Tuesday 18 February 2014

முருகன், சாந்தன், பேரறிவாளன் விடுதலை: தமிழக அரசு அறிவிப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இன்று காலை நடைபெற்ற முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப் பட்டிருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவர் மீதான தூக்கு தண்டனையை ரத்து செய்து செவ்வாய்க் கிழமை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் உடனடியாக விடுதலை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைப்பதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில், விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அப்போது, முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. மூன்று நாட்களுக்குள் இவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக அரசே அதன் அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்யும் என்று முதல்வர் அறிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டம்:
முதல்வர் ஜெயலலிதா தலைமையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்டோர் விடுதலை குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் சட்டப்பேரவை கூடியவுடனேயே விதி எண் 110-ன் கீழ் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
உச்ச நீதிமன்றம் பரிந்துரை:
தூக்கு தண்டனையை ரத்து செய்து நேற்று தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 432-ன் படி தமிழக அரசு மூன்று பேரையும் விடுதலை செய்வது குறித்து முடிவு எடுக்கலாம் என பரிந்துரைத்திருந்தது.

No comments:

Post a Comment