குற்றங்களை விஞ்ஞானபூர்வமாக நிரூபிப்பதற்குத் தடய தாவரவியல் உதவுகிறது. தாவரங்களின் தடயங்களை கொண்டு குற்றச்செயல்களை கண்டுபிடிக்கும் முறையினைத் தடய தாவரவியல் எனக் கூறலாம். தடய அறிவியலின் ஒரு பிரிவு தடய தாவரவியல் (FORENSIC BOTANY) .
குறிப்பாகத் தாவரத்தின் தண்டு, இலை, விதை, மலர்கள், பழங்கள் மற்றும் மற்ற பாகங்களைக் கொண்டு குற்றச் செயல்களைக் கண்டறியலாம். மேலும் தாவரங்களில் காணப்படும் நார்ப் பொருட்கள், ரெசின்கள், எண்ணெய்கள், வாசனைப் பொருட்கள் மற்றும் இரண்டாம் நிலை வேதிப் பொருட்களான ஆல்கலாய்டுகள் மற்றும் ஸ்டீராய்டுகளும் குற்றங்களைக் கண்டறிவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ஒருவர் தடய தாவரவியலாளர் (Forensic Botanist) ஆக விரும்பினால் ; தாவர புற அமைப்பு, உள்ளமைப்பு, கருவியல், வகைப்பாட்டியல், தாவர வேதியியல், மகரந்தவியல், தாவர சூழ்நிலையியல் லிம்னாலஜி போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
தாவர தடய பொருட்கள்
குற்றச் செயல்கள் நடைபெற்ற இடங்களிலிருந்து கவனமாகத் தாவர தடயப் பொருட்களைச் சேகரிக்க வேண்டும். வாகன ஊர்திகளின் சக்கரங்கள், விரிப்பான்களின் (Mat) கீழ்ப்பகுதிகள், இரு சக்கர வாகனமாக இருந்தால் மிதிப்பான் (Pedals), டயர் போன்றவற்றிலிருந்துச் சேகரித்துக் காகிதங்களில் வைக்கலாம், பிளாஸ்டிக் பொருட்களில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். மலக் கழிவுகளை பாட்டில்களிலோ அல்லது பிளாஸ்டிக்கிலோ வைக்க வேண்டும்.
உலர்ந்த மலக்கழிவுகளைக் காகிதப் பையில் வைத்து சீல் செய்து விடவேண்டும். நுண்ணோக்கியில் பார்க்கப்பட வேண்டிய தடயங்களை 10% பார்மலின் கலவையில் வைப்பது நல்லது. தாவர டி.என்.ஏ.வை கண்டுபிடிக்கக் குளிர்விப்பான்களில் தாவர தடயங்களை வைப்பது நல்லது. வெளிப்புறங்களில் நடைபெறும் குற்றங்களுக்குத் தாவரத் தடயங்களை விரைவாகச் சேகரிக்க வேண்டும்.
ஏனெனில் காலநிலைகளினால் தடயங்கள் மாற்றங்கள் அடைந்தோ, அழிந்தோ விடலாம். செருப்புகள், ஷூக்கள் போன்றவற்றிலும் தாவர தடயங்களைச் சேகரிக்கலாம். முடிந்தால் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
தடய மகரந்தவியல்
மகரந்த துகள்கள் மிக நுண்ணியமானவை. மிக அதிக அளவில் எண்ணிக்கைக்கு அடங்காத அளவில் உற்பத்தி செய்யப்படக் கூடியவை. புற ஊதாக்கதிர்களால் பாதிக்கப்படாதவை. விரைவில் அழுகக்கூடியவை அல்ல. குற்றச் செயல்கள் நடந்த இடங்களைக் கண்டறிய உதவக்கூடியவை.
தடய அறிவியல் துறை
தமிழ்நாட்டில் சென்னை மயிலாப்பூரில் காமராஜர் சாலையில் தமிழக தடய அறிவியல் துறை செயல்பட்டு வருகிறது. இதன் கிளை ஆய்வகங்கள் தமிழகம் முழுவதும் ஒன்பது இடங்களில் உள்ளன. இவை தவிர கிட்டத்தட்ட 34 நடமாடும் தடய அறிவியல் ஆய்வகங்களும் ; உண்டு.
இந்தத் தடய அறிவியல் துறையில் அறிவியல் அறிஞர்களாகப் பணிபுரிய விரும்புவோர் முது அறிவியல், குறிப்பாக இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயர்வேதியியல், நுண்ணுயிரியல், உயிரியல் அல்லது தடய அறிவியல் படித்திருக்க வேண்டும்.
இப்பதவிகள் தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் நிரப்பப்படுகின்றன. தடய அறிவியல் பட்டப் படிப்பு, முதுகலைப் பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகள் தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களால் நடத்தப்படுகின்றன.