Friday 21 November 2014

இணைய பயன்பாட்டில் அமெரிக்காவை முந்தும் இந்தியா

பெருகி வரும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், இன்று மொபைல் ஃபோனில் தொடங்கி கைகடிகாரம் வரை அனைத்திலும் இணையம் உபயோகப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவில் அதிகரித்து வரும் இணையப் பயன்பாட்டால், இந்த வருட இறுதிக்குள் இங்கு இணைய பயனாளர்களின் எண்ணிக்கை 30 கோடியைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21 கோடியாக இருந்த இணைய பயனர்களின் எண்ணிக்கை 32 சதவீதம் அதிகரித்து, 30 கோடியைத் தாண்டும் என்று சர்வதேச இணைய பயனர்களின் எண்ணிக்கைக் கணக்கெடுப்புக் குழு கூறியுள்ளது. மேலும் ஜூன் 2015-ல் 35 கோடி பயனர்களை இந்தியா தாண்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகளவில் இணைய பயன்பாட்டில் சீனா (60 கோடி), அமெரிக்காவைத் (27.9 கோடி) தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. 30 கோடியை தாண்டும் போது இந்தியா அமெரிக்காவை முந்தும்.
இப்போது இந்தியாவில் இணையத்தை பயன்படுத்தும் 27.8 கோடி சொச்ச மக்களில், 17.7 கோடி பேர் நகர்புறத்தைச் சேர்ந்தவர்கள். கிராமப்புறங்களில் இணைய பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளதால், அக்டோபர் மாதம் 10.1 கோடியாக இருந்த கிராமப்புற பயனர்களின் எண்ணிக்கை, டிசம்பர் மாதம் 13.8 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment