Wednesday 25 September 2013

குரூப் 1 உட்பட புதிய தேர்வுகள் எதற்கும் அறிவிப்பு இல்லை


முடங்குகிறதா டி.என்.பி.எஸ்.சி?

அரசுத் துறைகளில் ஏற்படும் காலியிடங்களை, உடனுக்குடன் பெற்று, தேர்வுகளை நடத்தி, வேலை வாய்ப்புகளை அளிக்க வேண்டிய டி.என்.பி.எஸ்.சி., அமைப்பு, முடங்கும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. நடப்பு ஆண்டிற்கான தேர்வு கால அட்டவணையில் இடம்பெற்றுள்ள குரூப்–1 உட்பட எந்த தேர்வுகளுக்கும் அறிவிப்புகள் வெளியாகவில்லை.

29 ஆயிரம் வேலை:கடந்த ஆண்டு, துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட குரூப்–1 பதவிகளில் மட்டும், 116 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. குரூப்–4, குரூப்–2 பணியிடங்கள் உட்பட,29 ஆயிரம் வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டன.ஆனால், இந்த ஆண்டு, இதுவரை, 300 வேலை வாய்ப்புகள் கூட அளிக்கப்படவில்லை என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது நடவடிக்கையில் உள்ள குரூப்–4, குரூப்–2 தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளும், கடந்த ஆண்டு தேர்வு கால அட்டவணையில் அறிவிக்கப்பட்டவை.

இந்த ஆண்டு, இதுவரை, குரூப்–1 தேர்வு அறிவிக்கப்படவில்லை. அரசுத் துறைகளில், துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட குரூப்–1 பணிகள், மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஆண்டுதோறும், பட்டப்படிப்பை முடித்து, 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வெளியேறுகின்றனர். இவர்கள், 
குரூப்–1, குரூப்–2 தேர்வை பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.ஆனால், குரூப்–1 பதவிகளுக்கான காலி பணியிடங்களை, அரசுத் துறைகளில் இருந்து கேட்டுப் பெறுவதில், டி.என்.பி.எஸ்.சி., அக்கறை காட்டவில்லை என, கூறப்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள், முதல்வர் மற்றும் தலைமை செயலரை சந்தித்து, வேலை வாய்ப்புகளை அதிகம் அளிக்க வேண்டியது குறித்தோ, காலி பணியிடங்களை கேட்டுப் பெறுவது குறித்தோ விவாதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

பதவி உயர்வு:அரசுத் துறைகளில், உள்ள காலி பணியிடங்களில், 1:2 என்ற அளவில், நியமன முறை வகுக்கப்பட்டுள்ளது. அதாவது, இரு பணியிடங்கள், பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டால், ஒரு பணியிடம், நேரடி போட்டித் தேர்வு மூலம் நிரப்ப வேண்டும். இந்த நடைமுறை,தற்போது, முற்றிலும் கடைபிடிக்கப்படுவதில்லை எனவும், அனைத்து காலி பணியிடங்களையும், பதவி உயர்வு மூலமே நிரப்பிவிட்டால், படித்து வேலையற்று இருக்கும் இளைஞர்களின் எதிர்காலம் என்ன ஆவது என்றும், போட்டித் தேர்வர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகளே ஆர்வம் காட்டாததால், அரசுத் துறைகள், நமக்கென்ன என்ற மனோ நிலையில் இருக்கின்றன. குறிப்பாக, வருவாய்த் துறையில் இருந்து தான், கணிசமான 
காலி பணியிடங்கள் வரும். ஆனால், இதுவரை, குரூப்–1 காலி பணியிட பட்டியலை, தேர்வாணையம் பெறவில்லை என, கூறப்படுகிறது.வழக்கமாக, தேர்வு அறிவிப்பை வெளியிட்டு, முதல்நிலை தேர்வை நடத்தி முடித்திருக்க வேண்டும். ஆண்டு முடியப்போகும் நிலையில், இதுவரை அறிவிப்பே வரவில்லை. குரூப்–2, குரூப்–4, குரூப்–6 உட்பட எந்த தேர்வுகளுக்கும், நடப்பு ஆண்டு அறிவிப்பு இல்லை.தேர்வு கால அட்டவணைப்படி, குரூப்–2 நிலையில், 789 பணியிடங்களுக்கு, கடந்த ஜூலை மாதம், அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும். செப்., 1ம் தேதி தேர்வு நடத்தி, அக்டோபரில், தேர்வு முடிவை வெளியிட்டிருக்க வேண்டும். அக்டோபரிலேயே, நேர்முகத் தேர்வும் நடத்த வேண்டும். ஆனால், இதற்கான எந்தஅறிகுறியும் இல்லை.நடராஜ், தலைவராக இருந்தபோது, 2013–14ம் ஆண்டிற்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார். 

24 வகையான தேர்வுகள் முடக்கம்:

அதில், குரூப்–1, குரூப்–2 உட்பட, 24 வகையான தேர்வுகளும், அந்த தேர்வுகளுக்கான அறிவிப்பு தேதி, தேர்வு தேதி, முடிவு வெளியிடும் தேதி என, அனைத்திற்கும் கால வரையறையை நிர்ணயம் செய்திருந்தார். இதில், குரூப்–1 நிலையில், 25 பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் மட்டும் நடக்கின்றன. மற்ற தேர்வுகளை நடத்த, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த விவகாரத்தில், முதல்வர் தலையிட்டால் மட்டுமே, தேர்வாணையம், மீண்டும் வேகம் பெறும். இல்லையெனில், ஒரு கட்டத்தில், முற்றிலும் முடங்கிவிடும் அபாயம் உள்ளதாக, துறை வட்டாரங்கள் எச்சரிக்கை மணியை அடித்துள்ளன.

No comments:

Post a Comment