Sunday 21 April 2013

உதைபடும் பூமி பந்து


அனைத்து உயிரினங்களும் வாழத் தகுதியான ஒரே கிரகம் நாம் வாழும் பூமி மட்டுமே. அப்படிப்பட்ட பூமி, இன்று பருவநிலை மாற்றம் காரணமாக பல்வேறு பாதிப்புகளை சந்திக்கிறது. வருங்கால சந்ததியினரும் வாழ வேண்டுமெனில் பூமியை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம். இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, சர்வதேச பூமி தினம் ஏப். 22ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அமெரிக்காவின் சுற்றுச்சூழல் ஆர்வலர் "கைலார்ட் நெல்சன்' என்பவரின் தீவிர முயற்சியால், 1970ல் இத்தினம் தொடங்கப்பட்டது. தற்போது "எர்த் டே நெட்வொர்க்' அமைப்பில் 175க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன.
உருகும் அன்டார்டிகா :

பருவநிலை மாற்றத்தால் பூமியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பூகம்பம், சுனாமி,வெள்ளம், வறட்சி, பனிப்பாறை உருகுதல் போன்றவை அடிக்கடி நிகழ்கின்றன. ஒரு ஆய்வில், அன்டார்டிகாவில் 1000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது, பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இதற்கு அங்கு வெப்பநிலை அதிகரித்திருப்பதே காரணம். உலக தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியாகும் கரியமில வாயுவால், ஓசோன் படலம் பாதிக்கப்படுகிறது. ஓசோன் பாதிப்பதால், பருவநிலையிலும் மாற்றம் ஏற்படுகிறது. காற்று, நீர் மாசுபடுகிறது. 


தவிர்க்க என்ன வழி :

ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு மரம் வளர்க்க வேண்டும். அனைத்து வகை குப்பைகளையும் குறைக்க வேண்டும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மறுசுழற்சி பொருட்களை பயன்படுத்த வேண்டும். மின்சாரத்தை சேமிக்க வேண்டும். சி.எப்.எல்., பல்பை பயன்படுத்த வேண்டும். "பாலிதீன்' பயன்படுத்துவதை, குறைக்க வேண்டும். குறைந்த தூரம் செல்ல, மோட்டார் வாகன பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். மாசுக்களை கட்டுப்படுத்த வேண்டும். சூரிய ஆற்றலை அதிகம் பயன்படுத்தலாம். பெரிய தொழிற்சசாலைகள், தேவையான மின் சக்தியை சூரிய ஆற்றல், காற்றாலைகள் மூலம் பெறலாம். பாடப்புத்தகங்களில் சுற்றுச்சூழல் தொடர்பான பாடங்களை சேர்த்து, வருங்கால சந்ததியினர், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முறை பற்றி தெரிந்து கொள்ளச் செய்யலாம். 

No comments:

Post a Comment