ராஜீவ் கொலை வழக்கில், பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய இடைக்காலத் தடை விதித்து, உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை முருகன், சாந்தன் பேரறிவாளன் ஆகிய மூவரையும் விடுவிக்கத் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், இவர்களை விடுவிப்பது தொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதேபோல், குற்றவாளிகள் 7 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
தூக்கு தண்டனையை குறைத்தல் என்ற தீர்ப்பின் மீதான மறுசீராய்வு மனு நிலுவையில் உள்ள நிலையில், சிறையில் இருந்து குற்றவாளிகள் விடுவிக்கப்படக் கூடாது என்று மத்திய அரசு தனது மனுவில் கூறியுள்ளது.
மத்திய அரசின் இந்த மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் நடவக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவில், நடைமுறைகள் சரிவர பின்பற்றப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வழக்கை மார்ச் 6-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இதனிடையே, 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் காட்டமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். (விவரம் - ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்கக் கூடாது: பிரதமர் காட்டம்)
முன்னதாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.
இந்த மூவரின் கருணை மனுக்களை பரிசீலிப்பது தொடர்பாக குடியரசுத் தலைவர் 11 ஆண்டுகள் கால தாமதம் செய்ததன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை குறைப்பு செய்வதாக நீதிமன்றம் தெரிவித்தது.
இதன் தொடர்ச்சியாக, ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக, சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.