Saturday 11 January 2014

2,342 வி.ஏ.ஓ., பணிக்கு ஜூன் 15ல் தேர்வு

சென்னை : நடப்பு ஆண்டிற்கான போட்டி தேர்வு அட்டவணையை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி., ), நேற்று வெளியிட்டது. 2,342 வி.ஏ.ஓ., பணியிடங்கள் உட்பட, 3,700 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வி.ஏ.ஓ., தேர்வு, ஜூன், 15ல் நடக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும், என்னென்ன போட்டித் தேர்வுகள் நடக்கும்; எந்த தேதியில் நடக்கும்; எத்தனை பணியிடங்களுக்கு என்ற விபரங்கள் அடங்கிய தேர்வு அட்டவணையை, தேர்வாணையம் வெளியிடுவது வழக்கம். நடப்பாண்டிற்கான தேர்வு அட்டவணை வெளியிட நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டியும், உடனடியாக அட்டவணையை வெளியிட வேண்டும் எனவும், 'தினமலர்' நாளிதழில், செய்தி வெளியானது.

இதையடுத்து, தேர்வாணைய தலைவர், நவநீதகிருஷ்ணன், நேற்று மாலை, நடப்பு ஆண்டிற்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டு கூறியதாவது:கடந்த ஆண்டு ஜனவரி, 31ல் தான், தேர்வு அட்டவணை வெளியானது; 2012ல், பிப்ரவரி மாதம் வெளியானது. இந்த ஆண்டு, மிகவும் முன்னதாக, ஜனவரி, 10ம் தேதியே வெளியிட்டு உள்ளோம்.இந்த ஆண்டு, 23 வகையான தேர்வுகள் நடக்க உள்ளது. இதில், குரூப் 2 பிரிவில், 1,181 இடங்கள்; கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணிக்கு, 2,342 இடங்கள்; ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கு, 98 இடங்கள் நிரப்பபட உள்ளன.கடந்த ஆகஸ்ட்டில் நடந்த, குரூப் 4 தேர்வின் முடிவு, இம்மாத இறுதியிலோ அல்லது பிப்ரவரி, முதல் வாரத்திலோ வெளியிடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

அறிவிக்கப்பட்டதில், 3,700 காலி பணியிடங்கள் மட்டும் இடம் பெற்று உள்ளன. குரூப் 1, குரூப் 4 உட்பட, எட்டு வகையான தேர்வுகளுக்கு, காலி பணியிடங்கள் விவரம் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து, தேர்வாணைய செயலர் விஜயகுமார் கூறுகையில், ''அரசிடம் இருந்து பெற்ற காலி பணியிடங்களை தெரிவித்து உள்ளோம். மற்ற தேர்வுகளுக்கான பணியிடங்கள், அரசிடம் இருந்து வந்ததும், அறிவிக்கப்படும்,'' என, தெரிவித்தார்.அதிகமான தேர்வர் பங்கேற்கும், வி.ஏ.ஓ., தேர்வு அறிவிப்பு, மார்ச், இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என்றும், தேர்வு, ஜூன், 15ல் நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 1,181 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வு, மே, 18ல் நடக்கிறது.தேர்வு அட்டவணை, www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment