Wednesday 18 December 2013

மக்களவையில் லோக்பால் மசோதா நிறைவேறியது

ஊழலுக்கு எதிரான திருத்தப்பட்ட லோக்பால் மசோதா இன்று (புதன்கிழமை) மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

மக்களவை இன்று தொடங்கியதும் விலைவாசி உயர்வு, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அமளி ஏற்பட்டது. அவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர், மக்களவை மீண்டும் கூடியதும் லோக்பால்-லோக் ஆயுக்தா மசோதா-2011 தாக்கல் செய்யப்பட்டு, அது தொடர்பான விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய பாஜகவின் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், லோக்பால் மசோதாவை நிறைவேற்ற விடாமல், காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

இந்த விவாதத்துக்குப் பின்னர், மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் திருத்தப்பட்ட லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது.

சமாஜ்வாதி தவிர அனைத்துக் கட்சிகளுமே லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தன.

முன்னதாக, லோக்பால் மசோதா மாநிலங்களவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நிறைவேற்றப்பட்டது.

லோக்பால் மசோதா 2011-ம் ஆண்டிலேயே மக்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டது. இதை தொடர்ந்து மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

பல்வேறு தரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் பாஜக தெரிவித்த முக்கிய திருத்தத்தை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. அதன்படி, ஊழல் விவகாரங்களில் சிக்கும் அரசு அதிகாரிகளின் வீடுகளில் நோட்டீஸ் இன்றி சோதனை நடத்த சிபிஐ மற்றும் போலீஸாருக்கு அதிகாரம் அளித்து மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த திருத்தப்பட்ட லோக்பால் மசோதா மக்களவையில் இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

10 ஆண்டுகள் வரை சிறை

லோக்பால் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், 5 பேர் கொண்ட லோக்பால் அமைப்பு நியமிக்கப்படும்.

இந்தக் குழுவினர் ஊழல் வழக்குகளை விசாரிப்பர். முதல்கட்ட விசாரணை 3 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். அதிகபட்சமாக ஓராண்டு வரை மட்டுமே விசாரணையை நீட்டிக்கலாம். ஊழல்வாதிகளுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.

No comments:

Post a Comment