Tuesday 15 July 2014

கடலில் மூழ்கும் அபாயத்தில் மன்னார் வளைகுடா தீவுகள்

சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளும் கடலில் மூழ்கும் அபாயம் உருவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ராமேசுவரத்தில் இருந்து தூத்துக்குடி வரையிலும் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் அமைந் துள்ள புகழ்பெற்ற மன்னார் வளை குடா உயிர்க்கோளக் காப்பகம், தென்கிழக்கு ஆசியாவில் நிறுவப் பட்ட முதல் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம் என்ற பெருமை கொண்டது.
560 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா தேசிய பூங்காவில் 0.25 ஹெக்டேர் முதல் 125 ஹெக்டேர் பரப்பளவிலான வான் தீவு, காசுவார், காரைச்சல்லி, விலங்குசல்லி, உப்புத்தண்ணி, புலுவினிசல்லி, நல்ல தண்ணி தீவு, ஆனையப்பர் தீவு, வாலிமுனை, அப்பா தீவு, பூவரசன்பட்டி, தலையாரி, வாழை தீவு, முள்ளி தீவு, முயல் தீவு, மனோலி, மனோலிபுட்டி, பூமரிச்சான் தீவு, புள்ளிவாசல் தீவு, குருசடை தீவு, சிங்கில் தீவு என 21 தீவுகள் அமைந்துள்ளன.
இதில், தூத்துக்குடி குழுவில் 4 தீவுகள், வேம்பார் குழுவில் 3 தீவுகள், கீழக்கரை குழுவில் 7 தீவுகள், மண்டபம் குழுவில் 7 தீவுகள் அமைந்துள்ளன.
அரியவகை கடல்வாழ் உயிரினங்கள்
இந்த தீவுகளைச் சுற்றிலும் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், 13 வகை கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரிய வகை உயிரினங்கள் வசிக்கின்றன. குறிப்பாகப் பாலூட்டி இனங்களைச் சேர்ந்த ஆவுளியாவும் (Dugong), ஓங்கில்களும் (டால்பின்) இப்பகுதியில் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்தியக் கடல் பகுதியிலேயே இரண்டாயிரத்துக்கும் அதிகமான மீன் வகைகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில்தான் உள்ளன.
தீவுகளுக்கு ஆபத்து
கடல் சூழலிலும் கடற்கரை பாதுகாப்பிலும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீவுகள் அண்மைக்காலமாக பெரும் ஆபத்தைச் சந்தித்து வருகின்றன. 21 தீவுகளில் கீழக்கரை அருகே உள்ள பூவரசன்பட்டி தீவு மற்றும் தூத்துக்குடி அருகே உள்ள விலங்குசல்லி தீவு ஆகிய இரண்டும் மூழ்கி வருவதாக, கடந்த ஆண்டு வனத்துறையினர் அறிவித்திருந்தனர்.
இதுகுறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலர் தாகிர் சைபுதீன் கூறியதாவது: மன்னார் வளைகுடா தீவுக்கு அரணாகத் திகழ்வது இந்தக் கடற்பகுதியில் விளையும் பவளப்பாறை ஆகும். "கப்பாபை கஸ் ஆல்வரேசி' என்ற ஒருவகை பாசியை செயற்கையாக பாக். ஜலசந்தி கடற்பரப்பில் வளர்ப்பதால், இந்த பாசிகள் மன்னார் வளைகுடா கடற்பகுதிக்குள் ஊடுருவி பவளப்பாறைகள் மீது படிந்து அவற்றை அழிக்கின்றன.
மேலும் சுற்றுச்சூழல் மற்றும் பருவ மாற்றத்தால் மன்னார் வளைகுடாப் பகுதியில் கடல் நீர்மட்டம் சராசரியாக ஆண்டுக்கு 1.8 மி.மீ. உயர்ந்து வருகிறது. இதனால் மன்னார் வளைகுடா தீவுகள் அனைத்துமே கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மன்னார் வளைகுடா தீவுகளை காட்டும் செயற்கோள் படம்.
மன்னார் வளைகுடா தீவுகளுக்கு அரணாகச் செயல்படும் பவளப்பாறைகள்.

No comments:

Post a Comment