Monday 30 December 2013

தி இந்து லிட் ஃபார் லைஃப் - சென்னையில் இலக்கியத் திருவிழா

தி இந்து லிட் ஃபார் லைஃப் - சென்னையில் இலக்கியத் திருவிழா

தி இந்து ஆங்கில நாளிதழ் சார்பாக, 2010ஆம் ஆண்டி லிருந்து லிட் ஃபார் லைஃப்- இலக்கியத் திருவிழா இந்திய மாநகரங்களில் முக்கியமான நிகழ்வாக நடந்துவருகிறது. ஆங்கிலத்தில் எழுதப்படும் இந்திய எழுத்தாளர்களின் படைப்புகள் தொடர்பான விவாதங்கள், புத்தக அறிமுகங்கள் மற்றும் வாசிப்பு நிகழ்வுகள் இந்த நிகழ்ச்சியில் நடைபெறும். இந்த நிகழ்வின் ஒரு அங்கமாக தி இந்து இலக்கிய விருது, இந்திய ஆங்கில இலக்கி யத்தில் சாதித்த முக்கியப் படைப் பாளிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவருகிறது.

சர்வதேச அளவில் வழங்கப்படும் இலக்கிய விருதுகளின் அந்தஸ்தைக் குறுகிய காலத்திலேயே இந்து இலக்கிய விருது அடைந்துள்ளது. முதல் விருதைப் பெற்றவர் மனு ஜோசப்.

புனைவு, பயண இலக்கியம், திரைப்பட எழுத்து, வெகுஜன இலக்கியம், அரசியல், தலித் இலக்கியம் என இந்த திருவிழா பல்வேறு கிளைகளாக பரந்துவிரிந்துள்ளது. சர்வதேச அளவில் கவனம் பெற்ற படைப்பாளிகளான விக்ரம் சேத், முகமத் ஹனீப், சசி தரூர், ராணா தாஸ் குப்தா, பாமா உள்ளிட்ட பல ஆளுமைகள் கலந்துகொண்டுள்ளனர்.

2014ஆம் ஆண்டுக்கான தி இந்து- லிட் ஃபார் லைஃப் திருவிழா ஜனவரி 11,12,13 ஆம் தேதிகளில் சென்னையில் தொடங்கவுள்ளது.

இந்த இலக்கியத் திருவிழாவில், முதல்முறையாக தமிழ் இலக்கியம் மற்றும் எழுத்துகள் சார்ந்து விவாதிக்கப்பட உள்ளது.

அமர்வுகள்

முதல் நாள் அரங்கில் குமார் சஹானியின் திரைப்பட மொழி குறித்து கலை விமர்சகர் சதானந்த் மேனன் உரையாற்றுகிறார். சமகால நாடகங்கள் குறித்த விவாதங்களும் நடக்க உள்ளன. புராணங்களை மறுஆக்கம் செய்வது குறித்து மலையாள எழுத்தாளர் பால் சக்கரியா, ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி, வீணா பானி சாவ்லா மற்றும் கவிஞர் சச்சிதானந்தம் ஆகியோர் உரையாட உள்ளனர்.

நினைவின் நிலப்பரப்பு என்னும் தலைப்பில் சங்கப்பாடல்கள் முதல் சிலப்பதிகாரம் வரை பழந்தமிழ் இலக்கியங்களில் பதிவுசெய்யப்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் பற்றிய உரையாடல் நிகழ்ச்சி நடைபெறும். இந்த அரங்கில் தமிழ் எழுத்தாளர்கள் பெரு மாள் முருகன் மற்றும் சா. கந்தசாமி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

13ஆம் தேதி மதியம் பாலின மற்றும் உடல் ரீதியான அரசி யல் குறித்து மொழிபெயர்ப்பாளர் லக்ஷ்மி ஹோம் ஸ்ட்ரோம், கவிஞர்கள் சல்மா, சுகிர்த ராணி, சர்மிளா செய்யத், அனார் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

சென்னையில் சர் முத்தா வெங்கடசுப்பாராவ் அரங்கம், லேடி ஆண்டாள் பள்ளி அரங்கம் ஆகியவற்றில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும்.

தமிழுக்கான தனி அமர்வு

தி இந்து லிட் ஃபார் லைஃப் நிகழ்வின் ஒரு பகுதியாக சென்னை ஸ்பேசஸ் அரங்கில், ஜனவரி 5ஆம் தேதி அன்று மாலை தமிழ் இலக்கியத்துக்கான தனி நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மணிக்கொடி காலம், நவீன தமிழ் இலக்கியத்தில் நவீனத்துவத்தின் தாக்கம், தலித் இலக்கியம் ஆகியவை குறித்த அமர்வுகள் இந்த நிகழ்வில் இடம்பெறும். முன்னதாக 4ஆம் தேதி மாலையும் 5ஆம் தேதி காலையும் ஆவணப் படங்கள் திரையிடப்படுகின்றன. 4 அன்று மாலை 6 மணி அளவில் ப்ரஸன்னா ராமஸ்வாமி இயக்கிய அடூர் கோபாலகிருஷ்ணன் பற்றிய படமும் 5ஆம் தேதி காலை 10 மணி அளவில் கிரீஷ் காசரவள்ளி இயக்கிய யு.ஆர். அனந்தமூர்த்தி பற்றிய படமும் திரையிடப்படுகின்றன. இரு நிகழ்வுகளிலும் அந்தந்தப் படத்தின் இயக்குநர் கலந்துகொள்கிறார். 5ஆம் தேதி நிகழ்வில் பாலுமகேந்திராவும் கலந்துகொள்கிறார். சென்னை சவேரா ஓட்டலில் நடைபெறும் இந்தத் திரையிடல்களுக்கு அனுமதி இலவசம்.

No comments:

Post a Comment