப்பாளர்,
‘பகத் சிங் சிறைக் குறிப்புகள்’ நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர்.

18 ஆண்டுகள்.. 6 நீதிமன்றங்கள்.. 90 நீதிபதிகள்.. தினமும் 18 மணி நேரம் இடைவிடாது பணியாற்றிய டி'குன்ஹா

கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பை நெருங்கியதற்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவே மிக முக்கிய காரணம்.
இவ்வழக்கில் நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஓராண்டுக்குள் தீர்ப்பெழுதும் கட்டத்திற்கு நகர்த்தியதில் அவரது கடும் உழைப்பும்,அசராத அணுகு முறையும் உள்ளது.
1996-ம் ஆண்டு ஜூலையில் சென்னை மாநகர அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கிய சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை சிங்கார வேலர் சிறப்பு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றம் என கடந்த 18 ஆண்டுகளில் 6 நீதிமன்றங்களின் படிகளை ஏறி இருக்கிறது. சென்னை நீதிமன்ற நீதிபதி சம்பந்தம் என்பவரில் ஆரம்பித்து நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா வரை சுமார் 90 நீதிபதிகள் இவ்வழக்கை விசாரித்துள்ளதாக பெங்களூர் சிறப்பு நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.
1997-ல் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக் கப்பட்டு 16 ஆண்டுகளுக்கு பிறகு ஜான் மைக்கேல் டி'குன்ஹா 14-வது சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக கடந்த 31-10-2013 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
பெங்களூர் சிபிஐ நீதிமன்றத்தின் நீதிபதியாகவும்,பெங்களூர் மாவட்ட நீதிமன்ற பதிவாளராகவும் பணியாற்றிய இவர் கடந்த 11 மாதங்களில் வழக்கை தீர்ப்பை நோக்கி நகர்த்தியுள்ளார்.அதற்கு காரணம் அவருடைய கடினமான உழைப்பும், கண்டிப்பான அணுகு முறையும் தான் காரணம். மேலும் மனு மேல் மனு போட்டு நீதிமன் றத்தின் நேரத்தை வீணடித்த தனியார் நிறுவனங்களின் மனுக் களை மிகச்சரியாக கையாண்டார். முதல் முறையாக அவர்களுக்கு அபராதம் விதித்தார். அரசு வழக் கறிஞர் பவானி சிங் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் அவரு டைய இரு நாள் ஊதியத் தை(ரூ.1.2லட்சம்) அபராதமாக விதித்தார்.உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறி ஞருக்கு அபராதம் விதித்த‌து அதுவே முதல்முறை.
காலை 8.15 மணிக்கே வந்து விடுவார்
டி'குன்ஹா சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க ஆரம்பித்ததும் வாரத்தின் 5 நாட்களும் விசாரணையை தொடர்ந்து நடத்தினார். இதற்காக தினமும் 18 மணி நேரம் ஒதுக்கி வேலை செய்தார்.
அதுவும் தீர்ப்பு தேதியை குறித்த பிறகு, நீதிமன்றத்தை சுத்தம் செய்பவர்கள் வருவதற்கு முன்பாக தனது இருக்கையில் வந்து அமர்ந்து விடுவார். தினமும் மாலை 6 மணிக்கு தான் வீட்டிற்கு திரும்புவார்.வழக்கு குறித்த அனைத்து ஆவணங்களையும் படித்து, அவ்வப்போது குறிப் பெடுத்துக்கொள்வார் என பெங்களூர் சிறப்பு நீதிமன்ற ஊழியர்கள் நீதிபதி டி'குன்ஹாவின் பாணி குறித்து விவரித்தனர்.
அவர்கள் மேலும் கூறும்போது “நேற்று காலை 7.30 மணிக்கு நீதிமன்றத்துக்கு நேரடியாக சென்று இருந்தோம்.பெங்களூர் சிறப்பு நீதிமன்ற கட்டிடத்தில் யாரும் தென் படவில்லை. ஆனால் காலை 8.15 மணிக்கு நீதிமன்ற கட்டி டத்தில் உள்ள பழைய தபால் நிலையம் அருகே இருந்த குறுகலான பாதையில் நுழைந்தார். தன்னை யாரும் புகைப்படம் எடுத்துவிடக்கூடாது என்பதற்காகவே இவ்வழியை டி'குன்ஹா தேர்ந்தெடுத்துள்ளார்.
காலை 8.18 மணிக்கு தனது இருக்கையில் அமர்ந்த நீதிபதி குன்ஹா மாலை 7.30 மணி வரை பணியில் மூழ்கினார்.இன்று வழங்கவிருக்கும் தீர்ப்பின் பக்கங்களுக்கு இறுதிவடிவம் கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த வழக்கு மிகவும் முக்கியமானது என்பதால் வழக்கமாக தட்டச்சு செய்பவரை பயன்படுத்தவில்லை.தான் நீதிபதியாக பணியாற்ற தொடங்கிய காலத்தில் இருந்து பழக்கமான ஒரு பெண்ணையே தட்டச்சு செய்ய அனுமதித்துள்ளார்.
அதுவும் தீர்ப்பின் இறுதி வடிவத்தை தனது கைப்படவே கடந்த 4 தினங்களாக திருத்தி, தட்டச்சு செய்துள்ளார்” என்றனர்.
நீதிபதி டி'குன்ஹாவை பொறுத்தவரை அவர் ஒரு முறை தீர்ப்பு அளித்தால், அந்த வழக்கு அடுத்தடுத்து உயர்நீதி மன்றங் களை அணுகினாலும் தோல்வியே அடையும்.அந்த அளவுக்கு தீர்ப்பு வழங்குவதில் கெட்டிக்காரர் என கர்நாடக நீதித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
தீர்ப்பின் இறுதி வடிவத்தை தனது கைப்படவே கடந்த 4 தினங்களாக திருத்தி, தட்டச்சு செய்துள்ளார்.

Thursday 25 September 2014

ஆப்பிரிக்க ஆச்சர்யங்கள்!


# உலகின் இரண்டாவது மிகப் பெரிய கண்டம் ஆப்பிரிக்கா.
# உலகின் மிக நீளமான நதியான நைல் நதி இந்தக் கண்டத்தில்தான் ஓடுகிறது.
# சாய்ரே, நைஜர், சாம்பேசி என மூன்று பெரிய நதிகளும் இந்தக் கண்டத்தில்தான் இருக்கின்றன.
# உலகின் மிகப் பெரிய பாலைவனமான சகாரா இங்குதான் உள்ளது. கலஹாரி, நமீபியா ஆகிய இரு பெரிய பாலைவனங்களும் ஆப்பிரிக்காவிலேயே உள்ளன.
# 14,300 வெவ்வேறு மொழி பேசும் மக்கள் ஆப்பிரிக்காவில் வசிக்கின்றனர்.
# இந்தக் கண்டத்தில் இஸ்லாம், கிறிஸ்தவ மக்களே அதிகம் உள்ளனர்.
# ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய சிகரம் ‘கிளிமாஞ்சரோ’. இதன் உயரம் 5,895 மீட்டர்.
# இந்தக் கண்டத்தின் மிகப்பெரிய ஏரி ‘விக்டோரியா’. இதன் பரப்பு 68,800 சதுர கிலோமீட்டர்.
# மக்கள்தொகை அடிப்படையில் இந்தக் கண்டத்தில் உள்ள பெரிய நாடு ‘ நைஜீரியா’. 11 கோடியே 50 லட்சம் பேர் இங்கு வசிக்கிறார்கள்.
# ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை, நீர் யானை போன்ற அரிய வகை விலங்குகள் இக்கண்டத்தில் மட்டுமே காணப்படுகின்றன.