Wednesday 16 April 2014

திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரித்தது உச்ச நீதிமன்றம்

இரு பாலினத்திலும் (ஆண், பெண்) சேராத திருநங்கைகளுக்கு ‘மூன்றாம் பாலினம்’ என்ற சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க் கிழமை உத்தரவிட்டுள்ளது.
தேசிய சட்ட சேவை மையம் மற்றும் திருநங்கைகள் சிலர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவில், “நாங்கள் இரு பாலினத்திலும் சேராததால் கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப் படுகிறது. பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படுகிறோம். ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அரசின் அங்கீகாரம் வழங்கப் படுவதில்லை. போலீஸார் தேவை யில்லாமல் துன்புறுத்துகின்றனர். அரசியல் சட்டப்படி எங்களுக்கும் வாழ உரிமை உண்டு என்பதால், எங்களை அங்கீகரிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தனர்.
மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி வழங்கியுள்ள தீர்ப்பு விவரம்:
அரசியல் சட்டப்படி, வாழும் உரிமை அனைவருக்கும் வழங்கப் படுகிறது. பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டுவதையும், உரிமைகள் மறுக்கப்படுவதையும் ஏற்க முடியாது. இந்தியாவில், பழங்காலம் தொட்டே இரு பாலினத்திலும் சேராதவர்கள் இருந்து வந்துள்ளனர். அவர்கள் “ஹிஜ்ரா, அரவாணி, திருநங்கை” போன்ற பல பெயர்களில் அழைக் கப்பட்டு வருகின்றனர். ஒருவர் மருத்துவ ரீதியாக தன் பாலி னத்தை மாற்றிக் கொண்டால், மாற்றப்பட்ட பாலினத்தில் இருக் கும் உரிமை அவருக்கு உண்டு.
ஓபிசி-க்கு நிகரான சலுகைகள்
அவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான். எனவே, ‘மூன்றாம் பாலினம்’ என்ற பிரிவை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கி றோம். அவர்களை இதர பிற்படுத் தப்பட்டோர் பிரிவில் சேர்த்து உரிய சலுகைகள், வேலை வாய்ப்பு, கல்வி உள்ளிட்ட அங்கீ காரத்தை அரசு வழங்க வேண்டும். மருத்துவரீதியாக அவர்களை பாலின சோதனைக்கு உட்படுத்து வது சட்ட விரோதம். தன்பாலின சேர்க்கையாளர்கள், இருபாலின சேர்க்கையாளர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.
மூன்றாம் பாலினத்தவரின் பிரச்சினைகளை கவனிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழு அவர்களது பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் மூன்று மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும். அவற்றை மத்திய, மாநில அரசுகள் ஆறு மாதங்களுக்குள் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment