சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, முதல்வர் பதவியுடன் ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பதவியையும் இழந்தார். அவரது தகுதியிழப்பு குறித்து முறையான அரசாணை, கடந்த 8-ம் தேதி தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால், செயலாளர் ஜமாலுதீன் ஆகியோரது உத்தரவு, அரசாணையாக தமிழக அரசிதழில் நேற்று வெளியிடப்பட்டது. அதிலுள்ள விவரம் வருமாறு:
லஞ்ச ஒழிப்புச் சட்டம் 1988 பிரிவு 13 (2)-ன்படி, ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ள நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 191, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ஆகியவற்றின் அடிப்படையில் அவர் தகுதியிழப்பு செய்யப்படுகிறார்.
அவருக்கு தண்டனை வழங்கப் பட்ட 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி முதல், தமிழக சட்டப் பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதியிழப்பு ஆகிறார். தண்டனைக்காலம் மற்றும் அதற்குப் பிந்தைய 6 வருடங்களுக் கும் அவர் தகுதியிழப்பு செய்யப்படுகிறார். இந்த உத்தரவு அவரது விடுதலை தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டு மாறுபடும்.
எனவே, தற்போதைய நிலை யில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி முதல் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ தொகுதி காலியானதாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில், மேல்முறையீட்டு மனுக்களில் விடுதலை அல்லது தண்டனையில் மாற்றம் இல்லாவிட்டால், தற்போதைய உத்தரவுப்படி ஜெயலலிதா 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.