Wednesday 10 December 2014

எல்லோரும் ஒரே உயிர்

இளம் மனைவிக்கு பாரதி கடிதம் - 1901

ஸ்ரீ காசி
ஹநுமந்த கட்டம்

எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசீர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ என் காரியங்களில் இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை. விசுவநாதன் அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். நான் எப்போதுமே தவறான வழியில் நடப்பவனல்ல. இதைப் பற்றி உன்னைச் சந்திக்கும் சமயங்களில் விவரமாகக் கூறுகிறேன். நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்துவந்தாயானால் மிகவும் சந்தோஷமுறுவேன்.

உனதன்பன்
சி. சுப்பிரமணிய பாரதி

நீயா இவ்வுலகத்தைப் படைத்தாய்?

நக்ஷத்திரங்களெல்லாம் கடவுள் வலியால் சுழல்கின்றன. திரிலோகங்களும் அவனுடைய சக்கரத்தில் ஆடுகின்றன. நீ அவன், உன் மனம், உன் மனத்தின் நினைப்புகள் எல்லாம் அவனே “ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்” - அங்ஙனமாக, மானுடா, நீ ஏன் வீணாகப் பொறுப்பைச் சுமக்கிறாய்? பொறுப்பையெல்லாம் ‘தொப்’பென்று கீழே போட்டுவிட்டு, சந்தோஷமாக உன்னால் இயன்ற தொழிலைச் செய்துகொண்டிரு.

எது எப்படியானால் உனக்கென்ன? நீயா இவ்வுலகத்தைப் படைத்தாய்? உலகமென்னும்போது உன்னைத் தவிர்ந்த மற்ற உலகத்தையெல்லாம் கணக்கிடாதே. நீ உட்பட்ட உலகத்தை, உனக்கு முந்தியே உன் பூர்வ காரணமாக நின்று உன்னை ஆக்கி வளர்த்துத் துடைக்கும் உலகத்தை, மானுடா, நீயா படைத்தாய்? நீயா இதை நடத்துகிறாய்? உன்னைக் கேட்டா நக்ஷத்திரங்கள் நடக்கின்றன? உன்னைக் கேட்டா நீ பிறந்தாய்? எந்த விஷயத்துக்கும் நீ ஏன் பொறுப்பை வகித்துக்கொள்கிறாய்?”

பஞ்சம்

நம் நாட்டில் ராஜாக்களும், சாஸ்திரிகளும், பெரிய மிராஸ்தார்களும், ஸாஹுகார்களும், வியாபாரிகளும், வக்கீல்களும், பெரிய பெரிய உத்யோகஸ்தர்களும் வயிறு கொழுக்க, விலாப் புடைக்க, அஜீர்ணமுண்டாகும்படி ஆஹாரங்களைத் தம்முள் திணித்துக்கொண்டிருக்கையிலே, உலகத்தில் வேறெந்த நாட்டிலும் இல்லாதபடி இந்தியாவில் மட்டும் தீராத, மாறாத பஞ்சம் தோன்றி ஜனங்களை அழிக்கிற கொடுமை தீர்க்க வழி தேட வேண்டிய யோசனை அவர்களுடைய புத்திக்குச் சற்றேனும் புலப்படாதிருப்பதை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் எனக்கு மிகுந்த வருத்தமுண்டாகிறது.

நவீன ருஷ்யாவில் விவாக விதிகள்

போல்ஷிவிக் ஆட்சி ஏற்பட்ட காலத்திலே அதற்குப் பலவகைகளிலும் தோஷங்கள் கற்பிப்பதையே தம் கடமையாகக் கருதியவர்களிலே சிலர் அதன்மீது ராஜரீக நெறிகளிலே குற்றங்கள் சுமத்தியது போதாதென்று, போல்ஷிவிஸ்ட் கக்ஷியார் ஸ்திரீகளையும் பொதுவாகக் கொண்டு ஒருத்தியைப் பலர் அனுபவிக்கிறார்களென்று அபாண்டமான பழி சுமத்தப்பட்டது. ஆனால், ‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு.’ ஒன்பதாம் நாள் உண்மை எப்படியேனும் வெளிப்பட்டு விடும்.

ஒரு பெரிய ராஜ்யத்தைக் குறித்து எத்தனை காலம் பொய் பரப்பிக்கொண்டிருக்க முடியும்? சில தினங்களுக்கு முன்பு, இங்கிலாந்து தேசத்தில் மாஞ்செஸ்டர் நகரத்தில் பிரசுரம் செய்யப்படும் ‘மாஞ்செஸ்டர் கார்டியன்’ என்ற பத்திரிகை நவீன ருஷியாவின் விவாக விதிகளைப் பற்றிய உண்மையான விவரங்களைப் பிரசுரம் செய்திருக்கிறது.

அவற்றைப் பார்க்கும்போது, நவீன ஐரோப்பிய நாகரீகம் என்று புகழப்படும் வஸ்துவின் நியாயமான உயர்ந்த பக்குவ நிலையை மேற்படி போல்ஷிவிஸ்ட் விவாக சம்பிரதாயங்களில் எய்தப்பட்டிருக்கிறதென்று தெளிவாக விளங்குகிறது. ஆண், பெண் இருபாலாரும் பரிபூரண ஸமத்துவ நிலைமையுடையோர். இங்ஙனம் இருபாலாரும் முற்றிலும் சமானம் என்ற கொள்கைக்குப் பங்கம் நேரிடாதபடி விவாகக்கட்டைச் சமைக்க வேண்டும் என்பதே ஐரோப்பிய நாகரீகத்தின்உண்மையான நோக்கம்.

பெண்களுக்கு விடுதலை தாங்கள் வேறு பல ஜாதியார்களைக் காட்டிலும் அதிகமாகக் கொடுத்திருப்பதே தாம் நாகரீகத்தில் உயர்ந்தவர்கள் என்பதற்கு முக்கியமான அடையாளங்களில் ஒன்றாமென்று ஐரோப்பியர்கள் சொல்லுகிறார்கள். அந்த வகையிலே பார்த்தால், ஐரோப்பாவின் இதர பகுதிகளைக் காட்டிலும் நவீன ருஷியா உயர்ந்த நாகரீகம் பெற்றுள்ளதென்பது ப்ரத்யக்ஷமாகத் தெரிகிறது.

கண்ணுடையவன்

“கடவுள் எங்கும் இருக்கிறாரே? எல்லாம் கடவுள்தானே? ஊருக்கு நடுவில் ஒரு கோவிலைக் கட்டி, அதில் ஒரு கல்லையோ செம்பையோ நட்டு, அங்கேதான் எல்லோரும் வந்து கும்பிட வேண்டும் என்ற நியமம் எதற்காக?” என்றால், ஜனங்களுக்குள் ஐக்யம் ஏற்படுவதற்காக.

கல்லில் மாத்திரம் தெய்வம் இருக்கிறதென்று நம்பி, நம்மைச் சூழ்ந்த ஜனங்களிடம் தெய்வம் இல்லை என்று நம்பலாமா?

கவனி! அண்ட பகிரண்டங்கள் எல்லாவற்றையும் உள்ளே இருந்து ஆட்டுவிக்கும் பரஞ்சுடரே நம்மைச் சூழும் அநந்த கோடி ஜீவராசிகளாக நின்று சலிக்கிறது.

இதுதான் வேதத்தின் கடைசியான கருத்து. ‘‘தன்னிடத்தில் உலகத்தையும் உலகத்தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்” என்பது முன்னோர் கொள்கை.

உன்னுடைய ஆத்மாவும் உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று. நீ, நான் முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை - எல்லோரும் ஒரே உயிர். அந்த உயிரே தெய்வம்.

கணக்கு வழக்கே கிடையாது

நம்முடைய ஜனங்களுக்கிடையே இந்த நிமிஷம் வரை நடைபெறும் மூட பக்திகளுக்குக் கணக்கு வழக்கே கிடையாது. இதனால் நம்மவர்களின் காரியங்களுக்கும் விவஹாரங்களுக்கும் ஏற்படும் விக்கினங்களுக்கு எல்லை இல்லை. இந்த மூட பக்திகளிலே மிகவும் தொல்லையான அம்சம் யாதெனில், எல்லாச் செய்திகளுக்கும் நாள் நக்ஷத்திரம், லக்னம் முதலிய பார்த்தல், க்ஷவரம் பண்ணிக்கொள்ள வேண்டுமென்றால், அதற்குக்கூட நம்மவர் மாஸப் பொருத்தம், பக்ஷிப் பொருத்தம், திதிப் பொருத்தம், நாட்பொருத்தம் இத்தனையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது.

“க்ஷவரத்துக்குக்கூட இப்படியென்றால், இனி கலியாணங்கள், சடங்குகள், வியாபாரங்கள், யாத்திரைகள், விவசாய ஆரம்பங்கள் முதலிய முக்கிய கார்யங்கள் பல்லாயிரத்தின் விஷயத்திலே நம்மவர் மேற்படி பொருத்தங்கள் பார்ப்பதில் செலவிடும் கால விரயத்துக்கும் பொருள் விரயத்துக்கும் வரம்பே கிடையாது. சகுனம் பார்க்கும் வழக்கமும் கார்யங்களுக்குப் பெருந்தடையாக வந்து மூண்டிருக்கிறது. இதில் நேரும் அழிவுகளும், அவற்றால் பொருள் அழிவுகளும் எவ்வளவு உண்டாகின்றன என்பதை நம்மவர் கவனிப்பதே கிடையாது சகுனம் பார்ப்பதனால், கார்ய நஷ்டம் மாத்திரம் உண்டாகிறது. நாட்பொருத்தம் முதலியன பார்க்குமிடத்தே, கார்யநஷ்டம் மட்டுமன்றி மேற்படி லக்னம் முதலியன பார்த்துச் சொல்லும் சோதிடருக்கு வேறு பணம் செலவாகிறது.

‘மெம்பர்’

‘மெம்பர்’ என்பதற்குச் சரியான தமிழ்ச் சொல் எனக்கு அகப்படவில்லை. இது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். ‘அவயவி’ சரியான வார்த்தையில்லை. ‘அங்கத்தான்’ கட்டிவராது. ‘சபிகன்’ சரியான பதந்தான். ஆனால், பொதுஜனங்களுக்குத் தெரியாது. யாரேனும் பண்டிதர்கள் நல்ல பதங்கள் கண்டுபிடித்துக் கொடுத்தால் புண்ணியமுண்டு. அரை மணி நேரம் யோசித்துப் பார்த்தேன்; ‘உறுப்பாளி?’ ஏதெல்லாமோ நினைத்தேன். ஒன்றும் மனதிற்குப் பொருந்தவில்லை. என்ன செய்வேன்! கடைசியாக ‘மெம்பர்’ என்று எழுதிவிட்டேன். இன்னும் ஆற, அமர யோசித்துச் சரியான பதங்கள் கண்டுபிடித்து மற்றொருமுறை சொல்லுகிறேன்.

- தொகுப்பு: அரவிந்தன்

பாரதி: பிரபஞ்சத்தின் பாடகன்

பாரதியார் பிறந்தநாள்: டிசம்பர்-11, 1882
தமிழின் தலைமகன்களில் ஒருவரான பாரதியைக் கொண்டாடுவோம்
ஓடி விளையாடும் பாப்பாவாக நாம் இருக்கும்போது நம் அன்னையரிடமிருந்தும் அதற்குப் பிறகு ஆரம்பக் கல்வியில் பள்ளிக்கூடத்திலும் வாஞ்சையான தகப்பனைப் போல பாரதி நமக்கு அறிமுகமாகிறார். கூடவே, ‘அச்சம் தவிர், ஆண்மை தவறேல்’ என்று ஆத்திசூடி மூலமும், ‘ஒளிபடைத்த கண்ணினாய் வாவா…’ ‘அச்சமில்லை அச்சமில்லை’ போன்ற உத்வேகம் மிக்க முழக்கங்களாலும் பாரதி மேலும் நம்முள் ஆழமாக ஊன்றப்படுகிறார். அப்புறம், தேசப் பற்றுப் பாடல்கள், மொழிப் பற்றுப் பாடல்கள். அதற்குப் பிறகு பாரதி நம்முடன் திரைப்படங்கள் வழியாகவும் உறவுகொள்கிறார்.
பாரதியின் பல்வேறு பாடல்கள் திரைப்படங்களிலும், பாரதியின் பல்வேறு வரிகள் திரைப்படத் தலைப்பு களிலும் இடம்பிடித்திருக்கின்றன. நாவல்களுக்கோ கவிதைத் தொகுப்புகளுக்கோ தலைப்பு கிடைக்கவில்லை என்றாலும் பாரதிதான் உதவிக்கு வருகிறார். அதுமட்டுமா? ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்’ வரிகள் இல்லை என்றால், ஊழல் வழக்குகள் உள்ளிட்டவற்றில் கைதாகும் அரசியல்வாதிகள் என்ன செய்வார்கள் என்பதையே நினைத்துப்பார்க்க முடியவில்லை.
இப்படியாக நம் சமூகத்தின் கலை, பண்பாடு, அரசியல் என்று எல்லாவற்றுக்கும் விதைநெல் களஞ்சியமாக பாரதி இருப்பது, எந்த அளவுக்கு நம் சமூகத்தில் இன்றியமையாத ஒருவராக அவர் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.
ஆனால், பாரதி அவ்வளவு மட்டுமா? உண்மையான பாரதியை, அதாவது முழுமை பெற்ற (அல்லது முழு மையை முயன்ற) பாரதியை அறிந்துகொள்ள நாம் இன்னும் கொஞ்சம் பாரதிக்குள் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. இந்தப் பயணத்தின் பாதி வழியில், ‘பாரதிதான் என்ன?’ என்ற கேள்வி வரும்.
சுடர் விடும் சொல்
ஒரே ஒரு சொல்லைத் தேடியவர்தான் பாரதி. ‘சொல் ஒன்று வேண்டும். தேவ சக்திகளை நம்முள்ளே நிலை பெறச் செய்யும் சொல் வேண்டும்’ என்று தவம் கிடந்தவர் தான் பாரதி. எதற்காக அந்த ஒரு சொல்லைத் தேடினார்? அந்த ஒரு சொல்தான் என்ன?
அந்தச் சொல் உண்மையில் சொல் அல்ல; சுடர். ‘சொல்லில் விளங்கும் சுடரே சக்தி’ என்று பாரதி சொன்னது அதனால்தான். நவமெனச் சுடர் தரும் உயிரில் பாரதி அந்தச் சொல்லைக் கண்டுகொண்டார். சொல்லைச் சுடராக்கி அதில் உடல், பொருள், ஆவி அனைத்துக்கும் தீ மூட்டினார். அப்படித் தீ மூட்டாமல் பாதுகாப்பாக இருந்திருந்தால் வெறும் ‘குடும்பஸ்தன்’ கவியாகவே பாரதி மிஞ்சியிருப்பார். ‘புலன்களைக் குலைத்துப் போடும்’ விபரீத விளையாட்டின் மூலம் தன் உச்சபட்சக் கவித்துவத்தைச் சாதித்துக்கொண்ட பிரெஞ்சுக் கவிஞன் ரைம்போவைப் போலத்தான் பாரதியும்.
நிலவொளிப் பாடகன்
இத்தாலியக் கவிஞன் லெப்பர்டியின் கவிதைகுறித்து இதாலோ கால்வினோ இப்படிச் சொல்லியிருக்கிறார்: ‘அவர் கவிதைகளில் அதிசயம் என்னவென்றால், மொழியை அதன் சுமையிலிருந்து விடுவித்து, கிட்டத்தட்ட நிலவொளிபோல் ஆக்கிவிடுகிறார்.’ இது பாரதியின் கவிதைகளுக்கு முற்றிலும் பொருந்தும். பாரதியின் பல கவிதைகளை அர்த்தங்களுக்காக ரசிப்பதைவிட, கார்த்திகை அகல்போல அவை விடும் அமைதியான சுடருக்காக நாம் ரசிப்பதே அதிகம்.
‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா’என்ற பாடலை அது சொல்லும் பிரபஞ்ச ஒருமைக்காக ரசிப்பதைவிட, அதன் கவித்துவ அமைதிக்காகத்தான் அதிகமாக ரசிக்கிறோம். பிய்த்துப் பிய்த்து அர்த்தம் காண முயலும்போது அந்தப் பாடல் தன் அழகை இழந்துவிடும், அதன் அர்த்தம் ஆழமானது என்றாலும்கூட. இந்தப் பாடலின் அழகே அர்த்தத்தை சொற்களின் வழியாக இல்லாமல், உணர்வின் வழியாக நமக்கு ஊட்டுவதுதான். புத்தரின் சாந்தமான முகம் நமக்கு உணர்த்துவது போன்றது இது.
இதை உணர்ந்துகொள்ளும்போது பாரதியின் முக்கியமான, அறுதிப் பரிமாணத்தை நாம் உணர்ந்து கொள்கிறோம். இந்த இடத்தில் நமக்கு இரண்டு வகையான பாரதி கிடைக்கிறார். விட்டு விடுதலையாகத் துடிக்கும் பாரதியும் பிரபஞ்ச ஒருமை காணும் பாரதியும். உண்மையில், இந்த இரண்டு பாரதிகளுமே ஒருவருக்கொருவர் நிறைவு செய்பவர்களே. எனவே, விட்டு விடுதலையானதால் பாரதியால் பிரபஞ்ச ஒருமையைக் காண முடிந்தது என்றும் சொல்லலாம்.
ஞானியும் பித்தனும்
பிரபஞ்ச ஒருமையைக் காணும்போது ஒரு பக்கம் ஞானிபோலவும் இன்னொரு பக்கம் பித்தன் போலவும் ஆகிவிடுகிறார் பாரதி. ஞானியின் குரலுக்கு வசன கவிதைகள் சாட்சியாவதைப் போல, பித்தனின் குரலுக்கு ‘ஒளியும் இருளும்’, ‘ஊழிக் கூத்து’, ‘காளி’ போன்ற கவிதைகளும், பாஞ்சாலி சபதத்தில் வரும் மாலை வருணனையும் சாட்சியாகின்றன.
பாஞ்சாலி சபதத்தில், அமைதியான மாலைப் பொழுதை பாஞ்சாலியுடன் ரசித்துக்கொண்டிருக்கும் அர்ஜுனனுக்கு ஒவ்வொரு கணமும் காளி கவிதை செய்வ தாகப் படுகிறது. திடீரென்று, அர்ஜுனனுக்குள் பாரதி புகுந்துகொள்ள, பிதற்ற ஆரம்பிக்கிறான் அர்ஜுனன்:
“பார்! சுடர்ப் பரிதியைச் சூழவே படர் முகில்
எத்தனை தீப்பட் டெரிவன! ஓகோ!
என்னடீ யிந்த வன்னத் தியல்புகள்!
எத்தனை வடிவம்! எத்தனை கலவை!
தீயின் குழம்புகள்! - செழும்பொன் காய்ச்சி
விட்ட வோடைகள்! - வெம்மை தோன்றாமே
எரிந்திடுந் தங்கத் தீவுகள்! - பாரடீ!
நீலப் பொய்கைகள்! - அடடா, நீல
வன்ன மொன்றி லெத்தனை வகையடீ!
எத்தனை செம்மை! பசுமையுங் கருமையும்
எத்தனை! - கரிய பெரும் பெரும் பூதம்!
நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத்
தோணிகள் சுடரொளிப் பொற்கரை யிட்ட
கருஞ் சிகரங்கள்! - காணடி யாங்கு
தங்கத் திமிங்கிலந் தாம்பல மிதக்கும்
இருட்கடல்! - ஆஹா! எங்கு நோக்கிடினும்
ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்!”
அமைதியான குளத்தின் மீது பெருமழை வீழ்ந்து குளத்தின் மேற்பரப்பைத் தத்தளிக்க வைப்பதுபோல் மொழியைத் தத்தளிக்க வைக்கிறார் பாரதி. மொழி பதறுகிறது; சாமியாடுகிறது. அர்த்தங்கள் மொழியை விட்டு ஓட, திகைப்பே அர்த்தமாகிறது. அந்தத் தத்தளிப்பை அப்படியே முன்வைக்கிறார் பாரதி. ‘நீல வன்ன மொன்றி லெத்தனை வகையடீ!’ என்று படிக்கும் போது, அடடா! அடடா! என்று பதற வைக்கிறாரல்லவா பாரதி. எப்படிப்பட்ட இயற்கை உபாசகர் அவர்!
இயற்கையை காளியின் நடனமாகப் பார்த்தவர் பாரதி,
அதனால்தான்,
‘அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று
வில்லை யசைப்பவளை - இந்த
வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியை’
என்று காளியைப் பாடுகிறார். சொற்கள் எப்படித் தாண்ட வமாடுகின்றன! குறிப்பாக, ‘வினைச்சி’என்ற சொல்லைப் பாருங்கள். பாரதியைத் தவிர, வேறு யார் இந்தச் சொல்லை உருவாக்கியிருக்க முடியும்?
பிரபஞ்ச ஒருமை
இன்னொரு உருவம் அமைதியான பாரதி. “வேதம், கடல்மீன், புயற்காற்று, மல்லிகை மலர் -இவை ஒரு பொருளின் பல தோற்றம். உள்ளதெல்லாம் ஒரே பொருள், ஒன்று. இந்த ஒன்றின் பெயர் ‘தான்’ ” என்று சொல்லும் பாரதி. இதுதான் பிரபஞ்ச ஒருமை என்பது.
விட்டு விடுதலையாகாமல், பிரபஞ்ச ஒருமை காண்பது சாத்தியம் இல்லை. எவ்வளவு சுமைகளைத் தாங்கிக் கொண்டு திரிகிறோம்! குடும்பம், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், பாலிசி, தேர்தல்கள், தெரு, மொழி, இனம், தேசம், எல்லைக் கோடுகள், போர்கள்... எவ்வளவு ஒழுங்குகள்! எல்லாமே கடமை களாகி நம் மேல் சுமை கவிந்துவிட்டது. ஒருவர் இவ்வளவு சுமைகளையும் சுமந்துகொண்டு கலந்து கொள்ளும் ஓட்டப் பந்தயத்தின் பெயர்தான் வாழ்க்கை என்றாகிவிட்டது.
பாரதி இந்தச் சுமை தூக்கும் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ள விரும்பவில்லை. ‘விட்டு விடுதலையாகி’ சிட்டுக்குருவியைப் போல ‘எட்டுத் திசையும் பறந்து’ திரிந்து, ‘மட்டுப்படாதெங்கும் கொட்டிக் கிடக்கும் இவ்வானொளியென்னும் மதுவின் சுவையை’ உண்ணவே விரும்பினார். இதற்காகச் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே, ஒரு தொழிலே என்கிறார்:
“யானெதற்கும் அஞ்சுகிலேன், மானுடரே, நீவிர்
என்மதத்தைக் கைக்கொண்மின்; பாடுபடல் வேண்டா;
ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்.”
அன்பு எல்லாவற்றிலிருந்தும் விடுவிக்கும். இதுதான் பாரதி இந்த உலகுக்கு அளிக்கும் செய்தி. இதனால்தான் பாரதி நம் சமூகத்துக்கு மட்டுமல்லாமல் உலகத்துக்குமே கவியாகிறார்.
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

வாய் பிளக்க வைத்த கவி மேதை

பாரதி பிறந்தநாள் டிசம்பர்: 11
சுப்ரமணிய பாரதியின் அப்பா சின்னசாமி, அந்தக் காலத்திலேயே பருத்தி ஆலை வைச்சிருந்தாரு. எதிர்காலத்தில் தொழிற்பேட்டை ஒன்றை உருவாக்கும் கனவோட இருந்தாரு. மகன் வளர்ந்தவுடன் அந்தத் தொழிற்பேட்டையை கவனித்துக் கொள்வான்னு நினைச்சாரு.
சுப்ரமணியனோட அம்மா ஐந்து வயசுலேயே இறந்து போயிட்டாங்க. அதோட சுப்ரமணியனுக்குப் படிப்புல பெரிசா ஆர்வம் இல்ல. பள்ளிக்கூடம் முடிஞ்ச ஒடனே தோப்பு, தோட்டம்னு சுத்திப் பார்க்கக் கிளம்பிடுவாரு. அப்புறம் அடிக்கடி தாத்தாவோட வீட்டுக்கும் போவாரு. அவரோட தாத்தா இலக்கியம், பாட்டெல்லாம் வாசிச்சுக் காட்டுவாரு. சுப்ரமணியனுக்குத் தமிழ் இலக்கணமும், தமிழ்க் காப்பியங்களும் ரொம்பவும் பிடிச்சிருந்துச்சு.
மற்றொரு பக்கம் பாடத்தைப் படிக்காமல், வீட்டுப் பாடம் செய்யாம பள்ளிக்கூடம் போன சுப்ரமணியனுக்குத் தண்டனை வழங்கினாங்க. “எனக்கு என்ன பிடிக்கிதோ, அதை யாரும் சொல்லித் தர மாட்டாங்களா”ன்னு சுப்ரமணியன் ஏங்கினான்.
சீக்கிரத்திலேயே பார்வையற்ற ஒரு படிப்பாளியைக் கண்டுபிடிச்சு, அவர்கிட்ட கம்ப ராமாயணத்தைக் கத்துக்கிட்டான். அதுக்கப்புறம் சொந்தமாகவே சுப்ரமணியன் தமிழ் இலக்கணம் கத்துக்க ஆரம்பிச்சான்.
ஒரு நாள் சுப்ரமணியனோட நண்பன் ஒருவன் எட்டயபுரம் ராஜாவோட அரண்மனைக்கு அழைச்சுட்டுப் போனான். ஏதாவது ஒரு குறளின் முதல் வார்த்தையையோ அல்லது ஒரு வெண்பாவின் ஒரு பகுதியையோ சொன்னால், சுப்ரமணியன் உடனடியா எஞ்சிய அடிகளைச் சொன்னான். சுப்ரமணியன் நகைச்சுவையா பேசுறதையும் கவிதை சொல்றதையும் எட்டயபுரம் ராஜா ரசிச்சார்.
“இவன் ஒரு குழந்தை மேதை. பெரிய கவிஞன் ஆவதற்கான அறிவு, உங்க மகன்ட்ட இருக்கு”ன்னு சுப்ரமணியனோட அப்பாகிட்ட சொன்னார் எட்டயபுரம் ராஜா.
ஏற்கெனவே சுப்ரமணியன் செஞ்ச விஷயங்கள் பிடிக்காம இருந்த அவனோட அப்பா, தன் மகன் இப்படிக் கவிதையே கதின்னு இருந்துறக்கூடாதுன்னு நினைச்சாரு. அதனால திருநெல்வேலில ஒரு ஆங்கிலப் பள்ளிக்கு சுப்ரமணியனை படிக்க அனுப்பினார். அப்படிச் செஞ்சா எல்லாம் மாறிடும்னு அவர் நினைச்சாரு.
அங்கேயும் சுப்ரமணியனோட நகைச்சுவை உணர்வும், கவிதை எழுதுற திறனும் சக மாணவர்கள்கிட்ட பிரபலமாச்சு.
ஒரு நாள் வகுப்பறையில சுப்ரமணியன் கொஞ்சம் கண் அசந்துட்டான். சுப்ரமணியனை எழுப்பி, நடத்துன பாடத்தில இருந்து ஆசிரியர் கேள்வி கேட்டார். சுப்ரமணியனுக்கோ பதில் தெரியல. கோபமடைஞ்ச ஆசிரியர், “மேகம் மழையைப் பொழியறது போல, நீ கவிதை சொல்வேன்னு கேள்விப்பட்டேன். ஆனால், நான் கேட்ட கேள்விக்கு உன்கிட்ட பதிலே இல்லையே”ன்னு கேட்டாரு.
“மெத்தப் படித்த ஆசிரியரே, ஒரு விஷயத்தை நீங்க மறந்துட்டீங்க. மேகங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தத்தான் மழை பொழிகின்றன. நீங்க கேள்வி கேட்கிறதால இல்ல”ன்னு பட்டென்னு பதில் சொன்னான் சுப்ரமணியன். ஆனா, இறுதிப் பரீட்சைல ஃபெயிலான அவன் ஊருக்குத் திரும்பினான்.
இதனால் வருத்தப்பட்ட அவனுடைய அப்பா, எட்டயபுரம் ராஜாவைப் பார்த்து அரசவை பணியில சுப்ரமணியனைச் சேர்த்துவிட்டார். ராஜாவோட நண்பர்கள் சிலருக்கு சுப்ரமணியனைப் பிடிக்கல. அவர்கள்ல ஒருத்தர், “நீங்க பெரிய புத்திசாலி போலத் தெரியுது. ஆனா, பரீட்சைல தோத்துப் போயிருக்கீங்களே” என்று மறைமுகமாகக் கிண்டல் செய்ய ஆரம்பிச்சாரு.
இதனால ரெண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுச்சு. கல்வியைப் பற்றி ஒரு விவாதம் நடத்தலாம்னு முடிவாச்சு. முதல்ல எதிர்த் தரப்பு ஆள் பேசினார். அடுத்ததாகப் பேச ஆரம்பிச்ச சுப்ரமணியன், எல்லோரும் ஆச்சரியப்படுற மாதிரி அற்புதமாகப் பேசினார். அவருடைய வாதம் எதிராளியையும் வசப்படுத்துச்சு.
அந்த விவாதம் முடிஞ்சதும், ஒரு முதிர்ந்த பண்டிதர் எழுந்து சுப்ரமணியன்கிட்ட போனாரு. “நீ உன் வயசை மீறுன புத்திசாலித்தனத்தோட இருக்கிறாய். அதனால், நீ ஒரு பாரதி (அனைத்தும் அறிந்த பண்டிதர்)”ன்னு பட்டம் சூட்டினார்.
அதுக்கப்புறம் சுப்ரமணியனை, எல்லோரும் பாரதின்னே கூப்பிட ஆரம்பிச்சாங்க. உலகம் போற்றும் கவிஞரா மாறின அவர், சுப்ரமணிய பாரதியாராக ஜொலித்தார்.

தயை குணத்தையும் அன்பையும் உலகமயமாக்குவோம்: கைலாஷ் சத்யார்த்தி

நார்வே தலைநகர் ஓஸ்லோவில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தானின் மலாலா யூசுப்சாய் ஆகியோர் பெற்றனர்.
குழந்தைகள் உரிமைக்காக போராடி வரும் சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தியின் சேவையை பாராட்டியும், தலிபான் தீவிரவாதிகளின் அடக்குமுறையை எதிர்த்து பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் போராடி வரும் மலாலாவின் செயலை கவுரவித்தும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் விருது வழங்கிய நார்வே நோபல் கமிட்டி தலைவர் தோர்ப்ஜார்ன் ஜக்லாண்ட் கூறியதாவது: நோபல் பரிசை ஏற்படுத்திய விஞ்ஞானி ஆல்ப்ரெட் நோபல் தனது இதயத்தில் அமைதியின் தூதுவர்கள் என்று கருதி போற்றும் அளவுக்கு தகுதி படைத்தவர்கள் சத்யார்த்தியும், மலாலாவும். இவ்விருதைப் பெறும் ஒருவர் முதியவர், இந்து மதத்தையும் இந்தியாவையும் சேர்ந்தவர். மற்றொருவர் இளம்பெண், இஸ்லாம் மதத்தையும் பாகிஸ்தானையும் சேர்ந்தவர். இது, தேசங்களுக்கு இடையே ஒற்றுமையும், சகோதரத்துவமும் வளர வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று தோர்ப்ஜார்ன் ஜக்லாண்ட் கூறினார்.
ரூ. 6 கோடியே 20 லட்சம் பரிசு
இருவருக்கும் 1.1 மில்லின் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 6 கோடியே 20 லட்சம்) பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பதக்கமும், பட்டயமும் அளிக்கப்பட்டுள்ளது.
பரிசை பெற்று கைலாஷ சத்யார்த்தி நிகழ்த்திய உரை: 

"இன்று நான் ஆயிரம் மகாத்மா காந்தி, மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாக்கள் முன்னேறி வந்து நமக்கு அழைப்பு விடுக்கின்றனர். சிறுவர்களும் சிறுமிகளும் இணைந்தனர், நான் இணைந்தேன். உங்களையும் இணையக் கோருகிறேன்.

நாம் அறிவை ஜனநாயகப்படுத்துவோம்

நீதியை உலகப் பொதுமையாக்குவோம்

நாம் அனைவரும் இணைந்து நமது குழந்தைகளுக்காக தயை குணத்தை உலகமயமாக்குவோம்.

சுரண்டலிருந்து கல்விக்கும், வறுமையிலிருந்து பகிர்ந்து கொள்ளும் வளமை நோக்கியும் நாம் நடைபோடுவோம்.

அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கும், வன்முறையிலிருந்து அமைதிக்கும் சமாதானத்திற்கும் நடைபோடுவோம்.

இருளிலிருந்து ஒளிக்கு முன்னேறுவோம், மரணத்திலிருந்து தெய்வீகத்திற்கு முன்னேறுவோம்.

ஒரு குழந்தையாக நாளை பற்றிய தரிசனம் எனக்கு இருந்தது. நாளை என்பது இப்போது இன்று என்றாகியுள்ளது. நானும் இன்று, நீங்களும் இன்று. ஒவ்வொரு குழந்தைக்குமான வாழ்வுரிமையும், சுதந்திர உரிமையும், ஆரோக்கிய உரிமையும், கல்வியுரிமையும் பாதுகாப்பு, கவுரவம், சமத்துவம், சமாதானத்திற்கான உரிமைகளும் இன்றைக்கானது.

இன்று, இருளுக்கு அப்பால், சிமிட்டும் நட்சத்திரங்களில் குழந்தைகளின் புன்னகையைக் காண்கிறேன்.

இன்று, ஒவ்வொரு கடலின் ஒவ்வொரு அலையிலும் நமது குழந்தைகள் விளையாடுவதையும் நடனமாடுவதையும் நான் காண்கிறேன். இன்று ஒவ்வொரு மரம், செடி, கொடி, மலை என்று அனைத்திலும் அன்று எனது வகுப்பறையில் என்னுடன் படித்த அந்தச் சிறுவனைக் காண்கிறேன்.

உங்களில் ஒவ்வொருவரின் உள்ளும் நீங்கள் இதனை உணர விரும்புகிறேன். எனதருமை சகோதர சகோதரிகளே நீங்கள் உங்கள் கண்களை மூடிக்கொண்டு உங்கள் கையை சிறிது கணத்திற்கு உங்கள் இருதயத்தின் மீது வைத்துக் கொள்ள முடியுமா? உங்களுக்குள் உள்ள குழந்தையை நீங்கள் உணர முடிகிறதா? இப்போது இந்தக் குழந்தையை கவனியுங்கள், உங்களால் முடியும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

சுமார் 50 ஆண்டுகளோ அதற்கு அதிகமான ஆண்டுகளுக்கு முன்பாகவோ, நான் படித்த பள்ளிக்கூடத்தின் வாசலில் நான் முதல் நாளில் ஷூ பாலிஷ் செய்து கொண்டிருந்த அந்தச் சிறுவனைக் கண்டேன். நான் எனது ஆசிரியர்களிடம் சில கேள்விகளைக் கேட்டேன்: “அவர் ஏன் வெளியே பணியாற்றிக் கொண்டிருக்கிறார்? அவன் ஏன் என்னுடன் பள்ளி வகுப்பறைக்கு வரவில்லை?” என்றேன். என் ஆசிரியர்களிடத்தில் இதற்கு விடையில்லை. ஒருநாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்தச் சிறுவனின் தந்தையிடம் கேட்டேவிட்டேன். அவர் கூறினார்: “ஐயா, நான் இது பற்றி யோசித்ததே இல்லை. நாங்கள் வேலை செய்யவே பிறந்துள்ளோம்” என்றார். எனக்கு கடும் கோபம் ஏற்பட்டது. இப்போதும் அந்த தந்தை கூறியது எனக்கு கோபத்தையே மூட்டுகிறது. அன்று அதனை சவாலாக்கினேன், இப்போதும் அதனை எதிர்த்துப் போராடி வருகிறேன்.

குழந்தைகளுக்கு ஏற்ற கொள்கைகளை அரசு ஏற்படுத்த வேண்டும். கல்வியிலும், இளம் தலைமுறைக்காகவும் அரசு முதலீடு செய்ய வேண்டும்.

நமக்கு இன்று அவசர உணர்வுடன் தேவைப்படுவது கூட்டு நடவடிக்கைகள், கூட்டு செயல்பாடுகள். ஒவ்வொரு நிமிடமும் முக்கியம், ஒவ்வொரு குழந்தையும் முக்கியம். ஒவ்வொரு குழந்தைப்பருவமும் முக்கியம்.

நமது குழந்தைகளைச் சுற்றிக் காணப்படும் அவநம்பிக்கையை சவாலாக ஏற்கிறேன். மவுனம் காக்கும் பண்பாட்டையும், நடுநிலைகாக்கும் பண்பாட்டையும் நான் சவாலாக ஏற்கிறேன். 

ஆகவே, குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளும் ஒழிய, ஒழிக்கப்பட நாம் ஒவ்வொருவரும் இணைவோம். 

நாகரிகமான சமூகத்தில் அடிமைத்தனம், குழந்தை கடத்தல், குழந்தை திருமணங்கள், குழந்தைத் தொழிலாளி, பாலியல் வன்முறை, கல்வியின்மை ஆகியவற்றுக்கு இடமில்லை. நண்பர்களே இதனை நாம் செய்ய முடியும். 

டெல்வி என்ற சிறுமி பரம்பரையாக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தில் பிறந்தார். அவரைக் காப்பாற்றி எனது காரில் உட்கார வைத்தவுடன் அந்த 8 வயது சிறுமி கேட்டார்: ஏன் முன்னாலேயே வரவில்லை? என்று அந்தச் சிறுமியின் கோபம் இப்போதும் என்னை நிலைகுலையச் செய்கிறது. அந்தக் கோபம் உலகை உலுக்கக்கூடியது. அவரது கேள்வி நம் அனைவருக்குமானது. நாம் ஏன் முன்பாகவே செல்லவில்லை? நாம் எதற்காகக் காத்திருந்தோம்? இன்னும் எத்தனை டெல்விக்களை காப்பாற்ற முடியாமல் விடப்போகிறோம்? இன்னும் எவ்வளவு சிறுமிகள் கடத்தப்பட, அடிமைப்படுத்தப்பட அனுமதிக்கப்போகிறோம்?

கால்பந்து தைக்கும் அந்த குழந்தைகள் யாருடைய குழந்தைகள்? இன்னும் அவர்கள் விளையாட முடியவில்லையே! சுரங்கத்தொழிலிலும் கல்லுடைப்பதிலும் ஈடுபடும் குழந்தைகள் யார்? சாக்கலேட் சாப்பிட முடியாத ஆனால் கோகோவை பயிர் செய்யும் குழந்தைகள் யார்? இவர்கள் அனைவரும் நம் குழந்தைகள்.

நானும், நீங்களும் அவசரகதி உலகமயமாதல் காலத்தில் வாழ்கிறோம். உயர் வேக இண்டெர்நெட் நம்மை இணைக்கிறது. நம்மை பல விஷயங்கள் இணைக்கிறது.

ஆனால் ஒன்றேயொன்று துண்டிக்கப்பட்டுள்ளது. அதுதான் அன்பு, தயை குணம், கருணை. தனிப்பட்ட கருணையையும் அன்பையும் தயா குணத்தையும் உலகமயமாக்க முயற்சி செய்வோம். செயல்படாத நிலையில் ஏற்படும் கருணையோ, அன்போ அல்ல, மாற்றங்களைக் கொண்டு வரும் அன்பு. அதாவது நீதி, சமத்துவம், சுதந்திரத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் கருணை, அன்பு.

மகாத்மா காந்தி கூறினார்: நாம் உண்மையில் இந்த உலகிற்கு அமைதியை கற்பிக்க வேண்டுமெனில் நாம் குழந்தைகளிடத்திலிருந்துதான் தொடங்க வேண்டும். 

18 ஆண்டுகளுக்கு முன்பு 103 நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான எனது சகோதர சகோதரிகள் 80,000 கி.மீ. பேரணி சென்றோம். குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான புதிய சர்வதேச சட்டம் உருவானது. நாங்கள் இதனைச் செய்து காட்டியுள்ளோம்.

ஒரு நபர் என்ன செய்ய முடியும் என்று நீங்கள் கேட்கலாம். எனது குழந்தைப்பருவ கதை ஒன்று என் நினைவுக்கு வருகிறது: காட்டில் பெரும் தீ மூண்டது. அனைத்து மிருகங்களும் ஓட்டம் பிடித்தன. அப்போது ஒரு சிறிய பறவை நெருப்பை நோக்கி முன்னேறியது. காட்டின் ராஜாவான சிங்கம் அதிர்ச்சியடைந்து எங்கு செல்கிறாய் என்று கேட்டது, நெருப்பை அணைக்கப் போகிறேன் என்றது அந்தப் பறவை. உனது அலகில் இருக்கும் ஒரு துளி நீரால் நெருப்பை அணைத்து விட முடியுமா? என்று சிங்கம் சிரித்தது. அதற்கு அந்த பறவை, ‘நான் என்னால் முடிந்ததைச் செய்கிறேன்’ என்றது. 

இன்று மலாலா போன்ற சிறு வயதினர் எங்கு பார்த்தாலும் எழுச்சி பெற்றுள்ளனர். இவர்கள் வன்முறைக்கு பதிலாக அமைதியை நாடுகின்றனர், தீவிரவாதத்திற்குப் பதிலாக சகிப்புத் தன்மையை நேசிக்கின்றனர். அச்சத்திலிருந்து தைரியத்திற்கு நடைபோட்டுள்ளனர்.

குழந்தைகளின் கனவுகளை மறுப்பது போன்ற மிகப்பெரிய வன்முறைகள் உலகில் இல்லை. 

நோபல் கமிட்டி என்னை சொற்பொழிவு ஆற்ற அழைத்தது, மரியாதையுடன் கூறுகிறேன், நான் அதனை நிறைவேற்ற முடியவில்லை. நான் இங்கு மவுனத்தின் சப்தத்தை, களங்கமற்றதன் அழுகையை பிரதிநிதித்துவம் செய்கிறேன். காணமுடியாததன் முகத்தை பிரதிநிதித்துவம் செய்கிறேன்” என்று உணர்ச்சி பொங்க அனைவரின் மனசாட்சியையும் தட்டி எழுப்புமாறு பேசினார் கைலாஷ் சத்யார்த்தி.
அம்ஜத் இசை
இவ்விழாவில் ‘அமைதியின் ராகம்’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இந்திய இசைக் கலைஞர் அம்ஜத் அலி கான், அவரின் மகன்கள் அமான், ஆயான், பாகிஸ்தான் இசைக் கலைஞர் ரஹத் படேஹ் அலி கான், நார்வே இசைக் கலைஞர் எட்வர்ட் கிரெய்க் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அசாம் டீ
நோபல் பரிசளிப்பு விழாவையொட்டி தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. அதில், இந்தியாவின் அசாம் மாநிலத்தில் விளையும் டீ, சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் விளையும் கீமுன் டீ கலந்து தயாரிக்கப்பட்ட புதிய சுவையுடன் கூடிய டீ பரிமாறப்பட்டது.

புதிதாய்ப் பிறந்த ‘நியூ’சிலாந்து 2

நியூசிலாந்து பற்றிய செய்திகள் அடிக்கடி நம் காதுகளை எட்டுவதில்லை. அவர்கள் நாட்டின் கிரிக்கெட் அணியினரைப் பற்றி மட்டுமேதான் நாம் கேள்விப்படுகிறோம். அந்த அளவுக்கு அமைதியான நாடா அது? பரபரப்பான எந்த விஷயமுமே அங்கு நடப்பதில்லையா?

மேலோட்டமாகப் பார்த்தால் ஆமாம் என்று விடை கூறிவிடலாம். ஆனால் நியூலாந்தின் போக்குகளைச் சற்றே கூர்ந்து கவனிப்பவர்களுக்கு அங்கு அமைதியான (ஆனால் அழுத்தமாக) ஒரு மாற்றம் நடந்து வருவதைப் புரிந்து கொள்ள முடியும். மாறிவரும் தங்கள் மனநிலையை நியூசிலாந்து தெளிவாகவே பதிவு செய்து வருகிறது. இதை அறிய வேண்டுமானால் அந்த நாட்டின் சரித்திரத்தை நாம் முதலில் புரட்டிப் பார்க்க வேண்டும்.

ஆவணங்களின்படி முதலில் நியூசிலாந்தை அடைந்த ஐரோப்பியர்கள், போர்சுக்கீசியர்கள்தான். ஏபெல் டஸ்மான் என்பவர் தலைமையில் இவர்கள் குழு நியூசிலாந்தில் இறங்கியது. உள்ளூர் வாசிகள் கடுமையாகப் போரிட்டனர். போர்த்துகீசியர்களை இவர்கள் ஓடஓட விரட்டினாலும், தங்கள் இனத்தில் ஒருவர் இறந்ததை இவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதுவும் துப்பாக்கி குண்டினால் அவர் இறந்து அவர்களுக்குப் பேரதிர்ச்சி. காரணம் துப்பாக்கி என்பது அவர்களுக்கு அறிமுகமாகாத ஒன்று.

பயம் கொண்ட ஐரோப்பியர்களும் அதற்குப் பிறகு பல வருடங்களுக்கு அந்தப் பக்கமாக தலையை வைத்துகூடப் படுக்கவில்லை. 1769ல் பிரிட்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் குக் ஒரு பெரும் குழுவுடன் கிட்டத்தட்ட நியூசிலாந்து கடற்கரை முழுவதும் காலடி வைத்தார்.

மவோரி இனத்தவர் மிகச் சிறப்பான சமூக அடித்தளங்களோடு வாழ்வதைக் கண்டு வியந்தார். இத்தனைக்கும் அவர்கள் ஏதோ கற்கால நாகரிகத்தினர்போல வாழ்ந்து கொண்டிருந்தனர். சாலைகள் கிடையாது, பானைகள் கிடையாது. ஏன், சக்கரங்களே கிடையாது. அப்படி ஒரு வாழ்க்கை. தவிர வணிகத்தில் சிறிதும் விருப்பம் இல்லாதவர்களாக இருந்தார்கள். எளிதில் கோபப்படுபவர்களாகவும் காட்சியளித்தார்கள். என்றாலும் சமூகம் என்ற விதத்தில் சிறப்பாகவே இணைந்திருந்தார்கள்.

மவோரி என்ற வார்த்தைக்குப் பொருள் ‘இயல்பான’ - அதாவது ‘தனிச்சிறப்பு இல்லாத’ என்பதுதான். இப்படி ஓர் அர்த்தம் கொண்ட வார்த்தையைப் பெருமையாகவே ஏற்றுக் கொண்டிருந்தனர் அந்த மக்கள். தங்கள் எல்லைக்குள் வந்து சேர்ந்த வெளிநாட்டவர்களை ‘பகேஹா’ என்று அவர்கள் குறிப்பிடத் தொடங்கினர்.

டச்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும் இங்கு கால் பதித்ததைக் கண்டதும் பிரான்ஸ் நாட்டின் அரசும் நியூசிலாந்து மீது ஒரு கண் பதிந்தது. அதற்குப் பிறகு பல ஐரோப்பியர்களும், வட அமெரிக்கர்களும் மாறி மாறி அங்கே வரத் தொடங்கினர். சுறா பிடிக்க, கடல் மீன் பிடிக்க, வணிகத்துக்கு என்று பலவித காரணங்கள். இந்த மாற்றங்களை மவோரி இனத்தவர் பெரிய எதிர்ப்பு இல்லாமல் ஏற்றுக் கொண்டனர் என்பது வியப்பு.

நிலம்தான் ஏராளமாக இருக்கிறதே. புதியவர்களும் இருந்து விட்டுப் போகட்டுமே. இப்படி நினைத்த மவோரி இனத்தவருக்கு அடுத்த அடி காத்திருந்தது. 1820க்களில் நியூசிலாந்துக்கு வந்திறங்கிய ஐரோப்பிய ஆண்களில் கணிசமானவர்கள் மவோரிப் பெண்களை மணந்து கொண்டார்கள்.

இதில் மவோரி ஆண்களுக்கு எரிச்சல். கலப்பு மணத்தை எதிர்த்தனர் என்பது முக்கிய காரணம் அல்ல! திருமண வயதுப் பெண்களில் பலரையும் ஆங்கிலேய ஆண்கள் திருமணம் செய்து கொள்ளத் தொடங்கியதால் மவோரி இளைஞர்களுக்குக் கல்யாணத்திற்கு இளம்பெண்கள் போதிய அளவில் கிடைக்காமல் போயினர்.

எரிச்சலுக்கு மற்றொரு காரணமும் இருந்தது. அவர்கள் இனப் பெண்களை ஐரோப்பியர்கள் மணந்து கொண்டனர். ஆனால் அவர்கள் இன ஆண்களை மணந்து கொள்ள ஐரோப்பிய இளம் பெண்கள் முன்வரவில்லை. இந்தப் ‘பாரபட்சமான போக்கு’ அவர்களை எரிச்சல் கொள்ள வைத்தது.

பிற ஐரோப்பிய இறக்குமதிகளும் மவோரிக்களைத் திணறடித்தன. உருளை, வெங்காயம், சிக்கன், கோதுமை என்று ஒவ்வொன்றுமே மவோரி கலாச்சாரத்தைப் புரட்டிப் போட்டன. புதிய பயிர்களை விளைவித்து ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியும் செய்யத் தொடங்கி விட்டார்கள்.

ஆனால் ஐரோப்பியர்கள் எதைக் கொடுத்தாலும் (இறக்குமதி) உடனடியாக அதற்கான பணத்தை எதிர்பார்த்ததை மட்டும் மவோரிக்களால் எளிதில் ஜீரணிக்க முடியவில்லை. அவர்கள் பரிசுக் கொள்கைகளில் முதலாவது அடிபடுகிறதே! தவிர பொருளுக்கு பதிலாக வேறு பொருளைத்தானே கொடுக்க முடியும். இவர்கள் பணத்தை எதிர்பார்க்கிறார்களே.

ஒருவழியாக பணத்தின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டார்கள். முக்கியமாக பொருள்களைவிட பணத்தை உறவினர்களிடமிருந்து மறைத்து வைப்பது சுலபம் என்ற கோணம் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது! என்றாலும் கரன்ஸி நோட்டுகளைவிட நாணயங்களைதான் அவர்கள் மிக அதிகமாக விரும்பினார்கள்.

உருளைக்கிழங்கு விளைச்சல் அமோகமாக இருக்கவே, வணிகம் அதிகமாகவே இருந்தது. உருளைக்கிழங்கு வணிகத்துக்கு மவோரி இனத்தவர் முக்கியத்துவம் கொடுத்ததற்கு ஒரு தனித்துவமான காரணமும் இருந்தது.

ஐரோப்பியர்கள் துப்பாக்கிகளை நியூசிலாந்துக்கு அறிமுகப்படுத்தினர். எதிராளியைப் பயப்படுத்த துப்பாக்கிகள் எவ்வளவு பயன்படும் என்பதை அறிந்து கொண்டவுடன் ஒவ்வொரு மவோரி குடும்பமும் தானும் ஒரு துப்பாக்கியை வைத்திருக்க வேண்டுமென்று விரும்பியது. வேடிக்கை என்னவென்றால் எங்கிருந்தோ வந்து சேர்ந்த ஐரோப்பியர்களுக்கு எதிராக துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டுமென்று அவர்கள் நினைக்கவில்லை.

மாறாக அவர்களுக்குள் நடைபெற்ற உட்பூசலில்தான் பங்காளிகளை போட்டுத்தள்ள வேண்டுமென்று நினைத்தார்கள். அதாவது அவர்கள் எண்ணம் இப்படியிருந்தது. தங்களின் விவசாய நிலங்களுக்குப் பங்காளிகள்தானே போட்டியிடுகிறார்கள். வெளிநாட்டினர் காலியாக இருக்கும் நிலத்தில்தானே குடியேறுகிறார்கள்.

இதில் வேதனை என்னவென்றால் துப்பாக்கிக்குப் பதிலாக உருளைக்கிழங்கை ஏற்றுமதி செய்தாக வேண்டிய கட்டாயம். இதற்காக அவர்கள் புதிய அசுத்தமான நிலங்களில் எல்லாம் விவசாயம் செய்யத் தொடங்கினார்கள். இதன் காரணமாக அவர்கள் ஆரோக்கியம் குலையத் தொடங்கியது. அவர்கள் ஆரோக்கியத்தைத் தொலைக்க வேறு சில முக்கிய காரணங்களும் உருவாயின.

(இன்னும் வரும்)

புதிதாய் பிறந்த 'நியூ'சிலாந்து 1

நியூசிலாந்தைப் பொறுத்தவரை ‘அட அப்படியா’ தகவல்கள் நிறைய உண்டு. நமக்குத் தெரிந்த சில விஷயங்களைக்கூட நாம் சட்டென்று நியூசிலாந்துடன் தொடர்புபடுத்திப் பார்க்காமல் இருந்திருப்போம்.
எவரெஸ்ட் சிகரத்தை முதலில் அடைந்த இருவரில் ஒருவரான எட்மண்ட் ஹில்லாரி நியூசிலாந்தைச் சேர்ந்தவர்.மற்ற எந்த நாடுகளையும்விட அதிக அளவில் பென்குவின்களைக் கொண்டது நியூசிலாந்து. நியூசிலாந்தின் மிகப் பிரபல நகரமான ஆக்லாந்து வசிப்பதற்கு மிகவும் ஏற்ற நகரம். அதாவது குறைந்த செலவில் நிறைவான வாழ்க்கை வாழ முடியும். அங்குள்ள மூன்று குடும்பங்களில் ஒன்று என்கிற அளவில் படகுகள் உள்ளன.
தன்பாலின திருமணத்தை நியூசிலாந்து சட்டபூர்வமாக ஏற்றிருக்கிறது. சுமார் 26,000 வருடங்களுக்குமுன் ஒரு மிகப் பெரிய எரிமலை நியூசிலாந்து பகுதியில் வெடித்தது. இதன் காரணமாகத்தான் அங்கு ‘டாப்போ ஏரி’ உருவானது.உலகின் மிகப் பெரிய பூச்சி இனம் (Giant Weta) நியூசிலாந்தில்தான் உள்ளது. ஒரு குருவியைவிட அதிக கனம் கொண்டதாக இந்தப் பூச்சி இருக்கும். நாட்டில் மூன்றில் ஒரு பங்கு பூங்காக்களால் ஆனது. ஏதோ திறந்த வெளிப் பூங்காக்கள் அல்ல. வேலியிடப்பட்டு நன்கு பாதுகாக்கப்படும் பூங்காக்கள்.
உலகிலேயே இரண்டு நாடுகள்தான் மருந்து நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விளம்பரம் செய்ய அனுமதிக்கின்றன. அவற்றில் ஒன்று அமெரிக்கா. மற்றொன்று? உங்களுக்கே இந்நேரம் யூகிக்க முடிந்திருக்கும்.நியூசிலாந்து ஒரு தீவு நாடு. தென்மேற்குப் பசிபிக் கடலில் உள்ளது. இரண்டு நிலப்பகுதிகள் இணைந்த பகுதி. ஆஸ்திரேலியாவுக்குக் கிழக்காக 1500 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இவ்வளவு தனிமையாக இருப்பதாலோ என்னவோ அங்கு மக்கள் குடியேற்றம் மிகவும் மெதுவாக நிகழ்ந்தது. இங்கு மக்கள் குடியேறி 800 வருடங்கள்தான் ஆகின்றன. அந்த விதத்தில் நியூசிலாந்து ஒரு ‘நியூ’ நாடுதான்.
இப்போது கூட அந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மிகக் குறைவான மக்கள் தொகைதான். தலைநகரம் வெலிங்டன். ஆனால் அதிக மக்கள் தொகை கொண்ட, அதிக பிஸியான நகரம் ஆக்லாந்துதான். எக்கச்சக்கமான செம்மறி ஆடுகளைக் கொண்ட நாடு நியூசிலாந்து. சுமார் நான்கு கோடி செம்மறி ஆடுகள். கணக்கிட்டால் ஒவ்வொருவருக்கும் ஒன்பது செம்மறி ஆடுகள்.
கிரிக்கெட் ஆர்வமுள்ளவர்கள் நியூசிலாந்து வீரர்களை ‘கிவிக்கள்’ என்று அழைப்பதை அறிந்திருப்பார்கள். கிவி என்பது பறக்க முடியாத ஒரு பறவை. நியூசிலாந்தில் அதிக அளவில் காணப்படுகிறது. நியூசிலாந்தின் நாணயத்தின் பெயர்கூட கிவி டாலர்தான். ஒரு டாலர் 100 சென்ட்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் விமானப்படையின் லோகோகூட கிவி பறவைதான்.
ரேடியோ கார்பன் டேட்டிங் எனும் அறிவியல் முறைப்படி ஆராய்ந்தபோது நியூசிலாந்தில் கி.பி. 1250ல்தான் முதல் குடியேற்றம் நடந்திருக்க வேண்டுமென்று கூறுகிறார்கள். அப்படிக் குடியேறியவர்களின் கலாச்சாரத்தை மவோரி என்கிறார்கள். ஒருவித நாடோடிகளின் கலாச்சாரம் இது.
இவர்களிடையே உடு (Utu) என்ற பொருளாதாரப் பரிமாற்றம் இருந்தது. இதற்கு மூன்று கொள்கைகள் அடிப்படையாக இருந்தன. ஒன்று, கொடுப்பவர் மனப்பூர்வமாகக் கொடுக்க வேண்டும். பதிலுக்கு எதையும் எதிர்பார்க்கும் எண்ணம் அவருக்கு இருக்கக் கூடாது. இரண்டு,
வாங்கிக் கொள்பவர் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். சொல்லப் போனால் அதைவிட அதிக மதிப்புள்ள பொருளை திருப்பிக் கொடுக்க வேண்டும். மூன்றாவது, இதுபோன்ற பரிமாற்றங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
கேட்கவே இன்பமாக இருக்கிறதில்லையா? ஆனால் இந்தக் கலாச்சாரத்தில் இன்னொரு சுவாரசியமான கோணமும் உண்டு. மேற்படி விதிகள் அவமானம் என்பதற்கும் பொருந்தும். அதாவது அவமானப்படுபவர் அந்த அவமானத்தை அதிக அளவில் எதிராளிக்குத் திருப்பித்தர வேண்டும். இப்படி ஒருவரையொருவர் அவமானப்படுத்திக் கொள்வது தொடர்ந்து நடைபெற வேண்டும்!
இவர்களுடைய நாடோடிக் கதைகளில் ஒரு தனித்துவம் உண்டு. ஒருவர் வர்ணிப்பதுபோலத்தான் இந்தக் கதைகள் இருக்கும். தான் வாழ்வதற்குப் பல நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களை அவர் கூறுவார். ஆனால் அவர் கண் எதிரே அவை நடப்பதுபோல நிகழ்கால வர்ணனைகளாகதான் அவை இருக்கும். கலாச்சாரத்தை மீறியதால் கிடைக்கும் தண்டனைதான் நோய்கள் என்று நம்பினார்கள். யாராவது நோய்வாய்ப்பட்டால் அவரை உடனே தனி இடத்திற்கு மாற்றிவிடுவார்கள். மாந்திரீகம் நடைபெறும். ஒவ்வொரு நோயும் ஒவ்வொரு தீயசக்தியின் வேலை. உதாரணத்திற்கு காசநோயை உண்டாக்கும் தீயசக்தியின் பெயர் டோக். கழுத்துப் பகுதியில் ஏற்படும் பிரச்சினைகளுக்குக் காரணம் ஹுரா.
சிப்பிகள், மீன்கள், வாத்துகள் போன்றவை இவர்களின் முக்கிய உணவுகள்.இரண்டுக்கு மூன்று மீட்டர் அளவிலான குடிசைதான் இருப்பிடம். ஜன்னல் கிடையாது, சிம்னி கிடையாது. 18ம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இங்கே எட்டிப் பார்க்க, மவோரி கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றமடைந்தது. அந்த மாற்றம் நியூசிலாந்தின் தலையெழுத்தையே புரட்டிப் போட்டது. இன்றுவரை பல சிக்கல்களைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது.
(இன்னும் வரும்..)

தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றம் அல்ல: சட்டப் பிரிவை நீக்க மத்திய அரசு முடிவு

மேற்கத்திய நாடுகளைப் போலவே இந்தியாவிலும் தற்கொலை முயற்சி குற்றம் என்கிற சட்டப் பிரிவு விரைவில் நீக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது பல்வேறு தரப்பினர் இடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 309-ன் படி தற்கொலை மற்றும் தற்கொலைக்கு முயற்சி செய்வது குற்றமாகக் கருதப்படுகிறது. தற்கொலைக்கு முயற்சித்தவர் மரணத்தி லிருந்து தப்பிவிட்டால் அவரை ஓர் ஆண்டு வரை சிறையில் அடைக்கவும் அபராதம் விதிக்கவும் மேற்கண்ட சட்டப் பிரிவு வகை செய்கிறது. இந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில்தான், கடந்த ஜூலை மாதம் ‘காமன் காஸ்’ என்கிற தொண்டு நிறுவனம் ‘மருந்துகளால் காப்பாற்ற முடியாத நிலைக் குச் சென்றுவிட்ட நோயாளிகளை அவர் களின் விருப்பத்தின் பேரில் சட்டப்பூர்வமாக கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தை அணு கியது. இந்த வழக்கில் அரசு தரப்பில், “கருணைக் கொலையும் ஒருவகையில் தற்கொலையே. தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி சட்டப்படி குற்றம். அதன்படி, கருணைக் கொலையும் சட்டப்படி குற்றமே என்பதால் அதை அனுமதிக்கக் கூடாது” என்றது.
மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், “தற்கொலையுடன் கருணைக்கொலையை ஒப்பிடக் கூடாது. நலமாக இருக்கும் ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சிப்பதுதான் தற்கொலை” என்று வாதிட்டார். நீதிமன்றம் இதுதொடர்பாக நாடு முழுவதும் விவாதங்கள் தேவை என்று கூறியதுடன் இதுகுறித்து பதில் அளிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
ஏற்கெனவே பல ஆண்டுகளாக தற்கொலை முயற்சி குற்றம் என்கிற சட்டப் பிரிவை நீக்க வேண்டும் என்று நிலவிய கருத்துக்கு மேற்கண்ட வழக்கு வலு சேர்த்தது. அதன்படி விரைவில் 309-வது சட்டப் பிரிவு நீக்கப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள் துறை இணை அமைச்சர் ஹரிபாய் பரத்திபாய் சவுத்ரி மாநிலங்களவையில் நேற்று அளித்த பதில்:
கடந்த ஆகஸ்டில் இந்திய சட்டக் கமிஷன், மத்திய அரசுக்கு அளித்த 210-வது அறிக்கையில், ‘தற்கொலை முயற்சி என்பதை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும். அது குற்றமற்ற தன்மை கொண்டது. எனவே காலத்துக்கு ஒவ்வாத 309-வது சட்டப்பிரிவை நீக்க வேண்டும்’ என்று பரிந்துரைத்திருந்தது.
இந்த முடிவுக்கு 18 மாநிலங்கள் மற்றும் நான்கு யூனியன் பிரதேசங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் அடிப்படையில் 309-வது பிரிவை விரைவில் நீக்குவது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
309-வது பிரிவு முட்டாள்தனம்: நீதிபதி சந்துரு
முன்னாள் நீதிபதி சந்துரு கூறியதாவது:
முழு மனதுடன் இதை வரவேற்கிறேன். தற்கொலைக்கு முயற்சிப்பது குற்றம் என்று வரையறுக்கும் 309-வது சட்டப் பிரிவு முட்டாள்தனமானது. அந்த சட்டப் பிரிவின்படி அங்கே ஒரு குற்றம் முழுமை அடைந்துவிட்டால் அதைச் செய்தவரை தண்டிக்க இயலாது. அதேநேரம் குற்றம் முழுமை அடையாமல் தோல்வி அடைந்துவிட்டால் அதைச் செய்தவரை தண்டிக்கிறார்கள். ‘ஏன் நீ சாகவில்லை’ என்று கேட்பதுபோல் உள்ளது இது.
கடந்த 1986-ம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த பி.ரத்தினம் என்பவர் இந்த சட்டப் பிரிவை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர், ‘ஒருவருக்கு வாழ உரிமை இருப்பதைப் போல வாழாமல் இருக்கவும் உரிமை இருக்கிறது’ என்று வாதிட்டார். அதற்கு நீதிமன்றம், “ஒருவரின் வாழ்வுரிமையை அரசியல் சாசனப் பிரிவு 21 வலியுறுத்துகிறது. அதன்படி அதிலேயே வாழாமல் இருக்கவும் உரிமை இருக்கிறது” என்று தீர்ப்பு அளித்தது. பேச்சுரிமைக்காக அரசியல் சாசன பிரிவிலேயே பேசாமல் இருப்பதற்கான உரிமையும் இருப்பதை போலத்தான் இதையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆனால், 1988-ம் ஆண்டு பஞ்சாப்பின் ‘கவுர்’ வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு பெஞ்ச் மேற்கண்ட தீர்ப்பை மறுத்தது. “அப்படி எல்லாம் பேசிக்கொண்டிருக்க முடியாது. தற்கொலை முயற்சி என்பது குற்றமா, குற்றமற்றதா என்பதில் நீதி மன்றங்கள் தலையிட கூடாது. நாடாளுமன்றமே முடிவு செய்ய வேண்டும்” என்று தீர்ப்பு அளித்தது.
அன்று முதல் இந்த சர்ச்சை தொடர்கிறது. எனவே 309-வது பிரிவு நீக்கப்படுவது சரியானதே. அதேபோல தற்கொலை செய்துகொள்வதையும் குற்றம் என்கிற சட்டப் பிரிவு நீக்கப்பட வேண்டும் என்று சந்துரு தெரிவித்தார்.

Tuesday 9 December 2014

கோவை சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி


TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ்

ஒன்பதாம் வகுப்பு
கடவுள் வாழ்த்து
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அழகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே
- கம்பர்

சொற்பொருள்:
* உளவாக்கல் - உண்டாக்குதல், படைத்தல்
* நீக்கல் - அழித்தல்
* நீங்கலா - இடைவிடாது
* அலகிலா - அளவற்ற
* அன்னவர் - அத்தகைய இறைவர்
* சரண் - அடைக்கலம்
* நிலைபெறுத்தல் - காத்தல்
* தலைவர் - இறைவர்

இலக்கண குறிப்பு:
* யாவையும் - முற்றும்மை
* ஆக்கல், நீக்கல், விளையாட்டு - தொழிற்பெயர்
* அலகிலா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

ஆசிரியர் குறிப்பு:
* நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகிலுள்ள தேரழுந்தூரில் கம்பர் பிறந்தார்.
* இவர் ஏர் எழுபது, சிலை எழுபது, சரஸ்வதி அந்தாதி, சடகோபர் அந்தாததி, திருக்கை வழக்கம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
* இவர் குலோதுங்கச்சோழனின் அவைப் புலவராக விளங்கினார்.
* திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர்.
* கவிச்சக்ரவர்த்தி என்றும் கல்வியில் பெரியவர் கம்பர் என்றும் போற்றப்பட்டார்.
* இவரின் காலம் கி.பி.பனிரெண்டாம் நூற்றாண்டு.

நூல் குறிப்பு:
* வடமொழியில் வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணத்தை தழுவித் தமிழில் கம்பர் எழுதியதே கம்பராமாயணம்.
* கம்பர் இந்நூலுக்கு இட்ட பெயர் - இராமாவதாரம்
* இது பால காண்டம், அயோத்திய காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்களை உடையது.
* உத்திரபிரதேச மாநிலத்தில் பாயும் சரயு நதியின் வளம் கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.
* கம்பராமாயணப் பாடல் பாலகண்டத்து ஆற்றுப்படலத்தில் உள்ளது.

திருக்குறள்
சொற்பொருள்:
* அகழ்வாரை - தோண்டுபவரை
* தலை - சிறந்த பண்பு
* பொறுத்தல் - பொறுத்துக்கொள்ளுதல்
* இறப்பு - துன்பம்
* இன்மை - வறுமை
* ஒரால் - நீக்குதல்
* மடவார் - அறிவிலிகள்
* விருந்து - வீட்டிற்கு புதியவராய் வந்தவர்
* நிறை - சால்பு
* ஒறுத்தாரை - தண்டித்தவரை
* போன்றும் - உலகம் அழியும்வரை
* நோநொந்து - துன்பத்திற்கு வருந்தி
* மிக்கவை - தீங்குகள்
* தகுதியான் - பொறுமையால்
* துறந்தார் - பற்றற்றவர்
* இன்னா - தீய

ஆசிரியர் குறிப்பு:
* இவர் நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபாங்கி, பெருநாவலர் என்னும் சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுவார்.
* இவரின் காலம் கி.மு.31 ஆண் நூற்றாண்டு என்று கூறுவர்.

நூல் குறிப்பு:
* திரு+குறள் = திருக்குறள்
* திரு= செல்வம், சிறப்பு, அழகு, மேன்மை, தெய்வத்தன்மை எனப் பல பொருள் உண்டு.
* குறள் = குறுகிய அடி உடையது.
* இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பெரும் பிரிவுகளை கொண்டது.
* அறம் 38 அதிகாரங்களாகவும், பொருள் 70 அதிகாரங்களாகவும், இன்பம் 25 அதிகாரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
* இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
* இந்நூலை போற்றிப் பாராட்டிய பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலை.

இலக்கண குறிப்பு:
* பொறுத்தல் - தொழிற்பெயர்
* அகல்வார், இகழ்வார் - வினையாலணையும் பெயர்
* மறத்தல், பொறுத்தல் - தொழிற்பெயர்
* நன்று - குறிப்பு வினைமுற்று
* விருந்து - பண்பாகு பெயர்
* ஒரால், நீக்குதல் - தொழிற்பெயர்
* நீங்காமை - எதிர்மறைத் தொழிற்பெயர்
* ஒருத்தார், பொறுத்தார் - வினையாலணையும் பெயர்
* தற்பிறர் - ஏழாம் வேற்றுமைத் தொகை.
* செய்யினும் - இழிவு சிறப்பும்மை
* நொந்து - வினையெச்சம்
* அரண், திறன் - ஈற்றுப்போலிகள்
* விடல் - அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
* இறந்தார் - வினையாலணையும் பெயர்
* உண்ணாது - வினையெச்சம்
உரைநடை: திராவிட மொழிகள்
மொழிகள்:
* தனக்கென தனிச்சிறப்பும், பல மொழிகள் தோன்றிவளர அடிப்படையாகவும் உள்ள மொழி = மூலமொழி
* மூலமொழியில் இருந்து தோன்றி வளர்ந்த மொழிகள் - கிளைமொழிகள்.
* இந்திய மானிடவியல் கணக்கெடுப்பு:
* இந்தியாவில் மொத்தம் பனிரெண்டு மொழிக்குடும்பங்கள் உள்ளன.
* அவற்றுள், 324 மொழிகள் பேசப்படுவதாக இந்திய மானிவியல் கணக்கொடுப்பு தெரிவிக்கின்றது.

இந்தியமொழிக் குடும்பங்கள்:
* இந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தையும் "இந்தோ-ஆசிய மொழிகள், திராவிட மொழிகள், ஆஸ்திரோ-ஆசிய மொழிகள், சீன-திபெத்திய மொழிகள்" என அடங்குவர்.
* நம்நாட்டில் 1300க்கும் மேற்பட்ட மொழிகளும், அதன் கிளைமொழிகளும் பேசப்பட்டு வருகின்றன.

மொழிகளின் காட்சிசாலை:
* மொழியியல் அறிஞர் ச. அகத்தியலிங்கம் இந்திய நாட்டை "மொழிகளின் காட்சிசாலை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
* திராவிட மொழிக் குடும்பங்கள்:
தென்திராவிட மொழிகள்:
* தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, இருளா
நடுத்திராவிட மொழிகள்:
* தெலுங்கு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலாமி, பர்ஜி, கதபா, கோண்டா, நாயக்கி, பொங்கோ, ஜதபு
வடதிராவிட மொழிகள்:
* கரூக், மால்தோ, பிராகுய்
* திராவிட பெரு மொழிகள் = தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்
* திராவிடம்: திராவிடர் பேசிய மொழியே திராவிட மொழியாகும்.
* திராவிடம் என்னும் சொல் திராவிடநாடு எனும் பொருளைத் தரும்.
* திராவிடம் என்னும் சொல்லை முதலில் பயன்படுத்தியவர் - குமாரிலபட்டர்.
* திராவிட மொழிகள், திராவிட இநம், திராவிட நாகரிகம் முதலிய சொற்றொடர்களில் திராவிடம் என்னும் சொல் பெயரடையாக வந்துள்ளது எனக் கால்டுவெல் கூறியுள்ளார்.
* கால்டுவெல் திராவிடம் என்னும் சொல்லை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

கால்டுவெல் கூற்று:
* தமிழையும் அதன் கிளைமொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளை ஒரு காலத்தில் தமிளியன் (tamilian) அல்லது தமுலிக் (tamulic) என்று அழைத்தனர்.
* அவற்றுள் தமிழ், மிகுந்த சிற்ப்பும் பழமையும் பெற்ற மொழியே எனினும், பல திராவிட மொழிகளில் அதுவும் ஒன்று.
* எனவே, இவ்வினமொழிகள் அனைத்தையும் "திராவிட" எனும் சொல்லைத் தாம் கையாண்டதாகத் கால்டுவெல் கூறியுள்ளார்.

ஈராஸ் பாதிரியார் கூற்று:
* திராவிட என்னும் சொல்லே தமிழ் எனும் சொல்லிலிருந்து உருவானது.
* தமிழ் - திரமிள - திரவிட - திராவிட என உருவாயிற்று எனக் கூறுகிறார் மொழியியல் அறிஞர் ஈராஸ் பாரதிரியார்.
* திராவிட மொழிகள் என்றாலே தமிழ் மொழியைதான் குறிக்கும் என்கிறார்.

தலைமைச் சிறப்பு:
* திராவிட மொழிகள் அனைத்திற்கும் மூலமான மொழியை "முன்னைத் திராவிட மொழி, மூலத் திராவிட மொழி, தொன்மை திராவிட மொழி" எனப் பல்வேறு சொற்களால் குறிப்பர்.
* இம்மூலமொழியாக முதன்முதலில் தனித்து வளர்ந்த மொழி தமிழ்.
* மற்ற திராவிட மொழிகள் தமிழில் இருந்து பிறந்தவை.
* எண்பது விழுக்காடு அளவிற்குத் திராவிட மொளிக்கூறுகளைக் கொண்டுள்ள ஒரே திராவிட மொழி தமிழ்.

சிறுபஞ்சமூலம்
கனவனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை
எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் - பண்வனப்புக்
கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் தன்னோடு
வட்டான்நன் றென்றால் வனப்பு
- காரியாசான்

சொற்பொருள்:
* கண்ணோட்டம் - இறக்கம் கொள்ளுதல்
* எண்வனப்பு - ஆராய்சிக்கு அழகு
* வேந்தன் - அரசன்
* வனப்பு - அழகு
* கிளர்வேந்தன் - புகழுக்குரிய அரசன்
* வாட்டான் - வருத்தமாட்டான்

இலக்கணக்குறிப்பு:
* கண்ணோட்டம், செல்லாமை, உறைதல், என்றல் - தொழிற்பெயர்கள்
* கேட்டார், வாட்டான் - வினையாலணையும் பெயர்

ஆசிரியர் குறிப்பு:
* காரியாசான் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது.
* இவர் சமண சமயத்தை சார்ந்தவர்.
* இவரும் கணிமேதவியாரும் ஒருசாலை மாணாக்கர்.
நூல் குறிப்பு:
* இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
* இந்நூலில் கடவுள் வாழ்த்துடன் 97 வெண்பாக்கள் உள்ளன.
* கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகையின் வேர்களும் உடல் நோயைத் தீர்ப்பன.
* இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் ஐந்து அறக்கருத்துகள் உள்ளன.
* ஐந்து அறக்கருத்துக்களும் மக்கள் மனநோயைப் போக்குவன.

பாஞ்சாலி சபதம்
சொற்பொருள்:
* எம்பி - என் தம்பி
* களிக்க - மகிழ
* மடப்பிடி - பாஞ்சாலி
* கோமான் - அரசன்(திருதராட்டிரன்)
* நுந்தை - நும் தந்தை
* அடவி - காடு
* தடந்தோள் - வலியதோள்
* மருங்கு - பக்கம்
* குலவு - விளங்கும்
* பண்ணவர் - தேவர்
* அரம்பையர் - தேவமகிளிர்
* வீறு - வலிமை
* கோலமுறு - அழகு மிக்க
* செறிந்த - அடர்ந்து
* கா - காடு
* குலவு - விளங்கும்
* ஞாலம் - உலகம்
* ஞானம் - அறிவு
* புன்மை - இழிந்த தன்மை
* சதுரங்கச் சேனை - நால்வகைப் படைகள்

இலக்கணக்குறிப்பு:
* அழைத்தனன் - முற்றெச்சம்
* மாநகர் - உரிச்சொற்றொடர்
* சார்ந்தவர் - வினையாலணையும் பெயர்
* நுந்தை - நும் தந்தை என்பதன் மரூஉ
* அடவி மலையாறு - உம்மைத்தொகை
* கடந்து - வினையெச்சம்
* தடந்தோள் - உரிச்சொற்றொடர்
* செறிந்து, பாய்ந்து - வினையெச்சம்
* பாலாடையும் நறுநெய்யும் தேனும் - எண்ணும்மை
* நீளமுடி, நன்செய், புன்செய் - பண்புத்தொகை
* காத்தல் - தொழிற்பெயர்
* தொல்லுலகு - பண்புத்தொகை
* தாளமும் வேளமும் - எண்ணும்மை
* பதமலர் - உருவகம்
* பாய்ந்து, செறிந்து - வினையெச்சங்கள்
* ஞாலமெலாம், மக்களெலாம் - எல்லாம் எனபதன் தொகுத்தல் விகாரம்.
* காத்தல் - தொழிற்பெயர்
* தாளமும் மேளமும் - எண்ணும்மை

ஆசிரியர் குறிப்பு:
* சுப்ரமணிய பாரதியார், தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தலி 11.09.1882 ஆண்டு பிறந்தார்.
* பெற்றோர் - சின்னசாமி - இலக்குமி அம்மையார்
* துணைவி - செல்லம்மாள்
* இவர் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய நூல்களை படைத்துள்ளார்.
* ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு முதலிய உரைநடை இலக்கியங்களை எழுதியுள்ளார்.
* இவர் 11.12.1921 அன்று மறைந்தார்.
நூல் குறிப்பு:
* பாஞ்சாலி சபதம் வியாசரின் பாரதத்தை தழுவி எழுதப் பெற்றது.
* பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் உடையது.
* இது சூழ்ச்சிச்சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்டது.
சிறப்பு:
* பாரதியார் "பாட்டுக்கொரு புலவன், நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா, தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, தேசியக்கவி, மாகவி"  எனப் புகழப்பெற்றார்.
* சுதேசமித்திரன், இந்திய முதலிய இதழ்களின் ஆசிரியராக இருந்தார்.

உரைநடை: இக்காலக் கவிதைகள்
உரைநடைக் காலம்:
* இருபதாம் நூற்றாண்டை "உரைநடைக் காலம்" என்பர்.
* எனினும் கவிதை வடிவமும் கவினுற வளர்ந்து வந்தது.
* இருபதாம் நூற்றாண்டில் அறிவியலும், இலக்கியமும் விரைவாக வளர்ந்தன.
* செய்யுள், உரைநடை என்னும் இரு வடிவிலும் புதுவகை இலக்கியங்கள் மலர்ந்துள்ளன.
பாரதியார்:
* பாரதியாரின் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டில் அரும்பிய மறுமலர்ச்சிக்கு வித்தாக   இருந்தது.
* மன்னர்களை மட்டுமே மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றி, எளிய மக்களை நோக்கிக் கவிதைக் கருவியைத் திருப்பி அமைத்த பெருமை பாரதியைச் சாரும்.
பாரதிதாசன்:
* தமிழ், தமிழர், தமிழுணர்வு, சமுதாய மறுமலர்ச்சி, பெண்ணடிமை, திராவிட இயக்கச் சிந்தனை, பொதுவுடமை முதலியவற்றை பாரதிதாசன் கவிதைகள் வெளிப்படுத்தின.
* "எங்கள் பகைவர் எங்கே மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே"

கவிமணி:
*கவிமணியின் கவிதைகள் கற்போரைக் களிப்பில் ஆழ்த்துவன.
*கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்தவனும் நீதானோ, எனத் தாலாட்டு பாடியவர்.
*"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா"
*"சாலைகளில் பல தொழில்கள் பெருகவேண்டும்
சபைகளிலே தமிழ் எழுந்து முழங்கவேண்டும்"
நாமக்கல் கவிஞர்:
*இவரின் கவிதைகளில் காந்தியச் சிந்தனை அதிகம்.
"தமிழன் என்றேர் இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு"
பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும்
பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்"
"கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்"
* காந்தியக் கவிஞர் எனப் போற்றப்படுபவர்.
முடியரசன்
* இவரின் கவிதையில் பகுத்தறிவு நோக்கும், முற்போக்குச் சிந்தனையும் தமிழுணர்வும் அதிகம் காணலாம்.
* ஆங்கிலமோ பிறமொழியோ
பயின்றுவிட்டால்
அன்னைமொழி பேசுவதற்கு நாணுகின்ற
தீங்குடை மனப்போக்கர் வாழும்நாட்டில்
தென்படுமோ மொழியுணர்ச்சி?

சுரதா:
* சுரதாவின் கவிதைகளில் புதிய உவமைகளைக் காணலாம்.
* உவமைக் கவிஞர் என்று அழைப்பர்.
* மறைமலையடிகளைப் பற்றி சுரதா பாராட்டுதல்.
முல்லைக்கோர் காடுபோலும்
முத்துக்கோர் கடலேபோலும்
சொல்லுக்கோர் கீரன்போலும்
தூதுக்கோர் தென்றல்போலும்
கல்விக்கோர் கம்பன்போலும்
கவிதைக்கோர் பரணர்போலும்
வில்லுக்கோர் ஓரிபோலும்
விளங்கினார், வென்றார், நின்றார்.
* சுரதாவின் பாடல்களில் வரலாற்றுச் செய்திகளும், இலக்கண விளக்கங்களும் கலந்து வரும்.
* சுரதா மறைமலையடிகளாரை உவமைகளால் பாராட்டியுள்ளார்.
வாணிதாசன்:
* பாரதிதாசனைத் தொடர்ந்து இயற்கையின் அழகை எழிலுறப் படம் பிடித்துக் காட்டுவதில் வாணிதாசன் கவிதைகள் சிறந்து விளங்குகின்றன.
* சுத்தானந்த பாரதியார், பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன், தமிழ்ஒளி போன்றோர் மரபுக் கவிதைகளை புனைந்து தமிழன்னைக்கு மேலும் வளமும் பெருமையும் சேர்த்துள்ளனர்.
* மனிதகுல வளர்ச்சிக்கும் ஏற்றவாறு சிந்தனை மாற்றங்களும் சமூக மாற்றத்தின் விளைவே புதுக்கவிதையின் தோற்றம்.
* அமெரிக்கக் கவிஞர் "வால்ட்விட்மனின்" சாயலில் வசன கவிதை எழுதியவர் - பாரதியார்.
* பாரதிதாசன் உரைநடைகள் அனைத்தும் கவிதைநடை கொண்டவை.
* மேலை நாட்டு இலக்கியத் தொடர்பும், சமுதாயச் சூழ்நிலையும் தமிழில் புதியதொரு வடிவம் தோன்றக் காரணமாக இருந்தவை.
மணிக்கொடி:
* ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், கு.ப.இராசகோபாலன், க.நா.சுப்பிரமணியன் முதலியோர் தொடக்கத்தில் மணிக்கொடி என்னும் இதழில் புதுக்கவிதை எழுதினார்.
* எழுத்து: எஸ்.வைதீஸ்வரன், தருமு சிவராமு, மணி, சி.சு. செல்லப்பா முதலியோர் எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைப் படைத்தனர்.
வல்லிக்கண்ணன்:
* புதுக்கவிதை வரலாற்றில் வல்லிக்கண்ணன் பங்கு போற்றத்தக்கது.
ஏழையின் குடிசையில்
அடுப்பும் விளக்கும் தவிர
எல்லாமே எரிகின்றன.
* என்பது இவரின் புதுக்கவிதையன் எளிய வடிவை காட்டும்.
* புதுக்கவிதை வளர்ச்சியல் வல்லிக்கண்ணன் பங்கு போற்றத்தக்கது.
* எழுத்து என்னும் புதுக்கவிதைகளைப் படைத்தவர் - எஸ்.வைத்தீஸ்வரன், தருமு சிவராமு, மணி, சி.சு செல்லப்பா முதலியோர் ஆவர்.