53 சதவீத இந்தியர்கள், தாங்கள் கண்விழித்திருக்கும் நேரமெல்லாம் இணையத்தை பயன்படுத்துவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. சர்வதேச சராசரியான 51 சதவீதத்தைவிட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
"தொடர்ந்து இணையத்தில் இயங்குவது இந்தியாவில் வழக்கமாகிவிட்டது. ஆய்வு செய்ததில் 53 சதவீத இந்தியர்கள், தாங்கள் கண்விழித்திருக்கும் நேரமெல்லாம் இணையத்தைப் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்" என்று இந்த ஆய்வை நடத்திய கெர்னி குளோபல் ரிஸர்ச் அமைப்பு கூறியுள்ளது.
இவ்வாறு இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் சராசரி சீனாவில் 36 சதவீதமும், ஜப்பானில் 39 சதவீதமும், சர்வதேச அளவில் 51 சதவீதமும் உள்ளது. இந்த ஆய்வு 10 நாடுகளில், 10,000 பேரை வைத்து நடத்தப்பட்டுள்ளது.
"ஆய்வில், 97 சதவீத இந்தியர்கள் தங்களுக்கு ஃபேஸ்புக் கணக்கு இருப்பதாகக் கூறியுள்ளனர். அதில் 77 சதவீத இந்தியர்கள், தினமும் ஃபேஸ்புக் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளனர்.
இந்தியர்கள் இணையத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு, மூன்று முக்கியக் கூறுகள் இருப்பதாக இந்த ஆய்வு குறிப்பிடுக்கிறது.
முதல் காரணம் மற்றவர்களோடு நட்பு ஏற்படுத்திக் கொள்ள.
இரண்டாவது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள. கருத்துக்களை சுதந்திரமாக பொதுவெளியில் பகிர்ந்து கொள்ள அதிக கட்டுப்பாடு இருக்கும் நாடுகளில், இணையத்தைப் பயன்படுத்த இது முக்கியக் காரணமாகும். சீனாவில் 89 சதவித மக்கள், கருத்துக்களை வெளிப்படுத்தவே இணையத்தை உபயோகப்படுத்துவதாக கூறியுள்ளனர். இதே காரணத்தைக் கூறுபவர்களின் சர்வதேச சராசரி 62 சதவீதம் மட்டுமே.
மூன்றாவதாக, ஷாப்பிங் செய்வதற்காக இணையம் பயன்படுத்தப்படுகிறது. இந்த காரணத்தை, ஆய்வில் கலந்து கொண்ட 92 சதவீத இந்தியர்கள் கூறியுள்ளனர்.