குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் அரசியல்வாதியாக டி.எம்.செல்வகணபதி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள், அதன் பின் 3 மாதங்கள் வரை மேல் முறை யீடு செய்யவும், தண்டனைக்கு இடைக்கால தடை உத்தரவு பெறவும் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8 (4)-ன்படி அவர்கள் பதவியி லிருந்து தகுதி நீக்கம் பெறாமல் பாதுகாப்பு பெற்று வந்தனர்.
ஆனால் இந்த சட்டப் பிரிவு அரசியலமைப்பிற்கு முரணானது என கடந்த ஆண்டு ஜூலை 10-ம் தேதி அறிவித்த உச்ச நீதிமன்றம், தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்புக்குப் பின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரஷீத் மசூத் முதல் நபராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த 1990, 91-ம் ஆண்டுகளில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது ஊழல் செய்த குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவரைத் தொடர்ந்து மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஆர்.ஜே.டி. கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த ஜகதீஷ் சர்மா ஆகிய இருவரும் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சுடுகாட்டு கூரைகள் அமைப்பதில் ஊழல் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தமிழக முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதிக்கு தற்போது 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து செல்வகணபதி தகுதி நீக்கம் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் டி.எம்.செல்வகணபதி அமைச்சராக இருந்தபோது சுடுகாட்டு கூரைகள் அமைப்பதில் ஊழல் நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. அதன் பின்னர் திமுகவில் சேர்ந்த செல்வகணபதி, கடந்த 2010-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு அவரது பதவிக் காலம் முடிவடைய வேண்டும்.
நம்பகத்தன்மை சிதையும்
இது குறித்து கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு, “சுடுகாட்டுக்கு கூரைகள் அமைப்பதில் கூட ஊழல் செய்வதை நம் அரசியல்வாதிகள் விட்டு வைக்கவில்லை என்பது மிகவும் மோசமான சூழல் ஆகும். 1997-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 2014-ம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. ஒரு ஊழல் வழக்கு முடிவுக்கு வர இவ்வளவு காலம் ஆகும் என்றால், அது மக்கள் மத்தியில் நீதித் துறையின் மீதான நம்பகத்தன்மையை சிதைத்து விடும்” என்றார்.