Tuesday 15 July 2014

ஆதி திராவிடர் - பழங்குடி மாணவர்களுக்கான உயர்கல்வி உதவித்தொகை

ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடிகள், மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதி திராவிடர்கள் ஆகிய சமூகங்களின் மாணவர்கள் உயர்கல்வி வரைக்கும் படிப்பதை உத்தரவாதப்படுத்தவும் ஊக்கப்படுத்தவும் தமிழக அரசின் ஆணை எண்: 92 (தேதி: 11.09.2012) வெளியாகி உள்ளது.
+2 படிப்புக்கு பிந்திய உயர்கல்வி படிப்புகளில் சேருகிற ஆதிதிராவிடர்கள்,கிறிஸ்துவமதம் மாறிய ஆதிதிராவிடர்கள்,பழங்குடிகள் சமூகங்களை சேர்ந்த மாணவ,மாணவியர்களுக்கான கல்விக்கட்டணத்தை மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் மூலம் தமிழக அரசே 2011-12 கல்வியாண்டு முதல் வழங்குகிறது.
இந்த உதவித்தொகையை பெற, மாணவரின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் இரண்டு லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட எல்லா படிப்புகளுக்கும் இந்த கல்வி உதவித்தொகை பொருந்தும். அரசு கல்லூரிகள்,அரசு உதவி பெறும் கல்லூரிகள் மட்டுமல்ல சிறுபான்மையோர் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் கல்வி நிறுவனங்களும் இந்த அரசு ஆணைக்கு கட்டுப்பட்டவையே.
தனியார் கல்வி நிறுவனங்களுக்கான கல்வி கட்டணங்களை நிர்ணயிப்பதற்காக தமிழக அரசு நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயித்த தொகையைத்தான் தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் வசூலிக்க வேண்டும். அப்படி வசூலிக்கும்போது மேற்கண்ட சமூகங்களின் மாணவ, மாணவியரிடம் அந்தத் தொகையை வசூலிக்கக் கூடாது. அதற்கு மாறாக தமிழக அரசு, அந்தத் தொகையை கல்லூரிகளுக்கு வழங்குகிறது என இந்த அரசு ஆணை அறிவித்துள்ளது.
குடும்ப வருமானம் 2 லட்சத்துக்கும் அதிகமாக இருப்பவர்கள் முதல் தலைமுறை பட்டதாரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்குத் தனியான கட்டணச் சலுகை உள்ளது. அதனை பெற்றுக்கொள்ளலாம்.
தமிழக அரசின் இணையதளத்தின் தமிழ் வடிவில் நீங்கள் இந்த அரசு ஆணையை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment