Tuesday 24 December 2013

குரூப்-4 தேர்வு முடிவு ஜனவரி 2-வது வாரத்தில்

குரூப்-4 தேர்வு முடிவு ஜனவரி 2-வது வாரத்தில் வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி.தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் பேட்டி

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி குரூப்-4 தேர்வை நடத்தியது. இந்த தேர்வு மூலம் 5 ஆயிரத்து 556 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வை 12 லட்சத்து 21 ஆயிரத்து 167 பேர் எழுதினார்கள். அவர்களில் என்ஜினீயரிங் படித்தவர்கள் ஏராளமானவர்கள் இருந்தனர். 

கலை அறிவியல் பட்டதாரிகளும் ஏராளமானவர்கள் எழுதினார்கள். பணியிடங்களில் 3 ஆயிரத்து 531 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், 1738 தட்டச்சர் பணியிடங்கள், 242 சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் ஆகும். 30 வரைவாளர் பணியிடங்களும், 6 நில அளவர் பணியிடங்களும் சேர்த்து மொத்தம் 5 ஆயிரத்து 566 பணியிடங்கள் ஆகும்.

இந்தப்பணியிடங்களுக்கு 12 லட்சம் பேர் தேர்வு எழுதியது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒரு காலிப்பணியிடத்திற்கு 220 பேர் வீதம் போட்டி போட்டு இருக்கிறார்கள். எப்போது தேர்வு முடிவு வெளி வரும் என்று தேர்வு எழுதிய 12 லட்சம் பேர்களும் எதிர்பார்த்தபடி இருக்கிறார்கள்.

தேர்வு முடிவை எப்போது வெளியிடப்போகிறீர்கள் என்று தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

12 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குரூப்-4 தேர்வை எழுதி உள்ளனர். தேர்வு முடிவை மிகச்சரியாக வெளியிடவேண்டும் என்பதை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குறிக்கோளாக வைத்திருக்கிறது. விண்ணப்பித்த தேர்வர்களில் சிலர் சாதி சான்றிதழை இணைக்கவில்லை. இப்படியாக பல குறைபாடுகள் உள்ளன.

அந்த குறைகளை எல்லாம் சரி செய்து தான் தேர்வு முடிவை வெளியிட வேண்டி உள்ளது. தேர்வு முடிவை வெளியிடுவதற்காக அனைத்துப் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. ஜனவரி 2-வது வாரத்தில் குரூப்-4 தேர்வு முடிவு வெளியிடப்படும்.

இவ்வாறு ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment