Monday 15 September 2014

ஜனநாயகக் கடமையில் இளைஞர்கள்

ஜனநாயகம் என்பது டெமோஸ் (Demos), க்ரடீன் (Kratein) என்னும் இரண்டு கிரேக்கச் சொற்களில் இருந்து தோன்றிய வார்த்தை. டெமோஸ் என்றால் மக்கள் என்றும், க்ரடீன் என்றால் ஆட்சி என்றும் பொருள். எனவே மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சியே ஜனநாயகம் எனப் பொருள் கொள்ளலாம்.
மனித உரிமை சனநாயகம்
ஜனநாயகத்தின் அடிப்படையான நோக்கம் தனிநபர்களின் சுதந்திரத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாப்பதும் மேம்படுத்துவதே. ஜனநாயக ஆட்சி முறையில் சுதந்திரமான நியாயமான தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
ஆனால் முழுமையான ஜனநாயகத்திற்கு இது மட்டும் போதாது. மக்களின் அடிப்படைத் தேவைகளான பொருளாதார, சமூக உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டியதும் அவசியம்.
வாழ்வாதாரம், உடல்நலம், கல்வி போன்ற தேவைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டும். இதற்காகத் தான் ஜனநாயகமும் மனித உரிமைகளும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டுள்ளன.
ஜனநாயகம், அடிப்படை சுதந்திரத்தை உறுதிசெய்கிறது; அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முன்னணியில் நிற்கிறது; மக்கள் அனைவரையும் ஒன்றுபோல் நடத்துகிறது.
முரண்பாடாடுகளை ஆரோக்கியமான விவாதங்களை நடத்தித் தீர்க்கிறது, பிரதிநிதிகளையும் கொள்கைகளையும் காலத்திற்கேற்ப மாற்றுவதற்கு வாய்ப்பளிக்கிறது.
பொதுவாழ்வில் ஆண்களின் ஆதிக்கம், அதிகார மட்டத்திலான ஊழல், பெரும்பான்மையோரின் அடக்குமுறை, நாடாளுமன்றச் செயல்பாடு முடக்கம் உள்ளிட்டவை ஜனநாயகத்தைப் பாதிக்கும் அம்சங்கள்.
உலகம் முழுவதும் ஜனநாயகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் சர்வதேச ஜனநாயகத் தினத்தைச் செப்டம்பர் மாதம் 15-ம் தேதியன்று கொண்டாட வேண்டும் என ஐநா அவை 2007-ம் ஆண்டு நவம்பர் 8 அன்று முடிவுசெய்தது.
இதைத் தொடர்ந்து 2008-ம் ஆண்டு முதல் செப்டம்பர் 15-ம் தேதி சர்வதேச ஜனநாயக நாளாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
இதை முன்னிட்டுத் தேசிய நாடாளுமன்றங்களுக்கான கூட்ட மைப்பில் (Inter-Parliamentary Union) உறுப்பினராக உள்ள 90க்கும் மேற்பட்ட நாடுகளின் நாடாளுமன்றங்கள் மூலம் நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன.
உலக அளவில் ஜனநாயகம் எந்த நிலைமையில் உள்ளது என்பதைச் சீர்தூக்கிப் பார்க்க இந்த நாள் உதவுகிறது. சர்வதேசச் சமுதாயமும், தேசிய அரசுகளும், குடிமைச் சமூகமும், தனிநபர்களும் ஜனநாயகச் செயல்பாடுகளில் முழுமையாகப் பங்களிப்பதைச் சர்வதேச ஜனநாயக நாள் வலியுறுத்துகிறது.
“இளைஞர்களை ஜனநாயகத்தில் ஈடுபடுத்துதல்” என்பதே 2014 ஆண்டுக்கான முழக்கம்.
இளைஞர்கள் ஜனநாயக வழிமுறைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை அளிப்பதும், அவற்றில் ஈடுபடும் போது அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய அச்சுறுத்தல்களைக் கவனப்படுத்துவதும் இந்த மையப் பொருளின் நோக்கம்.
உலகின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கினர் 15 முதல் 25 வயது கொண்டவர்களே. முன்னேற்றமடைந்துள்ள பல நாடுகளில் இந்த விகிதம் இதைவிட அதிகம். ஆனால் தேசிய அரசியலில் அவர்களது இடம் போற்றுதலுக்குரியதாக இல்லை.
இந்த இளைஞர்களில் பெரும்பாலானோர் குறைந்த வருமானம் அல்லது நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளில் வசிக்கின்றனர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள் மூலம் இளைஞர்கள் அரசியல்மீது கொண்டுள்ள நம்பிக்கை குறைந்துகொண்டே வருவது கண்டறியப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பல நாடுகளில் இளைஞர் இயக்கங்கள் அரசியல் மாற்றத்தை வேண்டித் தொடர்ந்து போராடிவருகின்றன.
ஆகவே அரசியலில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசியல் அமைப்புகளும் தலைவர்களும் விரைந்து மேற்கொள்ள வேண்டும். தங்கள் ஈடுபாட்டால் அரசியலில் மாற்றம் வரும் என்பதை இளைஞர்களும் உணர்ந்து ஜனநாயகத்தில் பங்களிக்க முன்வர வேண்டும்.
தேசிய நாடாளுமன்றங் களுக்கான கூட்டமைப்பு 2012-லிருந்து 2017வரையான காலகட்டத்தில் “சிறந்த நாடாளுமன்றங்கள், வலுவான ஜனநாயகம்” என்பதைத் தனது கொள்கையாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது. 2011-ம்
ஆண்டு அக்டோபரில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதையும் இங்கே நினைவுகூர வேண்டும்.

No comments:

Post a Comment