Tuesday 7 May 2013

நாளை பிளஸ் 2 ரிசல்ட் - தேர்வுத் துறை "திக்... திக்..."


பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நாளை காலை, 10:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன. பல ஆண்டுகளாக, 40க்கும் அதிகமான இணையதளங்களில், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வந்ததால், எந்தப் பிரச்னையும் இல்லாமல், மாணவர்கள் முடிவுகளை தெரிந்து கொண்டனர். ஆனால், நாளை, நான்கு இணைய தளங்களில் மட்டுமே, தேர்வு முடிவு வெளியாவதால், சிக்கல் இல்லாமல், தேர்வு முடிவை அறிய முடியுமா என, கேள்வி எழுந்துள்ளது.
தேர்வு முடிவுகளை, சம்பந்தபட்ட மாணவ, மாணவியர் மட்டுமே பார்ப்பது இல்லை. பெற்றோர்கள், மாணவர்களுடைய நண்பர்கள், உறவினர்கள் என, பல பேர், தேர்வு முடிவை பார்த்து சொல்கின்றனர். அதன்படி, பிளஸ் 2 தேர்வை, 8.5 லட்சம் பேர் எழுதியுள்ளனர் எனில், ஒரு மாணவரின் முடிவை, குறைந்த பட்சம், ஐந்து பேராவது பார்ப்பர் என, கல்வித்துறை முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:


பிளஸ் 2 தேர்வு முடிவை, 40 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள், பார்ப்பர். 40க்கும் அதிகமான இணையதளங்களில், தேர்வு முடிவை வெளியிடும்போது, மாணவர், பெற்றோர் அனைவரும், வெவ்வேறு இணையதளங்களில், தேர்வு முடிவை பார்ப்பதால், இணைய தளத்தில் எந்த சிக்கலும் எழுவதில்லை.


அதேநேரத்தில், பல லட்சக்கணக்கானோர், நான்கு இணைய தளங்களில் மட்டும் தேர்வு முடிவை பார்க்க நேர்ந்தால், "சர்வர்' தாங்காது. இணைய தளம் முடங்கும் ஆபத்தும் உள்ளது. தேர்வு முடிவை, எளிதில் தெரிந்து கொள்ளும் உரிமை, மாணவர்களுக்கு இருக்கிறது. தொழில் நுட்பங்கள் எவ்வளவோ வளர்ந்துவிட்ட இந்த காலத்தில், இத்தனை இணையதளங்களில் மட்டுமே வெளியிடுவோம் என, கூறுவது சரியல்ல.


இந்த விவகாரத்தில், தனியார் நிறுவனங்கள், வர்த்தக ரீதியாக செயல்படுகின்றன என்பதை பார்க்கக் கூடாது. மாணவர்கள், எவ்வித பிரச்னையும் இன்றி, உடனுக்குடன், தேர்வு முடிவை தெரிந்து கொள்கிறார்களா என்பதைத் தான் பார்க்க வேண்டும். படிப்பிற்காக, பல ஆயிரம் ரூபாயை செலவழிக்கும் பெற்றோர்களுக்கு, 10 ரூபாயோ, 20 ரூபாயோ செலவழித்து, இணையதளங்களில் முடிவை அறிவது, பிரச்னையாக இருக்காது.


அரசு தெரிவித்துள்ள இணைய தளங்களில், பிரச்னை ஏற்பட்டால், மாணவர்கள் கடுமையாக பாதிப்பர். பெரும் குழப்பமும் ஏற்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார். இந்த நடைமுறை சிக்கலை, தேர்வுத்துறையும் உணர்ந்துள்ளது. ஆனால், மேலிட அளவில் எடுத்த முடிவு என்பதால், நாளை என்ன நடக்குமோ என, தேர்வுத்துறை, "திக்... திக்...' நிலையில் உள்ளது.

No comments:

Post a Comment