“கூடங்குளம் அணுமின் நிலைய முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி 570 மெகாவாட்டை எட்டியது” என்று அணு மின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்தார்.
கூடங்குளம் அணு மின் நிலைய ஊழியர்கள் குடியிருக்கும் அணு விஜய் நகரில் குடியரசு தினவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அணு மின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் தேசியக் கொடியேற்றி வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி சனிக்கிழமை மாலை 570 மெகாவாட்டை எட்டியுள்ளது. இது ஒரு சாதனை அளவாகும். தாராபூர் உள்ளிட்ட நாட்டிலுள்ள அணு உலைகளில் இதுவரை உச்சபட்ச அளவாக 540 மெகாவாட் மின் உற்பத்தியே நடைபெற்றுள்ளது.
கூடங்குளம் முதலாவது அணு உலையில் இதுவரை 50 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டு மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
2-வது அணு உலையில் பல் வேறு கட்டமாக சோதனைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த அணு உலையிலும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்றார்.