Thursday 30 May 2013

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 497 மதிப்பெண் பெற்று 3 பேர் முதல் இடம்

பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று3 பேர் முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். 


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 27ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 3012 மையங்களில் நடத்தப்பட்ட இந்த தேர்வில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 686 மாணவிகள் உள்பட 10 லட்சத்து 68 ஆயிரத்து 838 பேர் எழுதினார்கள். பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 13ம் தேதி தொடங்கி, 26ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 66 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்றது. சுமார் 30 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சி.பி.எஸ்.., பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 27ம் தேதி வெளியிடப்பட்டது. 

மாணவர்கள் தேர்வு முடிவுகளை இணையதளங்கள் மூலமும், பள்ளிகளிலும் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் தேர்வு முடிவுகளை நூலங்களில் உள்ள இணையதளங்கள் மூலம் இலவசமாக அறிந்து கொள்ளவும் நூலகத்துறை ஏற்பாடு செய்திருந்தது. நூலகங்களிலேயே மாணவர்கள் தங்களின் மதிப்பெண் பட்டியலை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சேவை 3 நாட்கள் வரை வழங்கப்படும் என நூலகத்துறை அறிவித்துள்ளது. 

தேர்வுத்துறை அறிவிப்பு : மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் ஜூன் 20ம் தேதி வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும், தனி ‌தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். இன்று வெளியாகும் தேர்வு முடிவில் தோல்வி அடையும் மாணவர்கள், ஜூன் மற்றும் ஜூலையில் நடக்கும் உடனடித் தேர்வில் பங்கேற்கலாம். www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலம் உடனடி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஜூன் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம் எனவும், தேர்வு கட்டணத்தை எஸ்.பி.., வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் வரும் 6ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மார்ச் தேர்வை, தனித்தேர்வாக எழுதி, மீண்டும் தோல்வி அடைந்‌த தேர்வர்கள், விண்ணப்பத்தை, தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் ஜூன்10ம் தேதிக்குள் நேரில் சமர்பிக்க வேண்டும். உடனடித் தேர்வுகள் ஜூன் 24ம் தேதி முதல் ஜூலை 1ம் தேதி வரை நடக்கும்.

No comments:

Post a Comment