Saturday 12 October 2013

சென்னையில் குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி


சென்னையில் குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி - வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்க சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இலவச பயிற்சி

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (பொது) வாசகர் வட்டம் (ஸ்டடி சர்க்கிள்) என்ற அமைப்பு செயல்படுகிறது. இதன் மூலமாக மத்திய-மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவித்துள்ள குரூப்-2 தேர்வுக்கும் இலவச பயிற்சி அளிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்த சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் இந்த பயிற்சியில் சேரலாம். 

விண்ணப்பிப்பது எப்படி?

இலவசப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அத்தாட்சியுடன் ஒரு வெள்ளைத்தாளில் பயிற்சியில் சேர விரும்பும் விவரத்தை குறிப்பிட்டு, விண்ணப்பத்தை சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (பொது) 18-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்ய 18-ம் தேதி அன்று பொது அறிவு தொடர்பாக நுழைவுத்தேர்வு நடத்தப்படும். அவர்களில் சுமார் 30 பேர் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். பயிற்சி 21-ம் தேதி தொடங்கும். இதற்கான வகுப்பு தினமும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடைபெறும்.

No comments:

Post a Comment