Wednesday 12 February 2014

சிவில் சர்வீஸ் தேர்வில் புதிய சலுகை - மத்திய அரசு ஒப்புதல்

சிவில் சர்வீஸ் தேர்வில் புதிய சலுகை - மத்திய அரசு ஒப்புதல்



டில்லி: 2014ம் ஆண்டில் நடைபெறவுள்ள சிவில் சர்வீஸ் தேர்வு முதல், அனைத்து பிரிவினருக்கும், கூடுதலாக இரண்டுமுறை சிவில் சர்வீஸ் தேர்வெழுதும் வாய்ப்புகளை வழங்கும் முடிவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த 2014ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வின் முதல் நிலைத் தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவில் சர்வீஸ் தேர்வானது, முதல்நிலைத் தேர்வு(Preliminary exam), மெயின் தேர்வு(Main exam) மற்றும் நேர்முகத் தேர்வு(Personal Interview) ஆகிய மூன்று பிரிவுகளாக நடத்தப்படுகிறது.
இதற்கு முன்னதாக, பொதுப்பிரிவை(OC) சேர்ந்தவர்களுக்கு, அதிகபட்சம் 30 வயதுவரை எழுதும் சலுகையும், அதிகபட்சம் 4 முறை எழுதும் சலுகையும் இருந்தது. OBC பிரிவினருக்கு, அதிகபட்சம் 33 வயதுவரை எழுதும் சலுகையும், அதிகபட்சம் 7 முறை தேர்வெழுதும் சலுகையும் இருந்தது. SC/ST பிரிவினர், அதிகபட்சம் 35 வயதுவரை எத்தனைமுறை வேண்டுமானாலும் தேர்வையெழுதும் சலுகை இருந்தது.
தற்போதைய புதிய அறிவிப்பின் மூலம், OC மற்றும் OBC பிரிவினர் பலன் பெறுகின்றனர். அவர்கள் தங்களுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட உச்ச வயதுவரம்பு சலுகைக்குள், கூடுதலாக இரண்டு attempt -களை மேற்கொள்ளலாம். OC வகுப்பினர் தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 4 attempt என்ற நிலையிலிருந்து 6 attempt என்ற சலுகையையும், OBC பிரிவினர், தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 7 attempt என்ற நிலையிலிருந்து 9 attempt என்ற சலுகையையும் பெறுவார்கள்.
அதேபோல், கடந்த 1980, ஜனவரி 1ம் தேதி முதல், 1989ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இயல்பாகவே வசித்தவர்களுக்கு, அவர்கள் எந்தப் பிரிவாக இருந்தாலும், அவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை வயதுவரம்பு சலுகை உண்டு.
மேலும், பாதுகாப்பு படைகளில் பணிபுரிந்து, பணி காரணமாக உடலில் ஊனம்பெற்ற நபர்களுக்கு 3 ஆண்டுகள் வரை வயதுவரம்பு சலுகை உண்டு.
கண்பார்வை அற்றவர்கள், ஊமை - செவிடு மற்றும் கை - கால் ஊனமுற்றவர்களுக்கு, 10 ஆண்டுகள் வரை வயதுவரம்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment