நாடு சுதந்திரம் அடைந்ததும் அன்னியர்கள் காலிசெய்த அரசு பணியிடங்களில் நம்மவர்களை அமர்த்த முதல்சுற்று பெருந்திரள் சேர்க்கை நடந்தது. 1970-80 காலகட்டத்தில் இரண்டாம் சுற்று சேர்க்கை நடந்தது.தற்போதைய காலகட்டத்தை மூன்றாம் சுற்று எனலாம். இந்த சுற்றில் சேர்க்கப்படுகிற பணியாளர்கள் அளவில் அதிக எண்ணிக்கையாகவே இருக்கிறார்கள்.
மாற்றம்
முன்பெல்லாம் சம்பளம் பெறுவதே கூட பொதுநூலகத் துறையினர் போன்றோருக்கு நிச்சயம் இல்லாமல் இருந்தது. ஊதிய உயர்வு, பதவிஉயர்வு ஆகியவற்றை அடைவதே பெரிய விஷயம். ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஆசிரியர்கள், மருத்துவப் பணியாளர்கள் எல்லாம் 1982-ல் அரசுப் பணியாளர்களாக அங்கீகரிக்கப்பட்ட சாதனை நடந்தது.
அரசுப்பணிகள்
அகில இந்திய பணிகள், மாநிலப்பணிகள், சார்நிலைப்பணிகள் என அரசுப் பணி பிரிக்கப்பட்டுள்ளது. மைய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகள் மூலம்தான் ஐ.ஏ.எஸ், ஐ.எப்.எஸ், ஐ.பி.எஸ் ஆகிய பதவிகள் பெற்று மாவட்ட ஆட்சியர், வனப்பாதுகாவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகின்றனர்.
மாநில மற்றும் சார்நிலைப் பணிகள் மாநில அரசின் நியமனத்துக்குட்பட்டவை. அவற்றுக்குத் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்,மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்,தமிழ்நாடு வனத்துறைப் பணியாளர் தேர்வுக்குழு போன்ற அமைப்புகள் தேர்வுகளை நடத்தி நியமனம் செய்கின்றன.
பல்வேறு பணி வாய்ப்புகள் இருந்தாலும் அரசுப் பணி என்பது மேன்மைமிக்கது. தகுதியும் திறனும் படைத்தோரின் முதல் தேர்வாக அரசுப் பணி இருக்கலாமே?
பி.முகைதீன் ஷேக்தாவூத்
உதவி கருவூல அதிகாரி (ஓய்வு)