Wednesday 29 January 2014

உலகெங்கும் காந்தியின் தபால்தலைகள்!

மகத்தான செயல்களைச் செய்தவர்களை கெüரவிப்பதற்காகத் தபால் தலைகள் வெளியிடப்படுகின்றன. ஒரு நாட்டின் தலைவர்களுக்கு அந்த நாடு தபால் தலைகள் வெளியிடுவது வழக்கமான ஒன்று. ஒரு நாட்டின் தலைவருக்கு பிற நாடுகள் தபால் தலை வெளியிடுவது அந்தத் தலைவருக்கு மட்டுமல்ல, அந்நாட்டுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைகிறது.
 அந்த வகையில் உலகின் பெரும்பாலான நாடுகளில் தபால்தலைகள் வெளியிடப்பட்ட தலைவராக மிளிர்கிறார் மகாத்மா காந்தி.
 தேசியத் தலைநகர் தில்லியில் காந்தியின் சமாதி அமைந்துள்ள ராஜ்காட் பகுதியில் தேசிய காந்தி நினைவு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கு, காந்தியின் நினைவைப் போற்றும் பல அரிய பொருள்களும், சேகரிப்புகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த அருங்காட்சியகத்தின் முதலாவது தளத்தின் வலது பக்கத்தில் உள்ள விசாலமான கூடத்தின் சுவர்களில் பல நாடுகளாலும் வெளியிடப்பட்ட காந்தியின் அரிதான தபால்தலைகள் கண்ணாடி சட்டத்தில் அலங்கரிக்கின்றன.
 காந்தியின் மறைவுக்குப் பிறகு, நாட்டின் முதலாவது சுதந்திர தினத்தின் போது (ஆகஸ்ட் 15, 1948) இந்திய தபால் துறை சார்பில் காந்தியின் உருவம் பொறித்த நான்கு வகையான தபால்தலைகள் வெளியிடப்பட்டன. இவற்றை வெளியிட அப்போதைய பிரமதர் ஜவஹர்லால் நேரு மிகுந்த முனைப்புக் காட்டினார். இவற்றை அச்சிடுவதற்கான அச்சு இயந்திர வசதி இந்தியாவில் இல்லாததால், ஸ்விட்சர்லாந்தில் அச்சிடப்பட்டன. 
 இந்தத் தபால்தலைகள் 1.5, 3.5, 12 அணாக்கள் மற்றும் ரூ.10 மதிப்பில் வெளியிடப்பட்டன. மகாத்மா காந்திக்கு வெளியிடப்பட்ட முதல் தபால்தலைகள் இவைதான். அந்தத் தபால் தலை மீது ஹிந்தி, உருதுமொழியில் பாபு என்றும், ஆங்கிலத்தில் மகாத்மா காந்தி என்றும் அச்சிடப்
 பட்டிருந்தது. 
 அதன்பிறகு, இந்தியாவுக்கு வெளியே உள்ள நாடுகளில் முதல்முதலாக அமெரிக்கா 1961, ஜனவரி 26-ஆம் தேதி காந்தியின் உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, இரண்டாவது நாடாக 1967-இல் காங்கோ நாடு வெளியிட்டது. போலந்து நாடு முதன்முதலில் மகாத்மா காந்திக்கான தபால் அட்டையை வெளியிட்டது.
 காந்தி பற்றிய நினைவு தபால் உறையை வெளியிட்ட முதலாவது வெளிநாடு ரோமானியாதான். காந்தியின் தபால் தலைகள் தற்போது மிகவும் அரிதானவையாகப் போற்றப்படுகின்றன. குறிப்பாக ரூ. 10 மதிப்பிலான தபால்தலை மிக அரிதானதாகவும், உலகில் ரூ.10 தபால்தலைகள் 18 மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜெனீவா நாட்டில் நடைபெற்ற ஒரு ஏலத்தில்கூட காந்தியின் உருவம் பொறித்த ரூ.10 தபால்தலை சுமார் ரூ.1 கோடிக்கு ஏலம் போனது.
 1969-இல் காந்தியின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின்போது 40-க்கும் மேற்பட்ட நாடுகள் காந்தியின் தபால் தலைகளை வெளியிட்டன. பூடான் இரு தபால்தலைகளையும், சோமாலியா நாடு மூன்று தபால்தலைகளையும் வெளியிட்டன. இந்தத் தபால்தலைகள் மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் அச்சிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த சி. ராஜகோபாலாச்சாரியார் தனது அலுவலக கடிதத் தொடர்புகளில் காந்தியின் தபால் தலைகளை மட்டுமே பயன்படுத்த விரும்பினார். அதன்பிறகு, அலுவலகப் பயன்பாட்டுக்கு நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டது. சர்வீஸ் ஸ்டாம்ப்ஸ் என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டது. ரூ. 10 பெயரிலான இந்தத் தபால்தலைகள் 100 மட்டுமே அப்போது அச்சிடப்பட்டன. இந்தத் தபால்தலைகள் இந்தியாவில் மிக அரிதான தபால்தலைகளாகக் கருதப்படுகின்றன.
 இந்தியாவில் 48-க்கும் மேற்பட்ட தபால் தலைகளும், 200 தபால் உறைகளும் காந்திஜியைக் கெüரவிக்கும் வகையில் சிறப்பு இலச்சினையுடன் வெளியிடப்பட்டன. உலகிலோ 100-க்கும் மேற்பட்ட நாடுகள் மகாத்மாவை கெüரவிக்கும் வகையில் அவரது உருவம்பொறித்த தபால்தலைகள் வெளியிட்டு, அதன்மூலம் தங்களையும் பெருமைப்படுத்திக் கொண்டுள்ளன. 
 - வே.சுந்தரேஸ்வரன்

No comments:

Post a Comment