Thursday 24 July 2014

உயிரினம்- ஆந்தைகளுக்குக் கொம்பு உண்டா?

ஆந்தை இரவில் இரை தேடும் பறவை இனம். ஆந்தைகளில் 200 வகைகள் உள்ளன.
தட்டையான முகம் கொண்ட ஆந்தைகள் பெரிய கண்கள் கொண்டவை. சிலவகை ஆந்தைகளால் தலையை 360 டிகிரி வரை திருப்பிப் பார்க்க முடியும்.
தொலைவில் உள்ள இரையைக்கூட ஆந்தைகளால் தெளிவாகப் பார்க்க முடியும்.
ஆந்தைகள் பூச்சிகளையும் சிறிய பிராணிகளையும் உணவாக உட்கொள்ளும். சில ஆந்தை வகைகள் மீன்களையும் வேட்டையாடி உண்ணும்.
ஆந்தைகளின் வலுவான நகங்கள் இரையைப் பிடிக்கவும் கொல்லவும் உதவியாக உள்ளன.
அண்டார்க்டிகா தவிர மற்ற எல்லா நிலப்பரப்புகளிலும் ஆந்தைகள் உள்ளன.
ஆந்தையின் காதுகள் இரண்டும் வேறு வேறு அளவுகளில் இருக்கும். ஆந்தைகளுக்குக் கேட்கும் திறன் அதிகம்.
ஆந்தைகளால் பகலில் பார்க்க முடியாவிட்டாலும் இரை எழுப்பும் ஒலி மூலம் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
நிறைய ஆந்தைகளுக்குத் தலையில் காது மடல்கள் கொம்புகள் போல அமைந்திருக்கும். ஆனால், அவை காதுகள் அல்ல. கொம்பு என்று அழைக்கப்பட்டாலும் அது சிறகுதான்.
ஆந்தைக்கு மூன்று இமைகள் உள்ளன. ஒன்றை மூடித் திறக்கவும், மற்றொன்றைத் தூங்குவதற்கும், இன்னொன்றைக் கண்ணை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் வைத்திருக்கப் பயன்படுத்திக் கொள்ளும்.
ஒரு கூகை ஆந்தை ஆண்டுக்கு சராசரியாக ஆயிரம் எலிகள் வரை சாப்பிடும். அதனால் விவசாயியின் நண்பனாக ஆந்தை கருதப்படுகிறது.
ஆந்தை இறக்கை விரித்துப் பறக்கும்போது படபடவென சத்தம் கேட்காது. இரைக்கு அருகில் செல்லும் வரை சத்தம் வராது.
பெரும்பாலும் பெண் ஆந்தைகள் பெரியதாக இருக்கும். ஆக்ரோஷத்தை அதிகம் வெளிப்படுத்தும்.
பெரும்பாலான ஆந்தை வகைகள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் இடம்பெயர்வதில்லை. ஆனால், நல்ல உணவைத் தேடி தனியாக அலைபவை.
ஆந்தைகள் ஒரே நேரத்தில் பன்னிரெண்டு முட்டைகள் வரை இடும்.
மரத்தில் உள்ள பொந்துகளில் வசிக்கும். நிலத்தில் உள்ள வளைகள் குகைகளிலும் ஆந்தைகள் வசிக்கும்.
ஜோடியைக் கண்டுபிடிக்கவும், இருட்டில் தனது இடத்தைச் சொல்லவும் ஆந்தைகள் குரல் எழுப்பும்.

No comments:

Post a Comment