Wednesday 12 March 2014

சிறப்பு முகாம்கள் : நாடு முழுவதும் ஒரே நாளில் 74 லட்சம் வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு

புதுடில்லி : லோக்சபா தேர்தலில் ஓட்டளிப்பதற்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 9ம் தேதி தேர்தல் கமிஷனால் நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் நாடு முழுவதும் ஒரே நாளில் 74.5 லட்சம் பேர் புதிதாக தங்களின் பெயர்களை சேர்க்க விண்ணப்பம் அளித்துள்ளனர். இது மிகப் பெரிய சாதனை என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு தகவலின்படி, மார்ச் 9ம் தேதி நாடு முழுவதும் 9.3 லட்சம் ஓட்டுச் சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 74,56,367 பேர் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்துள்ளனர். மாநில வாரியாக புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான பட்டியலில் உத்திர பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. உ.பி.,யில் அதிகபட்சமாக 15.4 லட்சம் பேரும், ஆந்திராவில் 11 லட்சம் பேரும், தமிழகத்தில் 9.9 லட்சம் பேரும், பீகாரில் 7 லட்சம் பேரும், மகாராஷ்டிராவில் 4.7 லட்சம் பேரும், ராஜஸ்தானில் 4.5 லட்சம் பேரும், குஜராத்தில் 3.3 லட்சம் பேரும், கர்நாடகாவில் 3 லட்சம் பேரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். 

சரி பார்க்கும் பணி:

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இவற்றில் பெரும்பாலானவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்படாது என எதிர்பார்க்கலாம் எனவும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களின் பெயர்கள், வேட்புமனு தாக்கல் நிறைவடையும் நாளுக்குள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை மக்கள் தெரிந்து கொள்வதற்காக சிறப்பு முகாம் ஒன்றை நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. வாக்காளர் பெயர் சேர்ப்பதற்காக சிறப்பு முகாம் நடத்தியதை போன்று, வாக்காளர் பெயர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. 

இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி, வாக்காளர்கள் தங்களின் ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர்களை சரிபார்த்துக் கொள்ளலாம். ஒருவேளை சில காரணங்களால் பெயர் விடுபட்டு போயிருந்தாலோ அல்லது தவறாக நீக்கமாகி இருந்தாலோ, வாக்காளர்கள் புதிதாக விண்ணப்பித்து தங்களின் பெயர்களை பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம். சிறப்பு வாக்காளர் முகாம் குறித்து தேர்தல் கமிஷன் தெரிவிக்கையில், "ஒரே நாளில் நாடு முழுவதும் வாக்காளர்கள், அதிக அளவிலான மக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தது இதுவே முதல் முறையாகும். வாக்காளர்களின் வசதிக்காக இது போன்ற சிறப்பு முகாம்கள், தொடர்ந்து வேட்புமனு தாக்கல் கடைசி நாள் வரை நாடு முழுவதும் நடத்தப்படும். இதற்கு முன் இது போன்ற சிறப்பு முகாம்கள் நாடு முழுவதும் 2 அல்லது 3 நாட்கள், வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு நாட்களில் நடத்தப்பட்டுள்ளது. அப்போது கூட இந்த அளவிற்கு அதிக அளவில் மக்கள் விண்ணப்பம் அளித்ததில்லை. இது மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வையே காட்டுகிறது" என தெரிவித்துள்ளது.

பெயர் திருத்தம் செய்ய:

தற்போது விண்ணப்பித்துள்ள 74.5 லட்சம் வாக்காளர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி 10 நாட்கள் நடத்தப்பட உள்ளது. பெயர் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் 7 நாட்களுக்குள் தங்கள் ஓட்டுச் சாவடிகளுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்ட பின்னரே இறுதி வாக்காளர் பட்டியலில் புதிதாக விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் சேர்க்கப்படும் என தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment