தமிழின் முக்கியமான எழுத்தாளரான பெருமாள் முருகனுக்கு 2012ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1995ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பால் புதுமைப்பித்தன் நினைவாக இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழின் இலக்கிய ஆளுமைகளான சி. சு. செல்லப்பா, பிரமிள், கோவை ஞானி, நகுலன், ஹெப்சிபா ஜேசுதாசன், பூமணி, சி. மணி, சே. இராமானுஜம், ஞானக்கூத்தன், அம்பை, தேவதேவன், வைத்தீஸ்வரன், விக்ரமாதித்யன், திலீப்குமார், தேவதச்சன் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான விளக்கு விருதைப் பெறும் பெருமாள் முருகன், 1980களின் இறுதியில் நாவலாசிரியராகவும், சிறுகதை எழுத்தாளராகவும் அறிமுகமானவர். ஏறுவெயில், கூளமாதாரி, நிழல் முற்றம், மாதொருபாகன் போன்றவை இவரது முக்கியமான நாவல்கள். இளமுருகு என்ற பெயரில் கவிதைகளையும் எழுதியுள்ளார். பெருமாள் முருகன், இவ்விருதைப் பெரும் இளம்வயது எழுத்தாளர் ஆவார். விளக்கு விருது ரூ.50,000 பரிசுத்தொகையையும் பாராட்டுப் பத்திரத்தையும் உள்ளடக்கியது.